tamilnadu

img

வீடுகள் அனைவருக்கும் விற்பனை : ஸ்ரீ ரங்கம் குடியிருப்பு நிர்வாகம் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி:
பிராமணர்களுக்கு மட்டும் என்று விளம்பரம் செய்திருந்த அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலையீட்டால் அனைவருக்கும் விற்கப்படும் என்று விற்பனையாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் பகுதியில் மேலூர் ரோட்டில் லெட்சுமி நகரில் அமைந்துள்ள (ஸ்ரீ சக்தி ரெங்கா) சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் விற்பனை என்ற விளம்பரத்தில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு பிராமின்ஸ்க்கு மட்டும் தான் விற்பனை என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தீண்டாமையின் நவீன வடிவமாகும். எனவே சொகுசு குடியிருப்பு வீடுகள் (ஓம் சக்தி கன்ஸ்ட்ரக்சன்) விற்பனையாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிந்து உரிய விசாரணை செய்ய வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் வினோத்மணி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருந்தார். இதனையடுத்து ஓம் சக்தி கன்ஸ்ட்ரக்சன் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது : ஸ்ரீரங்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு குறித்து கடந்த 20ஆம் தேதி நாளிதழ்களில் விளம்பரம் கொடுந்திருந்தோம். அதில் சைவம் மட்டும் என்பதற்கு பதிலாக பிராமின்ஸ் மட்டும் என தவறாக வந்து விட்டது. அதற்காக நிறுவனம் வருத்தமடைகிறது. வீடுகள் அனைவருக்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவித்திருந்தனர்

;