tamilnadu

இலந்த வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வாருக! சிபிஎம் வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, மே 14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளர் வினோத்மணி, திருச்சி ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:  திருச்சி பொதுப்பணித்துறை முக்கொம்பு பிரிவு அலுவலக பராமரிப்பில் இலந்தவாத்தலை வடிகால் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் கடியாக்குறிச்சி பகுதியில் உள்ள வாத்தலை நாச்சியம்மன் கோவில் அருகில் தொடங்குகிறது. கடியாக்குறிச்சி, அல்லூர், பழூர், கனவனூர், முத்தரசநல்லூர், மேக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாய விளை நிலங்களின் உபரி நீர் வடிவதற்கும், மழை காலங்களில் வெள்ள நீர் வடிவதற்கும் இந்த இலந்தவாத்தலை வடிகால் வாய்க்கால் பயன்பட்டு வந்தது. இலந்தவாத்தலை வடிகால் வாய்க்காலில் உபரி நீர் மற்றும் மழை நீர் விரைவாக வடிவதற்கு கனவனூர் பகுதியிலும், முருங்கப்பேட்டை பகுதியிலும் மதகுகள் அமைத்து உபரி நீர் காவிரியில் சென்று கலந்தும், அதற்கு மேல் வரும் உபரி நீர் கம்பரசம்பேட்டை வழியாக சென்று குடமுருட்டி ஆறும், கொடிங்கால் ஆறும் காவிரியில் சங்கமிக்கும் இடத்தில் கலக்கிறது.

இந்த இலந்த வாத்தலை வடிகால் வாய்க்கால் முழுவதும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து ஆக்கிரமிப்பாளர்கள் பல இடங்களில் வாய்க்காலை மூடியும் விட்டார்கள். இதனால் மழை காலங்களில் மழை நீர் வடியாமல் ஆங்காங்கே குட்டைபோல் தேங்கி கொசு புழுக்கள் உருவாகி பல மர்ம நோய்கள் உருவாக ஏதுவா கிறது. இந்த வாய்க்காலின் ஆக்கிர மிப்புகளை அகற்றி வாய்க்காலை தூர்வாரக் கோரி பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் நேரிலும், மனுக்கள் மூலமாகவும் கடந்த காலங்களில் பலமுறை தெரிவித்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளவே இல்லை. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என்றும், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் பற்றிய அறிக்கையை தாக்கல் செய்ய அனைத்து மாவட்ட ஆட்சி தலை வர்களுக்கும் உயர் நீதிமன்றம் கடந்த 18.1.2016 அன்று உத்தர விட்டுள்ளது. உயர்நீதிமன்றமும், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் எடுத்துரைத்தும் அதிகாரிகள் கவனம் செலுத்தாதது வேதனையளிக்கிறது.  தற்பொழுது மாநில நெடுஞ்சாலை துறையினர் திருச்சி– கரூர் நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணியை செய்து வருகின்றனர்.

இக்காலக் கட்டத்தில் உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் உத்தர விட்டுள்ளவாறு நீர் நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டுகிறோம். ஆகையால் இலந்தவாத்தலை வடிகால் வாய்க்காலை நில அளவையர் கொண்டு உடனே அளந்து வாய்க்காலின் எல்லையை நிர்ணயித்து மழை, வெள்ள காலங்கள் ஆரம்பிக்கும் முன்பே நடப்பாண்டு கோடையிலேயே தூர்வாரிட வேண்டுகிறேன் என அவர் மனுவில் கூறியிருந்தார்.