தமிழக மாணவர் சங்கத்தின் (டி.எஸ்.எப்.) முதல் மாநில மாநாடு 1968ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ந்தேதி மதுரை தமுக்கம் கலையரங்கில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மேற்குவங்க மாணவர் இயக்கத் தலைவர் பிமன்பாசு, கேரள மாணவர் சம்மேளனச் செயலாளர் விஜயன், கேரள மாணவர் இயக்க முன்னாள் தலைவர் பி.கோவிந்தபிள்ளை, தமிழக மாணவர் இயக்கத்தின் முன்னாள் தலைவர்கள் என்.சங்கரய்யா, கே.முத்தையா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் தோழர் இரா.நாராயணன் தமிழக மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான பிறகு நடைபெற்ற மாணவர் சங்க மாநாடு இது.
1969ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகமும் தீக்கதிர் பத்திரிகை அலுவலகம் சென்னையிலிருந்து மதுரைக்கு மாற்றம் செய்யப்பட வேண்டி வந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் வடக்கு சித்திரை வீதியில் மாநிலக்குழு அலுவலகமும் தீக்கதிரும் செயல்படத் துவங்கியது. கட்சியின் மாநிலக்குழு அலுவலகம் அருகில் மதுரை ஜெனரல் ஒர்க்கஸ் யூனியன் அலுவலகம் செயல்பட்டு வந்தது. அங்கிருந்துதான் மாணவர் சங்கத்தின் அலுவலகமும் செயல்பட்டது.
மாணவர் சங்க இயக்கப் பணி போக மீதி நேரங்களில் தீக்கதிருக்கு வந்து உதவி புரியுமாறு ஆசிரியர் தோழர் கே.முத்தையா நாராயணனைக் கேட்டுக் கொண்டார். ஆரம்பத்தில் பிழை திருத்தும் பணி அவருக்கு வழங்கப்பட்டது. தோழர் முத்தையா அவர்களுடன் தோழர்கள் ஆ.சண்முக சுந்தரம்(கப்பலோட்டிய தமிழர் வஉசியின் பேரன்), ஐ.மாயாண்டி பாரதி, சி.ஞானபாரதி(தற்போது கோவை வழக்கறிஞர்), தி.வரதராசன் ஆகியோர் இணைந்து செயல்பட்டனர். தலையங்கம், கட்டுரைப்பகுதிகளுக்கு தோழர் கே.முத்தையா சொல்லச் சொல்ல அதை எழுதும் பணி நாராயணனுக்கு வழங்கப்பட்டது. அதுவே அவருக்கு அரசியல் பள்ளியாகவும், பத்திரிகையாளருக்கான பயிற்சித் தளமாகவும் விளங்கியது.
தீக்கதிர் நாராயணன்
மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டங்களுக்குச் சென்று அந்த செய்திகளையும் பேச்சுக்களையும் எழுதித் தரும் பணியிலும் செய்தியாளராக தோழர் நாராயணன் ஆர்வமுடன் ஈடுபட்டார். அக்காலத்தில் தீக்கதிருக்கு நாராயணன் ஒருவர் மட்டுமே செய்தியாளராக செயல்பட்டார். அதன் பிறகு தீக்கதிர் நாராயணன் என்றே அவர் அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டார். மாணவர் சங்கப் பொறுப்புக்களிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு தோழர் நாராயணன் தீக்கதிர் ஆசிரியர் குழுவில் இணைந்து செயல்படத் துவங்கினார்.
1973ஆம் ஆண்டு நவம்பர் புரட்சி தினமான 7ஆம்தேதி தீக்கதிர் அலுவலகம் தற்போது இயங்கிவரும் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. கட்டிடத்தின் மாடியில் கட்சியின் மாநிலக்குழு அலுவலகமும், தரைதளத்தில் தீக்கதிர் அலுவலகமும் செயல்படத் துவங்கியது. 1975ஆம் ஆண்டு ஜுன் 25ஆம்தேதி ‘அவசரநிலை’ பிறப்பிக்கப்பட்டது. பத்திரிகைகளுக்கு கடுமையான தணிக்கை முறை அமலாக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தணிக்கை அதிகாரியின் தனிப்பிரிவு செயல்பட்டது. பத்திரிகையில் வெளியிட வேண்டிய செய்திகளை பிரதி எடுத்து தினசரி அதை தணிக்கை அதிகாரியிடம் காண்பித்து ஒப்புதல் பெற வேண்டும். அவசரநிலைக் காலத்தில் தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன், தீக்கதிர் ஆசிரியராக செயல்பட்டார். தணிக்கை அதிகாரியை எம்.ஆர்.வெங்கட்ராமன் அடிக்கடி சந்திக்க வேண்டி வந்தது. எழுதிக்கொடுக்கும் செய்தியின் கீழ் ‘ஆசிரியருக்காக’ என்று கையெழுத்துப் போட்டுக் கொடுக்க தோழர் நாராயணனுக்கு அப்போது அனுமதி வழங்கப்பட்டது.தினசரி 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த தணிக்கை அதிகாரி அலுவலகத்திற்கு நாராயணன் சைக்கிளில் சென்று வருவார். தணிக்கை செய்யப்பட்ட செய்திகள் ‘பிரசுரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது’ என்று ரப்பர் ஸ்டாம்ப் சீல் வைத்து தருவார்கள். ‘செய்தி வெளியிடக்கூடாது’ என்று சீல் வைத்தால் அதை பிரசுரிக்கக்கூடாது. இதில் தணிக்கை அதிகாரியின் ஆணவம்தான் தீர்ப்பாக இருக்கும். செய்திகள் தொடர்பாக நாராயணனுக்கும் தணிக்கை அதிகாரிக்கும் இடையில் வாக்குவாதம் நடப்பதுண்டு. ஒரு தடவை ‘இதையெல்லாம் பிரசுரித்தால் உங்களை வரிசையாக நிறுத்தி சுட்டுவிடுவேன்’ என்று அதிகாரி மிரட்டவும் செய்தார்.
தினந்தோறும் சிசேரியன்
பத்திரிகை பிரசுரிப்பது பிரசவத்திற்கு சமமானது. ஆனால் தீக்கதிரைப் பொறுத்தவரை தினந்தோறும் ஒரு சிசேரியனாக இருந்தது என்றுதான் கூற வேண்டும் என்று நாராயணன் அவசர கால சூழ்நிலையை நினைவு படுத்திக் கூறுவார். நெருக்கடியான காலத்தில் இரவு பகல் பாராமல் சளைக்காமல் தீக்கதிருக்காக உழைத்த அற்புதமான தோழர் நாராயணன்.தீக்கதிர் ஆசிரியர் குழுவில் இணைந்து பணியாற்றிய போதும், செய்தியாளராகவும் அவர் திறம்பட செயல்பட்டார். தீக்கதிர் விளம்பரப் பிரிவிலும் சில காலம் பணியாற்றியுள்ளார். மதுரை மாவட்டத்தின் மூத்த பத்திரிகையாளராக செயல்பட்ட நாராயணனுக்கு அனைத்து கட்சி தலைவர்களுடனும் நெருங்கிய பழக்கம் உண்டு. மதுரையில் செயல்பட்ட கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு வருகை தரும் தலைவர்களுக்கு நேரம், காலம் பாராமல் உடனிருந்து உதவி செய்வார். 1968ல் உதயமான தமிழக மாணவர் சங்கத்திலும் பிறகு தீக்கதிர் பணிகளிலும் அவருடன் இணைந்து பணியாற்றிய நினைவுகள் பசுமையானவை. நோய்வாய்ப்பட்டு வீட்டில் இருக்க வேண்டிய தருணம் வரைக்கும் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டது போல சுறுசுறுப்பாக செயல்பட்டவர். சோர்வு ஒரு போதும் அவரை நெருங்கியதே இல்லை. சிரித்த முகமும், இனிய சொல்லும் என்றுமே அவருக்குச் சொந்தம்.
அரசியல் பணிகளோடு கட்சித் தோழர்களுக்கு பலவகையிலும் உதவி செய்தவர். கல்வி, மருத்துவம் உள்ளிட்ட எந்தத் தேவையாக இருந்தாலும் அனைவருக்கும் இன்முகத்துடன் உதவி செய்தவர். தீக்கதிர் நாராயணன் பழகிய தோழர்களின் நெஞ்சங்களில் என்றும் நீங்கா இடம்பெற்றவர். தோழர் நாராயணன் தந்தை முன்னணி ராமசாமி,தாயார் சீதாலெட்சுமி அம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் கட்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள்.