தஞ்சை தரணியின் தன் நிகரில்லா மக்கள் தலைவர் தியாகி என். வெங்கடா சலம் தஞ்சைமாவட்டம் பூதலூர் ஒன்றியம் ராயமுண்டான்பட்டியில் வாழ்ந்த நடராஜ கொடும்புரார் என்பவரின்கடைசி மகனாக பிறந்து ஆதிக்க சக்திகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினராக, விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலை வராக திறம்பட செயல்பட்டவர், தஞ்சை மண்ணில் அவர் ஆற்றிய பணிகள் மக்கள் மனங்களில் என்றென்றும் நிலைத்து நிற்கிறது. அவர் வாழ்வும், மார்க்சிஸ்ட் கட்சியின் இலட்சியங்களை முன்னெடுத்து போராடியதும் இன்றைய தலைமுறை தலைவர்களுக்கு பாடமாக, முன்மாதிரியாக உள்ளது. அவர் வாழ்ந்த காலத்தில் செங்கொடி இயக்கம் அமரர் BSR அவர்களின் சீறிய வழிகாட்டுதலில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் முழுவதும் நிலபிரபுத்துவ சுரண்டலுக்கும் ஆதிக்க சக்திகளின் ஒடுக்குமுறைக்கும் உள்ளான மக்களை கிராமம், கிராமாக திரட்டி, நில உரிமையை, குத்தகைதாரரர் விவசாயிகளின் பாதுகாப்பை உறுதிசெய்த போராட்டங்களை நடத்தியது செங்கொடி இயக்கம் தீண்டாமை மற்றும் சாதிய ஒடுக்குமுறைக்குள்ளாகி தாழ்த்தப்பட்ட மக்கள் புழு பூச்சிகளை போல் அடிமைகளாய் நடத்தப்பட்டனர். தோளில் துண்டுபோட முடியாத முழங்காலுக்கு கீழ் வேட்டி கட்ட முடியாத செருப்பு அணிந்து செல்லமுடியாத, நிலம் வைத்திருக்க முடியாத, சுடுகாட்டிற்குகூட சாலை வசதியற்ற, சானிப்பால் சாட்டை அடியை வாங்கிக்கொண்டு ஆண்டைகளின் அடிமைகளாக வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்களை தலைநிமிர வைத்தது செங்கொடி இயக்கம் இப்படியான காலத்தில் தஞ்சாவூர் தாலுகா ராயமுண்டான்பட்டியில் ஆதிக்க சாதியில் பிறந்து ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதையை, விடுதலையை மீட்டெக்க செங்கொடி இயக்கத்தின் தலைகர்த்தராய் கலமாடியவர் தோழர் என்.வி. அவர் ஆற்றிய பணிகளில் சிலவற்றை நினைவு கூர்வது மக்கள் பணியில் ஈடுபடும் நம் எல்லோருக்கும் மேலும் உந்து சக்தியை ஏற்படுத்தும்.
தாழ்த்தப்பட்ட மக்களின் நாயகன்
தாழ்த்தப்பட்ட மக்கள் தன்னை பார்க்க வருபவர்கள் தரையில் உட்காந்தால் கண்டிப்பார், சமமாக அமரவைத்து மகிழ்வார் ஆதிக்க சாதியினர் தாழ்வாக பேசினாலோ, அடித்தாலோ நீயும் தலைநிமிர்ந்து பேசு அடித்தால் திருப்பி அடி என்று சொல்லிக்கொடுப்பார் தன் கவனத்திற்கு வரும் சம்பவங்கள் குறித்து நேரில் சென்று நியாயம் கேட்பார். ராயமுண்டான்பட்டி கிராமத்தில் சாதி இந்துக்கள் தெருவில் செருப்பு குடைபிடித்து செல்லக்கூடாது என்று இருந்த நிலை ஒரு நாள் வெளியூரில் இருந்து தாழ்த்தப்பட்ட ஒருவர் ராயமுண்டான்பட்டியில் உள்ள தனது உறவினரை பார்க்க சைக்கிளில் வந்துள்ளார் - சாதி இந்துக்கள் தெருவழியாக வரும்போது வழிமறித்து யார் என்று விசாரித்தனர் அவர் உண்மையை கூறியவுடன், கடுமையாகதாக்கி செருப்பு, குடை சைக்கிளை பிடுங்கி வைத்துக்கொண்டு அடித்து விரட்டியுள்ளனர். அவர் தப்பித்தோம் பிழைத்தோம் என என்.வி வீட்டிற்கு ஒடிபோய் கண்ணீரும் கம்பளமுமாய் தன் உறவினருடன் சென்று சம்பவத்தை கூறினார். கோபமடைந்த தோழர் என்.வி தன் செருப்பை அவரிடம் கொடுத்து போட செய்து தன் குடையையும் கொடுத்து அழைத்துக்கொண்டு சாதி இந்துக்கள் தெருவிற்கு செல்கிறார்.
சம்பவம் நடந்த இடத்தில் நின்றுக்கொண்டு எவன்டா இவரை அடித்தது ஆம்பிளையா இருந்தா வெளியே வாடா? உன்னை செருப்பால் அடிக்கிறேன் என்று உரத்த குரலில் பேசுகிறார்- அனைத்து வீட்டு கதவுகளும் சன்னல்களும் சாத்தப்படுகிறது எவரும் வெளியே வரத்துனியவில்லை - பின் வெளியூர்காரரின் துண்டு, செருப்பு குடை சைக்கிளும் கொண்டு வந்து கொடுக்கப்பட்டது . அத்தோடு அக்கிராமத்தில் மட்டுமல்ல இதர கிராமங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான இத்தகைய அட்டூழியங்கள் முடிவுக்கு வந்தன. இதுபோல் திருவையாறு தாலுகா கார்குடியில் சுடுகாட்டு பாதை வேண்டி நடத்திய போராட்டத்தை இன்றும் மக்கள் நினைவு கூறுவர் - சாதி இந்து தெருக்கள் வழியாக பிரேதம் செல்லக்கூடாது, வரப்புகளிலும் வயல்களிலும் இறங்கி நடந்து செல்லும் அவலம் இருந்தது தோழர் என்.வி இதற்கு ஒர் முடிவுக்கட்ட இறந்த பிரேதத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்வதென முடிவெடுத்து பிரேத ஊர்வலம் நடக்கிறது. நூற்றுக்கணக்கான காவலர்களுடன் வட்டாட்சியர் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தி தாழ்த்தப்பட்ட மக்கள் கோரியபடி பிரேதம் எடுத்துச்செல்லப்பட்டது. சுடுகாட்டிற்கான பாதையும் சாலையாக போடப்பட்டது கூலி போராட்டங்கள், நிலத்திற்கான போராட்டங்கள் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள், காவல்நிலைய அத்துமீறல்களை எதிர்த்த போராட்டங்கள் என எண்ணற்ற போராட்டங்கள் நடத்தி வெற்றிக்கண்டவர் மக்களின் நன்மதிப்பை பெற்றவர் தோழர் என்.வி.
பஞ்சாயத்து தலைவராக
ராயமுண்டான்பட்டியின் பஞ்சாயத்து தலைவராக 1959-ல் இருந்து மூன்று முறை இருந்தவர் அப்பகுதியில் பாதுகாக்கபட்ட குடிதண்ணீர் கிடையாது தேங்கிய குட்டைகளில் கிடக்கும் நீரை பாதுகாத்து தேத்தாக்கொட்டையை போட்டு அந்த தண்ணீரைத்தான் குடித்து வந்தனர். முதல் பணியாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்து குழாய்கள் பதித்து பஞ்சாயத்திற்குட்பட்ட குக்கிராமங்கள் அனைத்திற்கும் குடிதண்ணீர் வழங்கினார். 5-ம் வகுப்பு வரை இருந்த பள்ளிக்கூடத்தை தரம் உயர்தினார், வானொலி மன்றம் நூலகம், கூட்டுறவு சங்கம் கால்நடை மருத்துவ மனை ரேசன் கடை என அனைத்து அடிப்படை வசதிகளும் என்.வி காலத்தில் கொண்டுவரப்பட்டது. நிலமற்ற ஏழை தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தரிசு, புறம்போக்கு நிலங்களை விவசாய நிலங்களாக சீர்திருத்தி பயிர் செய்ய பட்டா வழங்கப்பட்டது. அப்பகுதி மக்களிடம் பெரும் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. நீதிமன்றங்களிலும் தன் வாதத்திறமையால் வெற்றிக்கண்டவர் மாரியம்மன்கோவில் கிராமத்தில் ஒரு குத்தகை விவசாயி சென்னையில் வசிப்பவர் நிலத்தை சாகுபடி செய்து வந்தார் அந்த விவசாயியை நிலத்தில் இருந்து அப்புறப்படுத்த அன்றை ரெவின்யூ கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. 1952 சாகுபடியாளர் பாதுகாப்பு சட்டம் செங்கொடி இயக்கத்தின் பேராட்டத்தால் தஞ்சை மாவட்டத்திற்கு மட்டும் என கொண்டுவரப்பட்டது பிற்காலத்தில் மாநில சட்டமாக மாற்றப்பட்டது. இதன்படி 6 ஙூ ஏக்கருக்கும் மேல் நிலம் சொந்தமாக வைத்திருப்பவர் தனது நிலத்தை சாகுபடி செய்பவரை நிலத்தை விட்டு வெளியேற்ற முடியாது.
இப்பின்னணியில் நடைப்பெற்ற வழக்கில் என்.வி. விசாரணையில் கலந்து கொண்டு விவசாயிக்காக வாதாடினர் நில உரிமையாளர் தனக்கு 4 ஏக்கர் நிலம் தான் எனக்கூறுகிறார். அவரைப் பார்த்து தங்கள் மனைவி யாருடன் இருக்கிறார் என்று கேட்கிறார் பதட்டமான சூழல் ஏற்படுகிறது எதிர்வழக்கறிஞர் சம்மந்தமில்லா கேள்வி என்கிறார். என்.வி சம்மந்தப்பட்ட கேள்விதான் என நீதிபதியிடம் கூறி அனுமதியுடன் மேற்கொண்டு விசாரிக்கிறார் உரிமையாளர் என்னுடன் தான் வசிக்கிறார் என்கிறார். அவர் பெயரில் உள்ள நிலம் எவ்வளவு எனக்கேட்கிறார் 6 ஏக்கர் என்கிறார் நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதால் ஓர் குடும்பம் தான் எனவே உங்கள் நிலத்தில் பயிர் செய்யும் குத்தகை விவசாயியை நிலத்தைவிட்டு வெளியேற்றக்கூடாது. மேலும் நீங்கள் அரசு ஊழியர் என்பதையும் நீதிபதிக்கு எடுத்துரைத்து நிலத்தை மீட்டு விவசாயிக்கு கொடுத்தார். இதுபோன்று ஏராளமான சம்பவங்கள், நீதிமன்றத்தில், காவல்நிலையத்தில் அரசு அலுவலகங்களில் நடைப்பெற்று பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாவலராக செயல்பட்டவர் என்.வி. ஏழை எளிய, தாழ்த்தப்பட்ட மக்களின் நம்பிக்கையின் சின்னமாக - ஆதிக்க காரர்கள், மோசடிக்காரர்கள், லஞ்ச ஊழலில் திளைத்தவர்கள் அவரைக்கண்டு நடுங்கினார்கள். நல்ல படிப்பாளி , வாதத்திறமையுள்ளவர் மக்கள் நலனே தனது மூச்சாக செயல்பட்டவர், அவர் வாழ்வே போராட்டமாக மாறியது மக்கள் மனம் நிறைந்த தலைவராக வாழ்ந்தார் - இதைப்பொறுக்க முடியாத எதிரிகள் 1977-ல் செப்டம்பர்21 ம் நாள் அவர் சோழகம்பட்டி ரயில் நிலையத்திலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் - கடத்தி கொண்டு சென்று கொலை செய்து எரித்து சாம்பலாக்கிவிட்டனர் என்.வி. தொலைந்தார் என்று கருதிய எதிரிகளுக்கு ஆயிரம் ஆயிரம் என்.விக்கள் பீனிக்ஸ் பறவையாய் எழுவார்கள் என்பது தெரியாது. தோழர் சீனிவாசராவ் காலந்தொட்டு தஞ்சை மன்னை சிவக்கச்செய்த செங்கொடி இயக்கத்தின் வீரத்தளபதிகளுள் ஒருவராய் ஜொலிக்கிறார் தோழர் என்.வி. இவரின் வாழ்வு வரலாறானது. இடது சாரி இயக்கத்திற்கும் மக்கள் ஜனநாயக இயக்கத்திற்கும் உத்வேகம் ஊட்டக்கூடிய பாடமாகும். நாடெங்கும், மதவெறி, சாதிவெறி மற்றும் பிரதேச வெறிகளால் உழைக்கும் மக்கள் கூறுப்போடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் என்.வியின் வீரவரலாறு மக்களை திரட்ட மகத்தான பாடமாகட்டும் என்.வி. பெயர் வாழ்க! என்.வி. புகழ் ஒங்குக !
ஆர்.மனோகரன்
தஞ்சை மாவட்ட செயற்குழு