tamilnadu

குழந்தைகளுக்கு உப்பு சர்க்கரை கரைசலுடன் துத்தநாக மாத்திரை- மாவட்ட ஆட்சியர் தகவல்

தருமபுரி, ஜூன் 1-தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு உப்பு சர்க்கரை கரைசலுடன் துத்தநாக மாத்திரைகள் வரும் ஜூன் 8-ஆம் தேதி வரை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளர். இதுகுறித்து தருமபுரி மாவட்டஆட்சியர் எஸ்.மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பாக, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தும் முகாம் நடைபெற்று வருகிறது. வரும் ஜூன் 8 வரை நடைபெற உள்ள முகாமில்,ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 1,51,000 குழந்தைகளுக்கு உப்பு சர்க்கரை கரைசல் பொட்டலங்கள் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளுக்கு உப்பு சர்க்கரைகரைசல் பொட்டலங்களுடன்,துத்தநாக மாத்திரைகளும் வழங்கப்பட உள்ளன.அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், வயிற்றுப்போக்கினை தடுக்கும் சிகிச்சை முறை பற்றியும், கை கழுவும் முறை மற்றும் அதன் அவசியம், 6 மாதத்துக்குட்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். துத்தநாக மாத்திரையினால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படாது என்றார்.