புதுக்கோட்டை, செப்.14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முதுபெரும் தோழர் பெரி.குமாரவேலுவின் 90-ஆவது வயதில் 75 ஆண்டுகளுக்கும் மேலான சமூக சேவையைப் பாராட்டி புதுக்கோ ட்டையில் விழா நடத்தப்பட்டது. புதுக்கோட்டை தேசிய தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் நடைபெற்ற விழாவிற்கு துரை.மதிவாணன் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ரகுபதி, திமுக மாவட்டப் பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரி.குமாரவேல் குறித்த மலரை மருத்துவர் எஸ்.ராமதாஸ் வெளியிட, சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு பெற்றுக் கொண்டார். 90-ஆம் ஆண்டு பிறந்த நாளில் அவரது 75 ஆண்டு கால பொது வாழ்வில் தேச விடுதலை, அரசியல் நடவடிக்கைகள், சமூக நீதிப் போராட்டங்களில் பெரி.குமாரவேலுவின் பங்களிப்பைப் பாராட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், கம்பன் கழகச் செயலாளர் ரா.சம்பத்குமார், உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் சண்முக பழனியப்பன், சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் எம்என்.ராமச்சந்திரன், க.சதாசிவம், செம்பை மணவாளன், அஜாய்குமார்கோஷ், மிசா.மாரிமுத்து உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக எஸ்.ஆரோக்கியசாமி வரவேற்க, பி.ராசு நன்றி கூறினார். பெரி.குமாரவேல் ஏற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.