சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி
சென்னை, நவ. 22 - ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கில் 15 நாட்களாகியும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை ஐஐடி-யில் படித்து வந்த மாணவி பாத்திமா லத்தீப் கடந்த 8ந் தேதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மலையாளிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் வெள்ளியன்று (நவ.22) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி கும்பளங்காடு உன்னிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது: பாத்திமா லத்தீப் தனது செல்போனில், தமது மரணத்திற்கு பேரா. சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட 3 பேராசிரியர்கள்தான் காரணம் என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் அதில் பல்வேறு தகவல்களை பதிந்து வைத்துள்ளார். இந்த மரணத்திற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றத்திலும் தமிழக எம்பி-க்களால் இந்தப் பிரச்சனை எழுப்பப்பட்டுள்ளது. இருப்பினும், மரணம் நிகழ்ந்து 15 நாட்களாகியும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
பாத்திமா லத்தீப் சிறுபான்மையினர் என்பதால் பேராசிரியர்கள் வெறுப்போடு பேசி தற்கொலைக்கு தூண்டினார்களா? அல்லது வேறு காரணமா என்பதையெல்லாம் துரிதமாக விசாரித்து வெளிப்படுத்தாமல் இருப்பது ஏன்? தமிழகத்தில்தான் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பி படிக்க வந்த மாணவி இறந்துள்ளார். அந்த வழக்கில் குற்றவாளிகள் யார் என்பது தெரிந்தும் கைது செய்யாமல் இருப்பது கேவலம் இல்லையா? பாத்திமா தற்கொலை தேசம் சந்திக்கும் மனித உரிமை பிரச்சனை. எனவே, வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாயமான முறையில் அரசு நடக்கவில்லை எனில், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து போராட வேண்டிய சூழல் உருவாகும். நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.