tamilnadu

img

பெட்ரோ- கெமிக்கல் மண்டலமாக மாறும் காவிரி டெல்டா பகுதி

தரங்கம்பாடி, மே 17-காவிரி டெல்டா பகுதியை பெட்ரோ- கெமிக்கல் மண்டலமாக மாற்ற மத்திய, மாநில அரசுகள், விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி போலீஸ் படையுடன் வயல்களில் ஷேல் கேஸ் ராட்சச குழாய்கள் பதிக்கும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. நாகை மாவட்டம் சீர்காழி மாதானம் முதல் மேமாத்தூர் வரை சுமார் 30 கிமீ தொலைவுக்கு ஷேல் கேஸ் எடுத்துச் செல்ல ஓஎன்ஜிசி கெயில் நிறுவனம் ராட்சச குழாய்களை அமைக்கும் பணியில் கடந்த சில நாளாக ஈடுபட்டு வருகிறது. விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான காவலர்கள் துணையுடன் மிக தீவிரமாக குழாய்களை அமைத்து வருகிறது.காவிரி டெல்டா பகுதியில் தண்ணீரின்றி விவசாயம் கேளிவிக்குறியாகி வரும் நிலையில் மிச்சமிருக்கும் விவசாயத்தையும் முற்றிலும் அழிக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பெட்ரோ- கெமிக்கல் மண்டலமாக அறிவித்து இயற்கை வளங்களை கொள்ளையடித்துக் கொள்ள அனுமதியளித்துள்ளது. விவசாயத்தை பாதுகாக்க போராடுகிறவர்களை அடக்கி வழக்கு பதிவு செய்வது, மிரட்டுவது என்ற அடக்குமுறையால் விவசாயிகளில் பெரும்பாலானோர் போராட தயங்கும் நிலையில் ஷேல் கேஸ் எடுப்பதற்காக குழாய்களை பதிக்கும் பணியில் கெயில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. செம்பனார்கோவில் அருகேயுள்ள காளகஸ்திநாதபுரம், மேமாத்தூர் பகுதிகளில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நிலங்களை நாசமாக்கி தற்போது குழாய்களை அமைத்து வருகின்றனர். எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை கண்டு கொள்ளாமல் அடக்குமுறையோடு குழாய்களை பதிப்பதாகவும் உடனடியாக பணிகளை நிறுத்தவில்லையெனில் தொடர் போராட்டங்களை நடத்துவோம் என அப்பகுதி விவசாயிகள் கூறியுள்ளனர்.    (ந.நி.)


கெயில் நிறுவனத்தை கண்டித்து காளகஸ்திநாதபுரத்தில் சேறை பூசிக் கொண்டு  போராட்டம் நடத்திய விவசாயிகள்.