tamilnadu

img

வளமான தமிழகம் வறட்சியால் வாடுகிறது... நீர்மேலாண்மைக்கான ஆலோசனைகளை புறந்தள்ளிய அதிமுக அரசு..

திண்டுக்கல்:
நீர்மேலாண்மைக்கான ஆலோசனை களை தமிழக அரசு புறந்தள்ளியதால், இன்றைக்கு வளமான தமிழகம் கடும் வறட்சியால் வாடுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார்.திண்டுக்கல் அருகேயுள்ள கோபால்பட்டியில் கட்சியின் சார்பாக நடைபெற்ற இளம் கம்யூனிஸ்ட்டுக்கள் பயிற்சி முகாமில் கலந்துகொண்ட கே.பாலகிருஷ்ணன் மாலையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:

தமிழ்நாடு கடுமையான குடிநீர் பஞ்சத்தை சந்தித்து வருகிறது. காவிரியில் தண்ணீர் திறந்துவிடாததால் டெல்டா மாவட்ட விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 
மழை வந்தாலும் கர்நாடக அரசு நமக்கு தண்ணீர் திறந்து விட மறுக்கிறார்கள். கிருஷ்ணராஜசாகர் அணை நிறைந்து, கபினி அணை நிறைந்து இன்னும் அங்குள்ள அனைத்து அணைகளும் நிறைந்தாலும் நமக்கு தண்ணீர் தருவதில்லை. அதிகப் படியான வெள்ளநீர் வந்தால் தான் திறக்கிறார்கள். வெள்ளநீர் வந்தால் திறப்பதற்கு தமிழகம் என்ன வடிகால் மாநிலமா?
காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவை கர்நாடக அரசு மதித்து தண்ணீர் திறக்க வேண்டும். 10 டி.எம்.சி. தண்ணீர் வந்தாலும், 50 டிஎம்சி தண்ணீர் வந்தாலும், 100 டி.எம்.சி. தண்ணீர் வந்தாலும் அதில் உள்ள பங்கை தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.

போராடிப் பெற்ற தண்ணீர் வீணாகும் அவலம் 
அதேவேளை, எவ்வளவு பெரிய போராட்டம், ஆர்ப்பாட்டம், மறியல் நடத்திகர்நாடக அரசை தண்ணீர் கேட்டு வற்புறுத்து கிறோம். உச்சநீதிமன்றத்திற்குப் போய் வழக்கு போட்டு தண்ணீர் வாங்குகிறோம். அப்படிப் போராடிப் பெறுகிற தண்ணீரை சேமித்து வைக்க நம்மிடம் ஏற்பாடு இருக்கிறதா? இந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த கடந்த ஆண்டு மட்டும் காவிரியில் 403 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. ஏனெனில் கர்நாடகாவில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. முறைப்படி பார்த்தால் நமக்கு 177 டி.எம்.சி. தண்ணீர் வர வேண்டும். ஆனால் அதற்கு மீறி நமக்குதண்ணீர் வந்துள்ளது. கர்நாடக அரசு நம்மீது மனம் இரங்கியோ, தாராளத்துடனோ கொடுக்கவில்லை. அதிகப்படியான மழை பெய்ததால் தேக்கி வைக்க முடியவில்லை. அதனால் திறந்துவிட்டார்கள்.  அப்படி திறந்து விட்ட 
தண்ணீர் எல்லாம் நேராக கடலுக்கு போய்விட்டது. முக்கொம்பில் கட்டப்பட்ட அணையின் ஒரு பகுதியும் உடைந்து போய்வி ட்டது. அங்கு தேங்கிய தண்ணீரும் கடலுக்கு போய்விட்டது. காவிரியில் இப்படி உபரியாக வரும் தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை.

சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் கோதாவரி அணையை கட்டி அந்த மாநிலத்தில் கடைசிப் பகுதி வரை வாய்க்கால் வெட்டி தண்ணீரை கொண்டு சென்று உள்ளனர். ஆந்திர அரசு தண்ணீரைத் தேக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. கர்நாடக அரசு தண்ணீரை தேக்க ஆண்டுக்காண்டு புதிய புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசு, காவிரி நீரை பிற பகுதிகளுக்கும் பயன்பெறும் வகையில் திருப்பிவிட திட்டமிட வேண்டும். காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம் எத்தனை ஆண்டுகளாக நாம் பேசிக்கொண்டே இருக்கிறோம். இந்த திட்டத்தை நிறைவேற்றி னால் திருச்சியிலிருந்து விருதுநகர் வரை இருக்கிற திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற மாவட்டங்களுக்கு காவிரி நீர் கிடைக்கிற வாய்ப்பு இருக்கிறது. அதையெல்லாம் ஆட்சியாளர்கள் செய்ய வில்லை. அதனால் மக்களை இந்த அரசாங்கம் குடிநீர் மற்றும் நீராதாரத்திற்காக அவதிப்பட வைத்துள்ளது. 

சென்னையில் தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம் 
நீராதாரத்தை சேமித்து வைக்காததன் விளைவு தான் நாம் இன்றைக்கு குடிநீரின்றித் தவிக்கிற நிலை உருவாகியிருக்கிறது. வந்தா ரை வாங்க என்று சொல்கிற பண்பாடுள்ள, கலாச்சாரமுள்ள  மாநிலம் தமிழ்நாடு. ஆனால்சென்னையில் குடிநீர் பிரச்சனையால் உறவினர்களைக் கூட இன்னும் ஒரு மாதத்திற்குஇங்கு வந்துவிடாதீர்கள் என்று சொல்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு குடும்பமும் ஒரு மாதத்திற்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை தண்ணீருக்காக செலவிடுகிறார்கள். மழை நீர் சேகரிப்பதற்கான கோட்பாடுகளை ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் மீறியதன் விளைவு இன்றைக்கு தண்ணீருக்கு மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். தமிழ்நாட்டுக்கு பெய்ய வேண்டிய மழை பெய்து கொண்டிருக்கிறது. ஆனாலும் தண்ணீர் பிரச்சனை ஏற்படுகிறது என்றால், ஆட்சியாளர்களின் தவறுகளும், அதிகாரிகள் திட்டமிடுதலில் ஏற்படுகிற கோளாறும் தான் காரணம். 

புதிய நீர்நிலைகளை உருவாக்கினீர்களா? 
நீங்கள் உங்கள் மாவட்ட ஆட்சியரிடம் போய்க் கேளுங்கள்  கடந்த 5 ஆண்டுகளில் உங்கள்  மாவட்டத்திற்கு புதிய நீர்நிலைகளை உருவாக்க நீங்கள் எவ்வளவு பணம் செலவு செய்தீர்கள்; ஏற்கனவே உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க எவ்வளவு செலவு செய்தீர்கள்; புதிய ஏரிகளை வெட்டுவதற்கு நீங்கள் எவ்வளவு பணம் செலவு செய்தீர்கள் என்று எல்லா திட்டங்களுக்கும் செலவு செய்திருப்பார். ஆனால் நீர்நிலைகளுக்காக செலவு செய்திருக்கமாட்டார். ஆட்சியாளர்கள்  ஏரியை தூர் வாரினார்களா? இல்லை. அதற்கான நிதியை வாருவதற்காக தூர்வாரினார்கள். ஏரியை தூர்வா ரும் பணி எப்போது தொடங்குவார்கள் தெரியுமா? மார்ச் மாதம் பட்ஜெட் போட்டுவிடுவார்கள். அடுத்த மார்ச் மாதம் வரை பட்ஜெட் நிதிஇருக்கும். ஏப்ரல் மே மாதங்களில் தூர்வாரமாட்டார்கள். செப்டம்பர், மழை ஆரம்பிக்கிற அக்டோபர் மாதங்களில் தான் ஏரியை தூர்வார துவங்குவார்கள். இவர்கள் தூர்வாரியமாதிரியும் இருக்கும் மழை பெய்து தண்ணீர் வந்து கரைந்தது மாதிரியும் இருக்கும். பிறகு எங்கு போய் தூர்வாரியதை அளவெடுப்பது? தூர்வாரும் பணியில் ஊழல் தான் நடந்தது. எத்தனை ஆயிரம் கோடி நீங்கள் தூர்வாரு வதற்காக ஒதுக்கினீர்கள்? கடந்த 5 ஆண்டுகாலத்தில் 15 ஆயிரம் கோடி ஒதுக்கியதாக அரசுஆவணம் சொல்கிறது. ரூ.15 ஆயிரம் கோடிக்குஉண்மையிலேயே தூர்வாரினீர்களா? குளங்களில் தூர்வாரி அங்குள்ள வண்டல் மண்ணையாவது அப்புறப்படுத்தி னீர்களா? தூர்வாருகிறோம் என்ற பெயரில் மொத்தமாக ரூ.15 ஆயிரம் கோடியையும் பங்கு போட்டுக்கொண்ட ஊழல் தான் நமக்குத் தெரிகிறது. 

வறட்சி நிவாரணம் கோராத தமிழக அரசு 
2017 மற்றும் 2018 ஆண்டு தமிழ்நாடு வறட்சியால் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று அரசு வறட்சி பாதித்த மாநிலமாக அறி விக்கிறது. அதற்கான அரசாணையும் போடப்பட்டு உள்ளது. 2017ம் ஆண்டு 30 மாவட்டங்கள் பாதிப்பு, 2018 ஆண்டு 24 மாவட்டங்கள் பாதிப்பு என்று தமிழக அரசு அரசாணையில் கூறியுள்ளது. இது குறித்து மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியது என்று ஒருவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேள்விஎழுப்பினார். அதற்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தமிழகம்வறட்சி பாதித்த மாநிலம் என்று அறிவித்து எங்களிடம் வறட்சி நிவாரணம் கேட்டு எந்த கடிதமும் வரவில்லை. என்பதுதான் அந்தப் பதில்.தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்துவிட்டு மத்திய அரசாங்கத்திடம் பணம் பெற வேண்டுமா? இல்லையா? அப்படிஒரு கோரிக்கையே வரவில்லை என்று மத்தியஅரசு சொல்கிறது. அப்படி என்றால் இந்தஅரசாங்கம் இந்த மக்கள் மீது எவ்வளவு அக்கறையோடு உள்ளது? குடிக்க தண்ணீர் இல்லை. ஆடுமாடுகளை வைத்துப் பாதுகாக்க முடியவில்லை. வருகிற ஜுலை 28ம் தேதி சட்டமன்றம் கூடுகிறது. 23 நாட்களுக்கு மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். ஆனால் வறட்சியைப் பற்றி என்ன திட்டமியற்றி விவாதிக்கப் போகிறீர்கள்? குடிநீர் பிரச்சனை பற்றி என்ன பேசப் போகிறார் முதல்வர்? நாங்கள் குடிநீருக்கு இவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளோம், வறட்சிக்கு இவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளோம் என்று இல்லாத விவரங்களை எல்லாம் தப்புத்தப்பாக எடுத்துச்சொல்லி கேள்விகளுக்கு பதில் சொல்லி மறைக்கப் பார்ப்பார் முதல்வர். உண்மை யிலேயே இந்த அரசு வறட்சி குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்கப் போகிறதா? எதிர்க்கட்சிகள்கூறும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறீர்களா? 

காவிரி, கொள்ளிடம் குறுக்கே அணை கட்டுங்கள் 
தமிழகத்தில் காவிரிப் படுகையில் மேட்டூரில் அணை உள்ளது. அதற்கு பிறகு கடைமடைப்பகுதி வரை அணையே இல்லை. கொள்ளிடத்தில் லோயர் அணைக்கட்டு உள்ளது. அதற்கு கீழே அணை இல்லை. காவிரிக்கு குறுக்கே 8 அணைகளைக் கட்டுங்கள். கொள்ளிடத்திற்கு கீழே  தண்ணீரை தேங்குங்கள். 10 கி.மீ தூரத்திற்கு ஒரு அணை யை கட்டினால் கொள்ளிடம் முழுவதும் தண்ணீரை சேமித்து வைக்க முடியும். கடலில் சேரும் தண்ணீரை சேமித்து வைக்க முடியும். திண்டுக்கல், விருதுநகர் வரை அந்ததண்ணீரை திருப்பி விட முடியும். இதனைசெய்யச் சொல்லி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக எத்தனை முறை சட்ட மன்றத்தில் பேசியிருப்போம். பாலபாரதி உள்ளிட்ட எங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கள் எவ்வளவு கோரிக்கைகளை வைத்திருக் கிறோம். அதையெல்லாம் அமைதியாக கேட்டார்களே தவிர செய்யவில்லை. இதே நிலை நீடித்தால் தமிழகத்தின் நிலைமை என்ன ஆகும்?இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி. ராணி, மாவட்டக்குழு உறுப்பினர் பி.ஸ்டாலின், என்.பெருமாள்,சாணார்பட்டி ஒன்றியச் செயலாளர் வெள்ளைக்கண்ணன், நத்தம்  ஒன்றியச் செயலாளர் சின்னக்கருப்பன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தமயந்தி, கள்ளக்கருப்பன்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். (நநி)