ராபர்ட் மெர்டான் எனும் அமெரிக்க சமூக ஆய்வாளர் 1948ம் ஆண்டு “சுயபூர்த்தி செய்து கொள்ளும் நயவஞ்சக பொய்க் கணிப்பு” (self fulfilling prophecy) எனும் ஒரு கருத்தாக்கத்தை உருவாக்கினார். இன்னும் தெளிவாக இதனை “நயவஞ்சக பொய்க் கணிப்பு” என அழைத்தால் தவறாகாது. இந்த கருத்தாக்கத்தை மெர்டான் எப்படி வரையறுக்கிறார்? ஒரு பொய்யான நயவஞ்சக கணிப்பை கட்டியமைத்தல்; பின்னர் இதன் மூலம் சில நிகழ்வுகளை விளைவித்தல்; இந்த நிகழ்வுகளை தமது வஞ்சகக் கணிப்புக்கு நிரூபணங்களாக முன்வைத்தல்; அதன் மூலம் பொய்யான வஞ்சகக் கணிப்பை உண்மை என கருத்தாக்கம் உருவாக்குதல். இதுதான் மெர்டான் முன்வைக்கும் விளக்கம்.
சுயநல தீர்க்க தரிசனம்- சில உதாரணங்கள்
கேம் ஆஃப் துரோன்ஸ் (Game of Thrones) எனப்படும் புகழ் பெற்ற ஆங்கில தொலைக்காட்சி கற்பனை தொடரில் செர்சி எனப்படும் வஞ்சக பெண்ணரசிக்கு அவளது இளையசகோதரன் டிரையான் மூலம்தான் ஆபத்து வரும் என தீர்க்கதரிசனம் கூறப்படுகிறது. ஆனால் இது முற்றிலும் பொய்யான நயவஞ்சக பொய்க் கணிப்பு உண்மையிலேயே தனது சகோதரி நயவஞ்சகம் நிறைந்தவளாக இருந்தாலும் டிரையான் அவளை மிகவும் நேசிக்கிறான். உயரம் குறைவான டிரையானை செர்சி கொல்ல முயற்சிக்க அவன் தப்பித்துவிடுகிறான். இயற்கையிலேயே அவன் செர்சியின் எதிரிகளிடம் தஞ்சம் அடைகிறான். பின்னர் அவனின் ஒவ்வொரு செயலும் தனக்கு கூறப்பட்ட நயவஞ்சக பொய்க் கணிப்பை நிரூபிப்பதாக செர்சி எண்ணுகிறாள். இதைப்போன்ற உதாரணங்கள் அனைத்து தேசங்களின் இலக்கியங்களிலும் பரவி கிடக்கின்றன. தனக்கு தரப்பட்ட நயவஞ்சக பொய்க்கணிப்பை உண்மை என நம்பும் கம்சன் தேவகியை சிறைவைத்து அவளது குழந்தைகளை கொல்வதும் பின்னர் தேவகியின் எட்டாவது குழந்தையான கிருஷ்ணரால் கம்சன் கொல்லப்படுவதும் மகாபாரத உதாரணம்.எனினும் ராபர்ட் மெர்டான் ஒரு வாழ்வியல் உதாரணத்தை முன்வைக்கிறார். ஒரு வங்கி ஆரோக்கியமாக இலாபத்துடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வங்கியின் வணிக எதிரிகள் தமது சுயநலனுக்காக இந்த வங்கி குறித்து வதந்தியை பரப்புகின்றனர். வங்கி நட்டத்தில் தத்தளிப்பதாகவும் முதலீட்டாளர்களின் பணம் திரும்பி வருவது சந்தேகமே எனவும் வங்கி திவாலாகிவிடும் எனவும் பரவலான வதந்தியை உருவாக்குகின்றனர். இதனை உண்மை என நம்பிய முதலீட்டாளர்கள் பலர் ஒரே நேரத்தில் வங்கி மீது படையெடுத்து தமது முதலீட்டை கேட்கின்றனர். வேறு வழியில்லாமல் முதலீடுகளை திரும்பத் தரும் வங்கி உண்மையிலேயே திவாலாகிவிடுகிறது! சுயநலனுக்காக முன்வைக்கப்பட்ட ஒரு பொய்யான நயவஞ்சகக் கணிப்பு விளைவித்த செயல்களால் அது உண்மையாகிவிடுகிறது.
மோடியின் வெற்றியும் சிறுபான்மையினரின் அச்சமும்!
இத்தகைய பொய்யான நயவஞ்சகக் கணிப்பை ஒரு இனம் அல்லது மக்கள் குழுவுக்கு எதிராக முன்வைத்தால் அதன் சங்கிலித் தொடர் விளைவுகள் மிகவும் ஆபத்தானதாக இருக்கும் எனவும் ராபர்ட் மெர்டான் எச்சரிக்கிறார். இத்தகைய சுயநல நயவஞ்சகக் கணிப்பின் மோசமான விளைவுகள் அடங்கிய சமூக பொறிவலைக்குள் முஸ்லிம்கள் சிக்கிவிடுவார்களோ எனும் ஐயம் சிலரால் எழுப்பப்
படுகிறது. மோடியின் தலைமையிலான பா.ஜ.க. மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ளது முஸ்லிம்கள் மற்றும் கிறித்துவ மக்களிடையே பெரும் அச்சத்தை விளைவித்துள்ளது எனில் மிகை அல்ல. பா.ஜ.க. வென்ற தொகுதிகள் அதிகரித்துள்ளன என்பது மட்டுமல்ல; வாக்கு விகிதமும் 31%லிருந்து 39% வரை உயர்ந்துள்ளது. பல வட இந்திய மாநிலங்களில் 50%க்கும் அதிகமாக வாக்குகளை பா.ஜ.க. பெற்றுள்ளது. அதன் வாக்கு சராசரியை வீழ்த்தியது தமிழகம், கேரளா, பஞ்சாப், ஆந்திரம் போன்ற சில மாநில மக்கள்தான்! முதல் ஐந்து ஆண்டுகளில் சிறுபான்மை மக்கள் மீது பாசிச சங்பரிவாரத்தால் நடத்தப்பட்ட தாக்குதல்களை மோடிஅரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. எனவே அடுத்த 5 ஆண்டுகள் எப்படி இருக்குமோ எனும் கவலை சிறுபான்மை மக்களிடையே தோன்றியுள்ளது.
வாழ்வியல் பிரச்சனைகளை பின்னுக்குத் தள்ளிய தேசிய வெறி!
தேர்தலுக்கு முன்பு விவசாய நெருக்கடி, வேலையின்மை, தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள், விலைவாசி உயர்வு, பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி நடவடிக்கைகள் மூலம் சிறு தொழில்கள் பாதிப்பு என பல வாழ்வாதார பிரச்சனைகளில் மக்கள் சிக்கி துன்புற்று வந்தனர். மறுபுறத்தில் அம்பானி, அதானி, அஜீஸ் பிரேம்ஜி, மிட்டல், பதஞ்சலி பாலகிருஷ்ண ஆச்சார்யா போன்ற கார்ப்பரேட் குழுமங்கள் அபரிமிதமான கொள்ளை இலாபம் வளைத்ததும் மக்களின் கோபத்தை அதிகரிக்கவே செய்தது. எனினும் தேர்தல்களில் இது ஒப்பீட்டளவில் பிரதிபலிக்கவில்லை. மாறாக இந்து மதமும் இந்துக்களும் ஆபத்தில் உள்ளனர்; இதற்கு காரணம் ஆயிரம் ஆண்டுகளாக இங்கு படையெடுத்த முஸ்லிம் மன்னர்கள்; அவர்கள் செய்த அல்லது செய்யாத தவறுகளுக்கு இன்றைய முஸ்லிம்கள் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள்; நம்மை தாக்க பாகிஸ்தான் முயல்கிறது; இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள்; மேலும் உலகத்தில் உள்ள ஒரே பயங்கரவாத குழுக்கள் முஸ்லிம்கள் மட்டும்தான்; எனவே அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் எனும் கருத்தாக்கம் வலிமை பெற்றது. மேலும் கிறித்துவர்கள் இந்துக்களை மதமாற்றம் செய்து வருகின்றனர். அவர்களின் செயல் அனுமதிக்கப்பட்டால் இந்துக்கள் சிறுபான்மை ஆகிவிடுவார்கள். எனவே முஸ்லிம்களுக்கும் கிறித்துவர்களுக்கும் எதிராக ஒரு வலிமையான தலைவர் தேவை; அவர்தான் மோடி எனும் கருத்து இந்து மக்களின் ஒரு பிரிவினரிடையே ஆழமான தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. இந்த கருத்து உருவானதற்கு புல்வாமா தாக்குதலும் பாலகோட் பதில் தாக்குதலும் ஒரு முக்கிய பங்கை ஆற்றின எனில் மிகை அல்ல.
சங்பரிவாரத்தின் நயவஞ்சக பொய்க்கணிப்பு
முஸ்லிம்களால் இந்து மதம் அழிந்துவிடும் என்பது சங்பரிவாரம் முன்வைக்கும் ஒரு நயவஞ்சக பொய்க்கணிப்பு ஆகும். எனினும் இது கணிசமான சாதாரண இந்துக்களிடையே ஏன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது? இந்த கருத்தாக்கத்தை வலுவாக உணர்வில் திணிக்க சங்பரிவாரம் கடந்த 800 முதல் 1000 ஆண்டு வரலாற்றின் சில நிகழ்வுகளை பொறுக்கி எடுத்து அதன் மீது பலமான பொய்களை கட்டி எழுப்பி அதுவே உண்மை என திரும்பத்திரும்ப கூறுகிறது. மத்திய காலத்தின் 800 முதல் 1000 ஆண்டுகள் இந்து மதத்திற்கும் இஸ்லாத்திற்கும் முரண்பாடுகள் மட்டுமே இருந்தன என கருத்தாக்கம் உருவாக்க முயல்கிறது. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது. சங்பரிவாரம் கூறும் இந்த காலகட்டத்தில் முரண்பாடுகள் மட்டுமல்ல; இந்து மற்றும் இஸ்லாம் மதங்களிடையே ஒற்றுமையும் இருந்தது. கோவில்களை அழித்ததற்கு கஜினி முகம்மது உதாரணம் எனில் கோவில்களை பாதுகாத்ததற்கு அக்பரும் திப்புசுல்தானும் உதாரணம்! இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக இஸ்லாத்தின் தலைமையகமான காலிஃபின் அதிகாரத்தை புறக்கணிக்கவும் முன்வந்தார் அக்பர். இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்து அவற்றின் மேன்மையை இந்திய எல்லைக்கு அப்பாலும் கொண்டு சென்றவர் அக்பர். ஜஹாங்கீரின் தாய் ஒரு இந்து ராஜபுத்திர பெண்மணி; ஜாஹாங்கீரின் முதல் மனைவி ஒரு இந்து ராஜபுத்திர பெண்; இந்த திருமணம் இந்து மற்றும் முஸ்லிம் ஆகிய இரு முறைகளிலும் நடந்தது; ஷாஜகானின் தாய் ஒரு இந்து; இளவரசர்தாராகேஷு இந்து மதத்தை காதலித்தார். அவருக்கும் அவுரங்கசீப்புக்கும் இடையே உருவான சகோதர முரண்பாடுகளின் பல காரணங்களில் இதுவும் ஒன்று! மறுபுறத்தில் விஜயநகர மன்னர்களும் மராட்டிய வீரர் சிவாஜியும் முஸ்லிம்களுக்கு மசூதிகளை கட்டிக் கொடுத்தனர். பாமினி சுல்தானுக்கும் சிவாஜிக்கும் கடும் போர்கள் நடந்தன. அப்பொழுது சுல்தானின் படைத்தளபதிகளில் பலர் இந்துக்கள்; அதே போல சிவாஜியின் படைத்தளபதிகளில் பலர் முஸ்லிம்கள்.
கொடுத்தும் பெற்றும் கொண்ட இந்து முஸ்லிம் கலாச்சாரம்
இந்து மதம் தனது கலாச்சார பண்பாட்டுக் கூறுகளிலிருந்து சிலவற்றை இஸ்லாமுக்கு கொடுத்தது. இஸ்லாமிடமிருந்து சில கூறுகளை பெற்றுக்கொண்டது. இந்த ஒற்றுமையின் விளைவுகள் பல கட்டிட கலைகளிலும் உடைகளிலும் இசை மற்றும் பாடல்களிலும் வெளிப்பட்டன. இந்த நெகிழ்வான தன்மைதான் முக்கிய வெளிப்பாடாக இருந்தது. இந்த ஒற்றுமையை அந்த காலத்திலேயே உடைக்க சில முஸ்லிம் சன்னி வெறியர்களும் மறுபுறத்தில் சில இந்து வெறியர்களும் முயலவே செய்தனர். ஆனால் பெரும்பாலான நேரங்களில் அவர்கள் வெற்றி பெறவில்லை. இந்த உன்னதமான வரலாற்றை திரித்து முஸ்லிம்களை இந்துக்களின் எதிரிகளாக கட்டமைப்பதுதான் சங்பரிவாரத்தின் முக்கிய நோக்கம் ஆகும். மோடி ஆட்சி அதற்கு ஒரு பொருத்தமான வாய்ப்பு என சங்பரிவாரம் கருதுகிறது. முதல் 5 ஆண்டுகளில் இந்த திசைவழியில் பல சோதனை முயற்சிகள் செய்யப்பட்டன. அவை நல்ல பலன்களை அளித்துள்ளதாக சங்பரிவாரம் கணக்கு போடுகிறது. அடுத்த 5 ஆண்டுகள் இந்த பாசிச செயல்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் ஆபத்து உள்ளது என்பதை மறுக்க இயலாது.
தவிர்க்கப்பட வேண்டிய எதிர்வினை!
மோடியின் இந்த வெற்றி மூன்றுவிதமான எதிர்வினைகளை முஸ்லிம்களிடையே உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. அவை:
♦ பெரும்பாலான முஸ்லிம்கள் மத ஒற்றுமையை விரும்பும் இயக்கங்களை சார்ந்து இருக்க தலைப்படுவர்.
♦ ஒரு சிறு பகுதி மோடியிடம் சரணாகதி அடைய முற்படுவர். ஏற்கெனவே ஷியா பிரிவு முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் அவ்வாறு சரணடைந்துள்ளனர். பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமர் கோவில் கட்டுவதில் தவறு இல்லை என இவர்கள் வாதிடுகின்றனர்.
♦ இன்னுமொரு சிறுபகுதி பயங்கரவாதம் பக்கம் கவனம் திருப்பும் ஆபத்து உள்ளது. ஐ.எஸ்./தலிபான் ஆகிய அமைப்புகளின் பயங்கரவாதச் செயல்கள் சிறுபகுதியினரான இவர்களை ஈர்க்கும் ஆபத்தை உதாசீனம் செய்ய இயலாது.
மூன்றாவது நிகழ்வுதான் சங்பரிவாரத்தின் நயவஞ்ச பொய்க்கணிப்பை உண்மையாக்கும் ஆபத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையினர் இந்த பேராபத்தில் ஈடுபட்டாலும் அது ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களுக்கும் கேடாகவே முடியும். இதுதான் சமீபத்திய இலங்கை குண்டு வெடிப்புகள் தரும் மிக கசப்பானபடிப்பினைகள் ஆகும். இந்த திசைவழியில் நடக்கும் ஒரு சிறுசெயலும் கூட சங்பரிவாரத்தின் பொய்யான நயவஞ்சகக் கணிப்பை உண்மையாக்கும் ஆபத்து உள்ளது. மிகப்பெரும்பாலான முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை வெறுக்கின்றனர். எனினும் இந்த ஆபத்து தொடக்கத்திலேயே கண்டறியப்படுகிறதா? அது தடுக்கப்படுகிறதா என்பதுதான் மிகப்பெரிய சவால்மிக்க கேள்வியாகும். சுமார் 60%க்கும் அதிகமான மக்கள் மோடிக்கு எதிராக வாக்களித்துள்ளனர். அவர்களில் பெரும்பான்மையோர் இந்துக்கள்தான். பாசிச சங்பரிவாரம் சிறுபான்மை மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல; இந்துக்களிலேயே பிற்படுத்தப்பட்டவர்கள்/தலித்/ஆதிவாசி மக்களுக்கும் எதிரானது. வர்ணாசிரமத்தையும் சாதிய அமைப்பையும் இன்றும் ஆதரிக்கும் அமைப்புதான் சங்பரிவாரம். மேலும் தமிழ் பண்பாடு கலாச்சாரம் உட்பட பல தேசிய இனங்களின் தனித்துவத்திற்கு எதிரான அமைப்பு சங்பரிவாரம் ஆகும். சங்பரிவாரத்திற்கு எதிராக ஒரு பரவலான சமூக கூட்டணி உருவாவது என்பது அவசியத்தேவை என்பது மட்டுமல்ல; சாத்தியமானதும் கூட! மறுபுறத்தில் வாழ்வியல் பொருளாதார பிரச்சனைகளுக்கும் வலுவாக இயங்க வேண்டிய தேவை உள்ளது. இந்த இயக்கங்களின் அடிப்படையில் உருவாகும் ஒற்றுமைதான் சங்பரிவாரத்தின் சுயநல நயவஞ்சக பொய்க்கணிப்பை பொய்யாக்கும் வல்லமை படைத்தது.
ஆதாரம்: 1) ஆஜாஸ் அஷ்ரஃப் தி வயர் மின் இதழில் எழுதிய கட்டுரை 2) Self fulfilling Prophecy /Robert K Merton 3.The Sociology Everyone Knows: The Self-Fulfilling Prophecy/ By Jonathan Wynn