தருமபுரி, நவ.12- காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் செவ்வாயன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு, சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியராக்கி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 63 ஆயிரம் காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம், பஞ்சப்படியுடன் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் தகுதியுள்ள ஆண் வாரிசுகளுக்கும் பணி வழங்க வேண்டும். ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வு கால பணப்பலன்களை வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் வழங்க வேண்டும் எனபன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.