tamilnadu

img

உப்பாறு நீர்த் தேக்கத்திற்கு காவிரி நீர் 30 கிராம விவசாயிகள் கோரிக்கை

மண்ணச்சநல்லூர், ஆக.25- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகில் உள்ள தெற்கு சிறுப்பத்தூர் உப்பாறு நீர்த் தேக்கத்திற்கு காவிரியிலிருந்து உபரி நீரை கொண்டு வர மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது என 30 கிராம விவசாயிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  மழைக் காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது காவிரியில் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. அவற்றை தடுத்து வறட்சி பகுதி கிராமங்களுக்கு கொண்டு வருவது தொடர்பான இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் சா.அய்யம்பாளையத்தில் நடைபெற்றது. அதில் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் வருகை தந்த விவசாயிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் ஆலோசனை வழங்கினர்.  1980-ஆம் ஆண்டு உப்பாறு நீர்த் தேக்கம் அமைக்கப்பட்டது. 1995 மற்றும் 2006-ஆம் ஆண்டுகளில் நீர்த் தேக்கத்தில் நீர் நிரம்பி வழிந்தது. அதற்கு பிறகு சரியான மழை இல்லாததால் நீர்த் தேக்கம் வறண்டு போய் விட்டது. அந்த காலத்தில் தொடர்ந்து பருவ மழை பெய்ததால் கிணறுகளில் போதுமான நீர் கிடைத்தது.  ஆனால் பருவ மழை தொடர்ந்து பொய்த்து வருவதால் நீர் மட்ட அளவு உயர்ந்து கொண்டே போகிறது. ஆயிரம் அடிக்கு போர் போட்டாலும் தண்ணீர் வருவதில்லை. கிராம பகுதிகளில் நிறைய குளம், ஏரிகள் உள்ளன. மழைக் காலங்களில் காவிரியில் வெள்ளப்பெருக்கு நீர் நேரடியாக கடலுக்கு செல்கிறது. எனவே வீணாக கடலுக்கு செல்லும் உபரி நீரை காவிரியிலிருந்து வாய்க்கால் மூலம் திருத்தலையூர், புலிவலம், ஓமாந்தூர், தெற்கு சிறுப்பத்தூர் ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்படுத்தினால் விவசாய கிணறுகளின் நீர் மட்டம் உயரும். கால்நடைகள் வளர்ப்பதற்கும், குடிநீருக்கும் பிரச்சினை வராது. எனவே இதற்கான ஏற்பாடுகளை சா.அய்யம்பாளையம், தெற்கு சிறுப்பத்தூர், வீராணி, ஓமாந்தூர், பெரமங்கலம், கொணலை, இருங்களுர், கரியமாணிக்கம் உள்பட 30 கிராம விவசாயிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் ஒருங்கிணைந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுப்பது. ஒவ்வொரு கிராமத்திலும் கூட்டு இயக்க கிளைகளை துவங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. காவிரி உப்பாறு நீர்த் தேக்க இணைப்பு கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளராக ஜெயராமனும், இணை ஒருங்கிணை ப்பாளராக கணேசனும் தேர்வு செய்யப்ப ட்டனர். நிறைவாக கந்தசாமி நன்றி கூறினார்.