அம்மனாற்றில் பாலம், தெற்காற்றில் தடுப்பு சுவர் அமைத்திடக் கோரி ஆக்கூரில் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டம், சின்னங்குடி, தாழம்பேட்டை சின்னமேடு ஆகிய மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரத் திட்டமான அம்மனாற்றில் இருபுறமும் தடுப்பு சுவரோடு சேர்த்து தெற்கு ஆற்றில் தாழம்பேட்டைக்கு செல்ல இருபுறமும் கருங்கற்கள் சுவர் அமைத்துத்தர வலியுறுத்தி ஆக்கூர் முக்கூட்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் பொதுநல மன்றம், மக்கள் மசோதா கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அக்கட்சியின் தலைவர் மாயா வெங்கடேசன் தலைமையில் திங்களன்று நடைபெற்றது. பொதுச்செயலாளர் ரூபன், சின்னங்குடி, சின்னமேடு, தாழம்பேட்டை மீனவ கிராமங்களின் பஞ்சாயத்து தலைவர்கள் கலந்துக் கொண்டு கண்டன உரையாற்றினர். மீன்பிடித்தொழில் மட்டுமே பிரதானமாக உள்ள இக்கிராமங்களின் கடந்த 35 ஆண்டுகால கோரிக்கையை, சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக அறிவித்தும், கிடப்பில் போட்டுள்ளதாக குற்றம் சாட்டி நடைப்பெற்ற போராட்டத்தில், ஆயிரக்கணக்கான மீனவ கிராம மக்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டு கோரிக்கைகளை முழங்கினர்.