tamilnadu

img

திண்டுக்கல்லில் தற்காலிக காய்கறி  மார்க்கெட்டுகள் மூடப்பட்டன

திண்டுக்கல்:
தமிழகத்தில் கொரோனா  பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது . இதையடுத்து  திண்டுக்கல்லில் திண்டுக்கல் காந்தி மொத்த மார்க்கெட் மூடப்பட்டது. இதனையடுத்து ரவுண்ட் ரோடு, புதூர் மேட்டுப்பட்டி, நாகல் நகர், பேருந்து நிலையம் ஆகிய நான்கு இடங்களில் தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டது. தற்போது  இந்த மார்க்கெட் வைக்கப்பட்டுள்ள பகுதிகளை சுற்றி உள்ள ஊர்களில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள காரணத்தால் இந்த தற்காலிக காய்கறி மார்க்கெட் எல்லாம் அகற்றப்பட்டது.

மாநகராட்சி நிர்வாகம்  வாகனங்களில் அந்தந்த பகுதிகளுக்கு  காய்கறி களை அனுப்பி வைத்தது. ஆனால் மக்களுக்கு போதிய காய்கறிகள் கிடைக்கவில்லை மேலும் தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைக்க கோரி சிறுகுறு காய்கறி வியாபாரிகள் மாநகராட்சி நிர்வாகத்திடம் எடுத்துரைத்தனர். ஆனால் தற்போது காய்கறி மார்க்கெட் இல்லை என்பதால் அந்த சிறு குறு வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர்.

வேன்களில் காய்கறிகள் விற்பனை செய்வதற்கு ஏற்கனவே டோக்கன் பெற்ற சிறு குறு வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்காமல் புதிதாக வாகனத்துடன் வருபவர்களுக்கு காய்கறி விற்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்கிறது இதனால் காலங்காலமாக காய்கறி விற்றுவந்த வியாபாரிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

ஏற்கனவே இருந்த மொத்த வியாபார கடைகள் இழுத்து மூடப்பட்டு வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டது அந்த பகுதியிலும் சிறு சிறு வியாபாரிகள் கடை போடுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக விவசாயிகள் நேரடியாக தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகளை கூட கொண்டுவந்து விற்பனை செய்ய முடியாத சூழல் உள்ளது.  விவசாயிகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மாவட்ட  மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையின் காரணமாக மக்களுக்கு போதிய காய்கறிகள் கிடைக்காத நிலை உள்ளது .விவசாயிகளும் சிறு வியாபாரிகளும்  தங்களுக்கு தற்காலிக மார்க்கெட் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளனர்.