tamilnadu

img

குரூப் 4 தேர்வில் தவறான கேள்வி

குரூப் 4 தேர்வில் தவறான கேள்வி கேட்கப்பட்டுள்ளது. தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து தவறான கேள்விக்கான சலுகை மதிப்பெண் வழங்கப்படுமா என்ற கேள்வி தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர் , தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கும், கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்குமான குரூப் 4 தேர்வு ஞாயிறன்று நடைபெற்றது. 6419 காலியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் மூலம் நடத்தப்பட்டது . மாநிலம் முழுவதும் இருந்து 5575 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 13 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதினர். இந்நிலையில் இந்த தேர்வில் தவறான கேள்வி ஒன்று கேட்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.  பொது அறிவுப்பிரிவில் 185 வது கேள்வியாக தகவலறியும் உரிமைச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள் என கேட்கப்பட்டுள்ளது. ஆனால் கொடுக்கப்பட்ட 4பதில்களில் கேள்விக்கு சரியான பதில் கொடுக்கப்பட வில்லை. இந்த மசோதா 2004 ம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு மக்களவையில் மே 11ம் தேதியன்றும் மாநிலங்களவையில் 2005 ம் ஆண்டு மே 12ம் தேதியன்றும் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து 2005 ஜூன் 15ல் குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமானது. பின்னர் அரசிதழில் 2005 ஜூன் 21ல் வெளியிடப்பட்டு 2005 அக்டோபர் 12ம் தேதி முதல் சட்டம் நடைமுறைக்கு வந்தது. 
அப்படியானால் சட்டம் நடைமுறைக்கு வந்த தேதியைத்தான் கேள்விக்கான விருப்பத் தேர்வு விடைகளில் ஒன்றாக (டி) கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகவல் அறியும் உரிமைச்சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் என்றுதான் கேள்வி கேட்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தகவல் அறியும் உரிமைச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள் எனத் தவறுதலாக கேள்வி கேட்கப்பட்டுள்ளது. 
எனவே தவறாக கேட்கப்பட்ட கேள்விக்கு சலுகை மதிப்பெண் வழங்கப்படுமா என்று எதிர்பார்ப்பு தேர்வர்களிடையே எழுந்துள்ளது.