1948 - தலைநகரை டெல்-அவிவிலிருந்து ஜெருசலே மிற்கு மாற்றுவது என்று இஸ்ரேலிய சட்டமன்றமான (க்)நெஸ்ஸெட் தீர்மா னித்தது. 1947 நவம்பர் 29இல் நிறை வேற்றப்பட்ட பாலஸ்தீனத்துக்கான ஐநா பிரிவினைத் திட்டம், ஜெருசலேம், பெத்ல கேம் உள்ளிட்ட பகுதியை பன்னாட்டுக் கட்டுப்பாட்டிலுள்ள தனிப் பகுதியாக(கார்ப்பஸ் செப்பரேட்டம்) வைத்துக்கொண்டு, மக்கள்தொகையில் 32 சதவீதமாயிருந்த யூதர்களுக்கு 52 சதவீத நிலப்பரப்பை அளித்துவிட்டு, எஞ்சியதே பாலஸ்தீனமென்றும் அறிவித்தது. அரேபியர்கள் பிரிவினையையே ஏற்கத்தயாராக இல்லாத நிலையில், யூதர்களுக்கு மிகஅதிக நிலப்பகுதி ஒதுக்கப்பட்டதும் சினமேற்படுத்த, கொண்டாட்ட மனநிலையிலிருந்து யூதர்களுடன் ஏற்பட்ட மோதல்கள் வன்முறையாக வெடித்து, 1947 நவம்பர் 30இலிருந்து, 1949 ஜூலை 20வரை நடைபெற்ற பாலஸ்தீனப் போராக வும் மாறின. ஜெருசலேமிற்கு பன்னாட்டு நிர்வாக அமைப்பினை உருவாக்க முயற்சி யெதனையும் இங்கிலாந்து மேற்கொள்ளவில்லை என்பதுடன், இந்த வன்முறைகளை யும் தடுக்காமல், 1948 மே 14இல் பாலஸ்தீனத்தைவிட்டு வெளியேறிவிட்டது.
இங்கிலாந்து வெளியேறியதும், பாலஸ்தீனப் போரின் ஒருபகுதியாக, இஸ்ரேலுக்கும், அரபு நாடுகளின் கூட்டமைப்பிற்குமிடையே 1948 மே 15இலிருந்து, 1949 மார்ச் 10வரை நடை பெற்ற முதல் அரபு-இஸ்ரேலியப்போரின் இறுதியில் ஜெருசலேமின் மேற்குப்பகுதியை இஸ்ரேலும், புனித இடங்களடங்கிய பழைய நகரம் உள்ளிட்ட கிழக்கு ஜெருசலேமை ஜோர்டானும் கைப்பற்றின. இப்படியான சூழ்நிலையில்தான் தங்கள் தலைநகரத்தை ஜெருசலேமுக்கு மாற்றுவதாக இஸ்ரேலிய சட்டமன்றம் முடிவெடுத்தது. 1950இல் ஜெருசலேமை ஜோர்டான் தன் பகுதியாக மாற்றிக்கொண்டதுடன், 1953இல் தனது இரண்டாவது தலைநகரமாகவும் அறிவித்தது. எகிப்துக்கு ஆதரவாக ஜோர்டான் இஸ்ரேலைத் தாக்கியதைத் தொடர்ந்து, எஞ்சிய ஜெருசலேமையும் இஸ்ரேல் கைப்பற்றிக்கொண்டது. போர் முடிந்து மூன்று வாரங்களில், கிறிஸ்தவ, முகம்மதிய புனித இடங்கள் அடங்கிய கிழக்கு ஜெருசலேமை, மேற்கு ஜெருசலேமுடன் இணைத்து விட்ட இஸ்ரேல், 1980இல் ஜெருசலேம் சட்டம் என்பதை இயற்றி இணைப்பைச் சட்டப் பூர்வமாக்கியது. இச்சட்டம் செல்லாதென்று ஐநா கூறினாலும், இஸ்ரேலால் ஆக்கிர மிக்கப்பட்ட பாலஸ்தீனியப் பகுதியென்று கிழக்கு ஜெருசலேமை உலகநாடுகள் கூறினா லும், பாதுகாப்புத்துறைதவிர, சட்டமன்றம், உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நிர்வாக அமைப்புகளையும் ஜெருசலேமிற்கு மாற்றிவிட்டது இஸ்ரேல்!
- அறிவுக்கடல்