tamilnadu

img

அரசு போக்குவரத்துத் துறையில் துயரம் : நிர்க்கதியில் 47 ஆயிரம் பேர்

திண்டுக்கல், மே.27பாத்திரத்தில் உணவு இருந்தும் பசியாற்ற முடியாத நிலை எப்படியோ அப்படித்தான் அரசு போக்குவரத்துத் துறையில் தன் பங்கேற்பு ஓய்வு ஊதிய திட்டத்தில் சேர்ந்த தொழிலாளர்களின் சோகநிலை. புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்கினால் தொழிலாளர்களுக்கு பென்சன் கிடைக்காது. பழைய பென்சன் திட்டத்தையே அமலாக்க வேண்டும் என்று வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தால் போக்குவரத்துத் தொழிலாளர்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.  இது தொடர்பாக தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் ஏங்கெல்ஸ் என்பவர் சில தகவல்களைப் பெற்றுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- எம்.டி.சி. எனப்படும் சென்னை அரசுப் போக்குவரத்துத் துறையில் 15,374 தொழிலாளர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 38 பேர் மரணமடைந்து விட்டனர். 179 பேர் ஓய்வு பெற்றுவிட்டனர். இவர்களிடம் சிபிஎஸ் ஓய்வூதியத்திற்கு என பிடித்தம் செய்யப்பட்ட தொகை ரூ.392.33 கோடி. கோயம்புத்தூர் கோட்டத்தில் இந்தத் திட்டத்தில் 8,992 பேர் சேர்க்கப்பட்டனர். இவர்களிடம் பிடித்தம் செய்த தொகை ரூ.159.07 கோடி. 111 பேர் மரணமடைந்துவிட்டனர். 7 பேர் ஓய்வு பெற்றுவிட்டனர். திருநெல்வேலி கோட்டத்தில் 6,697 பேர் பணியில் சேர்ந்துள்ளனர். 208.61 கோடி ரூபாய் தொழிலார்களிடம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. சேலம் கோட்டத்தில் 4954 பேர் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். 118 பேர் மரணமடைந்துவிட்டனர். யாரும் ஓய்வு பெறவில்லை. 

தகவல் தர மறுப்பு

கும்பகோணம், நாகப்பட்டினம் கோட்டத்தில் 4,526 பேர் பணியில் சேர்ந்துள்ளனர். 89 பேர் மரணமடைந்துள்ளனர். 15 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். இவர்கள் யாருக்கும் எந்தப் பணமும் வழங்கப்படவில்லை. சேலம், கும்பகோணம், நாகப்பட்டினம் ஆகிய கோட்டங்களில் எவ்வளவு பிடித்தும் செய்துள்ளோம் என்ற தகவலை நிர்வாகங்கள் வழங்கவில்லை. ஆனால் யாருக்கும் ஓய்வூதியம் வழங்கவில்லை. இதே போல எஸ்.இ.டி.சி. கோட்டத்தில் எந்தத் தகவலும் வழங்கவில்லை. மதுரை கோட்டத்தில் இந்தத் திட்டத்தில் 3,574 பேர் பணியில் சேர்ந்துள்ளனர். இவர்களில்  79 பேர் மரணமடைந்துவிட்டனர். ஓய்வு பெற்றவர்கள் பட்டியல் கொடுக்கப்படவில்லை. திண்டுக்கல் கோட்டத்தில் 3,290 பேர் பணியில்  சேர்ந்துள்ளனர். 57 பேர் மரணமடைந்துவிட்டனர். ஒருவர் ஓய்வு பெற்றுள்ளார். விருதுநகர் கோட்டத்தில் எந்தத் தகவலும் தரவில்லை. திண்டுக்கல், மதுரை, விருதுநகர் என மூன்று கோட்டம் மற்றும் உப கோட்டங்களில் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த தொகை ரூ. 118.24 கோடி. விருதுநகர் மண்டல பொது தகவல் அலுவலர் கொடுத்த தகவலின்படி பணியில் சேரும் பொழுது நிரந்தர பணி உத்தரவு என்று யாருக்கும் வழங்கவில்லை. கும்பகோணம், நாகப்பட்டினம் மண்டல பொது தகவல் அலுவலர் வழங்கிய பதிலில் 2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களிடம் இருந்து பிடித்தம் செய்த தொகை மற்றும் அதற்கான வட்டி விபரங்களை வழங்க இயலாது. இந்தத் தொகை கழகக் கணக்கில் பராமரிக்கப்பட்டு வருவதாகத் தகவல் கொடுத்துள்ளார். இதே போல் சேலம் பொது தகவல் அலுவலர் கொடுத்த பதிலில் தனி நபர்கள் (தொழிலாளர்கள்) பற்றிய விவரங்கள் என்பதால் மூன்றாம் நபருக்கு அதாவது விண்ணப்பதாரருக்கு வழங்க இயலாது என்று மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு போக்குவரத்து துறையில் 1.4.2003 முதல் மொத்தம் 47,407 தொழிலாளர்கள்  தன் பங்கேற்புத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். 595 தொழிலாளர்கள் மரணமடைந்துவிட்டனர். 213 பேர் ஓய்வு பெற்றுவிட்டனர். கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் எவருக்கும் ஒரு பைசா கூட தமிழக அரசு வழங்கவில்லை என்பது வேதனையான ஒன்று. இறந்து போன போக்குவரத்து தொழிலாளியின் குடும்பங்களும், ஓய்வூதியமே வழங்காமல் ஓய்வளிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களும் எப்படி வாழும்? குறைந்த பட்ச தொகை கூட மாதம் தோறும் வழங்காமல் வஞ்சிக்கும் போக்கு இனியும் தொடரலாமா என்பதே நமது கேள்வி.

-இலமு, திண்டுக்கல்