tamilnadu

img

திண்டுக்கல் மாவட்டத்தில் “கொடை” வள்ளல்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து ரத்த முகாம்களை நடத்தி ஒவ்வொரு ஆண்டும் ரத்தக் கொடையாளர் விருதை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தவறாது பெறுகிறது.  கொரோனா காலத்தில் கூட அரசு மருத்துவமனைகக்கு தேவையான ரத்தத்தை வாலிபர் சங்கம் வழங்கியது. மாவட்டத்தில் நடத்தப்படும் ஒவ்வொரு முகாமிலும் குறைந்தது 50 யூனிட் ரத்தம் வழங்கப்படுகிறது. திருநெல்வேலியில் படுகொலை செய்யப்பட்ட வாலிபர் சங்க நிர்வாகி அசோக் நினைவு தினம், புரட்சியாளர் சே குவேரா பிறந்ததினம் ஆகியவற்றை முன்னிட்டு ரத்ததான முகாம்கள் நடைபெற்றது. மாவட்டத்தில் திண்டுக்கல், குஜிலியம்பாறை, உலகம்பட்டி, சத்திரப்பட்டி, வடமதுரை, சாணார்பட்டி, பூத்தாம்பட்டி உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் ரத்த தான முகாம் நடைபெற்றது. ஜூன் மாதத்தில் மட்டும் 350 யூனிட் ரத்தம் கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. கடந்தாண்டு 500 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டுள்ளது. கொடுத்து கொடுத்து சிவந்த கர்ணனின் கைகள் போல சிவந்த ரத்தத்தை கொடுத்து கொடுத்து கொடையாளர்களாக மக்கள் மத்தியில் வலம் வருகிறார்கள் வாலிபர் சங்கத்தினர்.

ரத்தம் வேண்டும் என்றால் உடனடியாக வாலிபர் சங்கத்தை தொடர்பு கொள்ளும் அளவிற்கு வாலிபர் சங்கம் திண்டுக்கல் மாவட்டத்தில் பிரபலமாகி வருகிறது. இந்த இயக்கம் தொடர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம், சத்திரப்பட்டி சே குவேரா பிறந்த தினத்தை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சத்திரப்பட்டியில் ரத்த தான முகாம் வாலிபர் சங்கம் சார்பாக நடைபெற்றது. முகாமில் மாநிலத் துணைச்செயலாளர் சி.பி.போஸ், மாவட்டச் செயலாளர் பாலாஜி, மாவட்டத்தலைவர் விஷ்ணு, மாவட்டப் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆனந்த், வெங்கடேஷ், சிவக்குமார், ஆறுச்சாமி (விதொச) சத்திரப்பட்டி முன்னாள் ஊராட்சித்தலைவர் எம்.கருணாகரன், பழனி ரத்த வங்கிபொறுப்பாளர் டாக்டர் முருகேஷ், சத்திரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய பொறுப்பாளர் டாக்டர் கண்ணன், ஆகியோர் பங்கேற்றனர். முகாமில் 20 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது. இலமு, திண்டுக்கல்