கும்பகோணம், நவ.13 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அசூர் கிராமத்தில் அரசு விரைவு போக்குவரத்து பணிமனை சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு சாதாரண மற்றும் அதிநவீன பேருந்துகள், சுமார் 40 விரைவு பேருந்துகளின் பழுதை சரிசெய்ய சுமார் 150-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பணிமனையில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் பேருந்துகளுக்கும் எவ்வித பாதுகாப்பு இல்லை. மேலும், பணிமனை சுற்றுச்சுவர் இல்லாததால் எந்நேரமும் விஷ ஜந்துகள் நடமாட்டம் இருக்கிறது. பணிமனை மண் தளமாக இருப்பதால், மழைக் காலங்களில் குண்டும் குழியுமாக தண்ணீர் தேங்கி காட்சியளிக்கிறது. கோடை காலங்களில் புழுதிகள் பறந்து பணியாளர்களுக்கும் பேருந்துகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. தமிழக அரசு, மிதவை பேருந்து பிஎஸ் 2 போன்ற அனைத்து வசதிகளும் கூடிய அதிநவீன பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு விடும் போக்குவரத்து துறை, அதை பாதுகாப்பதற்குரிய இடமான போக்குவரத்து பணிமனையை சரி செய்ய வேண்டும். போக்குவரத்து பணிமனை தளத்தை சிமெண்ட் தளமாக மாற்றி அமைக்க வேண்டுமென பலமுறை கோரப்பட்டது. ஆனால் பணிமனை துவங்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. பழுது நீக்கிய பேருந்துகளை சுத்தம் செய்து, வெளி மாவட்ட - மாநிலங்களுக்கு அனுப்பும்போது பணிமனையில் ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் பேருந்துகள் மாட்டிக் கொள்கின்றன. இதனால் தொழிலாளர்கள் மிகவும் அவதிக்கு ஆளாகின்றனர். எனவே போக்குவரத்து துறை, கும்பகோணம் அரசு விரைவு போக்குவரத்து பணிமனை தளத்தை சிமெண்ட் தளமாக மாற்றி, சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்க வேண்டும். அதற்கான பணிகளை உடனே துவங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. - சரவணன்