tamilnadu

img

தஞ்சாவூர்- திருச்சி இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம்

தஞ்சாவூர், செப்.27- தஞ்சாவூர்- திருச்சி இடையே 110 கிலோ மீட்டர் வேகத்தில் மின்சார ரயில் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர்- திருச்சி இடையே இரட்டை வழி அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு, அதில் தற்போது மின்மயமாக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. இந்த வழித்தடத்தில் ஜனசதாப்தி, செந்தூர் சூப்பர் பாஸ்ட் விரைவு ரயில்கள், சோழன், ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் மற்றும் 15 க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் மணிக்கு 95 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இதையடுத்து ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதற்காகத் தஞ்சாவூரிலிருந்து திருச்சி வரை இரண்டு பெட்டிகளுடன் கூடிய சிறப்பு சோதனை மின்சார ரயில் இயக்கப்பட்டது. இதில் தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பொறியாளர் கே.ரவிக்குமார் தலைமையில் பொறியாளர்கள், ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டனர். பகல் 12.20 மணிக்குத் தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயில் மதியம் 1 மணியளவில் திருச்சி ரயில் நிலையத்துக்குச் சென்றது. இதுகுறித்து ரவிக்குமார் கூறியதாவது: தஞ்சாவூர் -திருச்சி இடையே செல்லும் ரயில்களின் வேகம் தற்போது மணிக்கு 95 கிலோ மீட்டரில் செல்கிறது. இதனை 110 கிலோ மீட்டராக்க முடிவு செய்து அதற்கான சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. தஞ்சாவூரிலிருந்து திருச்சிக்கு எங்கும் இடையில் நிற்காமல் சென்றால் அரைமணி நேரத்தில் செல்லலாம், வேகம் அதிகரிக்கப்பட்டவுடன் 27 நிமிடங்களில் சென்றுவிடலாம், இந்தச் சோதனை முடிந்தவுடன் அதன்பிறகு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் என்றார்.

திருச்சி- தஞ்சாவூர் -காரைக்கால் இடையே மின்மயமாக்கும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டது. இதில் தஞ்சாவூர்- திருச்சி இடையே மின்சாரச் சோதனை ரயில் ஓட்டம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதன் பிறகு இதுவரை மின்சார ரயில் சேவை ஆரம்பிக்கப்படவில்லை. இந்நிலையில் வியாழக்கிழமை அன்று முதன்முறையாகத் திருச்சி, தஞ்சாவூர் வழியாக மின்சாரத்தில் இயங்கக் கூடிய சரக்கு ரயில் தஞ்சாவூர் ரயில் நிலையம் வந்தது. பின்னர்த் தஞ்சாவூரிலிருந்து டீசலில் இயங்கக் கூடிய ரயில் இன்ஜின் மாற்றிப் பொருத்தப்பட்டு காரைக்காலுக்குச் சென்றது.