tamilnadu

img

மணலில் தலையை புதைத்துக் கொள்ளும் மோடி அரசாங்கம்! - அ. அன்வர் உசேன்

இந்தியா சந்திக்கும் கடும் பிரச்சனைகளில் ஒன்று விசுவரூபம் எடுத்துவரும் வேலையின்மை ஆகும். கோடிக்கணக்கான இளம் ஆண்களும் பெண்களும் படித்துவிட்டு வேலை பெற முடியாமல் தவிக்கின்றனர். இந்த சூழலில் நெருக்கடி காரணமாக தொழிலாளர்களை பலநிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக வீழ்ச்சியை சந்திக்கும் முறைசாரா தொழில்களும் விவசாயமும் ஏற்கெனவே கடும் வேலை யின்மையை தோற்றுவித்துள்ளன. தற்போதைய நெருக்கடி யும் இணைந்து வேலையின்மை பூதாகரமாக உருவெடுத்து உள்ளது.

சமீபத்திய வேலை இழப்புகள்

கடந்த சில தினங்களாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகள்:
 

  • பிஸ்கட் தயாரிக்கும் பார்லே நிறுவனம் 10000 ஊழியர்கள் ஆட்குறைப்பு.
  • மாருதி நிறுவனம் 3000 நிரந்தரமற்ற தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பியது.
  • நிசான் கார் உற்பத்தி நிறுவனம் 1700 ஊழியர்களை நீக்கியது.
  • இரு சக்கர வாகனங்கள் உட்பட மோட்டார் வாகன துறையில் 2,30,000 பேர் வேலை இழப்பு.
  • இரயில்வே 3,00,000 ஊழியர்களை குறைக்க திட்டம்.
  • வட இந்திய பஞ்சாலை உற்பத்தியாளர் சங்கம் பொருளாதார நெருக்கடி தொடர்ந்தால் தமது துறையில் மட்டும் 3 கோடி பேர் வேலை இழக்கும் ஆபத்து உருவாகும் என அபாயச்சங்கு.
  • காக்னிசண்ட், சிஸ்கோ போன்ற மென்பொருள் நிறுவனங்களும் ஊழியர் எண்ணிக்கை குறைக்க திட்டம்.
  • ஸ்டார்ட் அப் திட்டத்தில் தொடங்கப்பட்ட ஒயோ ஓட்டல்/ ரிவிகோ/ ஷாப் க்ளூ போன்ற நிறுவனங்களும் ஆட்குறைப்பு.
  • திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களும் கோவை இஞ்சினியரிங் நிறுவனங்களும் கடும் பாதிப்பு. ஏராளமான ஊழியர்கள் மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் வேலை இழப்பு.

இப்படி இந்த பட்டியல் முடிவில்லாமல் நீள்கிறது. 

நாம் ஒரு முக்கிய அம்சத்தை நினைவில் கொள்வது  மிக அவசியம். அது என்னவெனில் ஏற்கெனவே பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி காரணமாக உருவான ஆனால் பெரிதும் ஊடகங்களில் பேசப்படாத முறைசாரா மற்றும் சிறு தொழில் வேலையின்மை பெரிய எண்ணிக்கையில் உள்ளது. இப்பொழுது கூடுதலாக உருவாகியுள்ள வேலையின்மை கொடுமை இது ஆகும்.

மோடி அரசாங்கத்தில் உருவான வேலையின்மை

சிஎம்ஐஇ (CMIE) எனும் ஆய்வு நிறுவனம் 2018ம் ஆண்டு கடைசி காலாண்டில் மட்டும் 1.1 கோடி பேர் வேலை இழந்துள்ளனர் என கூறுகிறது.  இதில் 91 லட்சம் பேர் கிராமப்புற உழைப்பாளிகள். இவர்களில் 77 லட்சம் பேர் பெண்கள். மேலும் மொத்த உழைப்பாளிகளில் சுமார் 74% பேர் வேலையின்மை எனும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர் எனவும் ஆய்வு அறிக்கை கூறுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் உருவான வேலையின்மையின் கொடுமையை கீழ்கண்ட விவரங்கள் தெளிவாக்குகின்றன:

                                                                                                           2017                2018           2019

வேலை இல்லாதவர்கள்                                                   2.4கோடி    3.4கோடி    4.5கோடி

20-29 வயதினர் வேலை இல்லாதவர்கள்               1.78கோடி    2.2கோடி    3.07கோடி

வேலை இல்லாத பெண்கள்                                               16.7%             21.8%            27.1%

கடந்த இரண்டு ஆண்டுகளில் 2 கோடி பேர் வேலை இழந்துள்ளனர் வேலை இல்லாத 4.5 கோடி பேரில் சுமார் 1.1 கோடி பேர் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • விவசாயத்துறை (மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகள்) அளிக்கும் வேலை வாய்ப்புகள் 2005ம் ஆண்டில் 25.88 கோடியாக இருந்தது. ஆனால் 2018ம் ஆண்டில் இது 19.73 கோடியாக குறைந்துவிட்டது. இருப்பினும் தேசத்தில் உள்ள வேலைவாய்ப்புகளில் 42% விவசாயத் துறையில்தான் உள்ளது. 
  • இந்தியா முழுதும் குறிப்பாக பெரு நகரங்களில் கட்டப்பட்ட 12 இலட்சம் வீடுகள் விற்பனை ஆகாமல் தேங்கியுள்ளன. கட்டுமானத்துறை 2005ம் ஆண்டு 1.89 கோடி வேலைவாய்ப்புகளை அளித்தது. ஆனால் 2018ம் ஆண்டு இது வெறும் 16 லட்சமாக சரிந்துவிட்டது. இதில் மிக அதிகம் பாதிக்கப்பட்டது வடமாநில தொழிலாளர்கள்தான். எனவேதான் அவர்கள் தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு படையெடுக்கின்றனர்.
  • ஆலை உற்பத்தி துறையில் 2012-2018 ஆண்டு களுக்கிடையே சுமார் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன.
  • கடந்த 6 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு சந்தையில் நுழையும் உழைப்பாளிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 1.75 கோடி பேர். ஆனால் வேலை பெறுபவர்களோ வெறும் 45 லட்சம் பேர். அதாவது வேலை வாய்ப்பு சந்தைகளில் நுழையும் 4 பேரில் ஒருவர்தான் வேலை பெறுகிறார். மீதி  3 பேர் அதாவது 75% பேர் வேலைவாய்ப்பை பெற முடியவில்லை.

இந்த கடுமையான சூழலை எப்படி எதிர்கொள்வது என்பதே மோடி அரசாங்கத்திற்கு தெரியவில்லை. அதற்கான திட்டமும் இந்த அரசாங்கத்திடம் இல்லை. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில் இத்தகைய நெருக்கடி உள்ளது என்பதையே இந்த அரசாங்கம் அங்கீகரித்ததாக தெரியவில்லை. வேலையின்மை மட்டுமல்ல; ஒட்டு மொத்த பொருளாதர நெருக்கடியிலும் மோடி அரசாங்கம் இதே போலவே செயலற்று உள்ளது.

நெருக்கடியின் மையமான அம்சம் என்ன?

இந்த கடுமையான பிரச்சனைகள் குறித்து மோடி அல்லது அமித்ஷா அல்லது வேறு எந்த அமைச்சரும் பேசுவது இல்லை. முஸ்லீம்களை தனிமைப்படுத்த குடிமக்கள் தேசிய பதிவேடு/ மொழி மற்றும் கலாச்சார திணிப்பு/ அறிவியலுக்கு பொருந்தாத வாய் சவடால்கள்/இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்தல் ஆகியவற்றில்தான் இவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். பொருளாதார நெருக்கடிகளை திசை திருப்புவதற்கு முயல்கின்றனர்.   கடந்த காலத்தில் மோடி படாடோபமாக அறிவித்த ‘மேக் இன் இண்டியா’/ ‘ஸ்கில் இண்டியா’/ ‘ஸ்டார்ட் அப் இண்டியா’/ சிறுதொழிலுக்கான முத்ரா திட்டம் போன்ற எந்த திட்டமும் வெற்றி பெற இயலவில்லை. ஏன் என கேள்வி எழுப்பி அதனை பரிசீலனை செய்ய மோடி அரசாங்கம் தயாராக இல்லை.

நெருக்கடியின் மையமான அம்சம் மக்களிடம் வாங்கும் சக்தி வீழ்ச்சி அடைந்திருப்பதுதான். ஆனால் இதனை மோடி அரசாங்கம் உணரமறுக்கிறது. மாறாக பிரச்சனை மறுபுறத்தில் உற்பத்தி செய்யும் துறையில் இருப்பதாக மதிப்பீடு செய்து அதற்கான நிவாரணங்களை அறிவித்து வருகிறது. கார்ப்பரேட்டுகளுக்கு வரி சலுகைகள், கடனுக்கான  வட்டி குறைப்பு, வாராக்கடன் தள்ளுபடி என பல சலுகைகள் அளிக்கப்படுகின்றன.  மக்களிடம் பணம் இல்லை எனில் அவர்கள் எப்படி பொருட்களை வாங்குவர்? மக்கள் வாங்கவில்லை எனில் பொருட்கள் எப்படி விற்பனை ஆகும்?  உற்பத்தி செய்யப் பட்ட பொருட்கள் விற்பனை ஆகவில்லை எனில் எந்த முதலீட்டாளர் மீண்டும் அதனை உற்பத்தி செய்வார்? உற்பத்திக்கான தேவை இல்லை எனில் எந்த முதலீட்டாளர் வங்கியில் கடன் வாங்குவார்? முதலீட்டாளருக்கு கடன் வாங்க முகாந்திரம் இல்லை எனில் வங்கிகள் கடன் வட்டியை குறைத்து என்ன பயன்? இந்த சாதாரண கேள்விகளை கூட  எழுப்பி விடை காண மோடி அரசாங்கம் தயாரக இல்லை. கார்ப்பரேட் நலனை குறியாக கொண்டுள்ள எந்த அரசாங்க மும் இத்தகைய கேள்விகளை எழுப்ப முன்வராது!

என்ன செய்ய வேண்டும்?

உழைப்பாளிகளின் கைகளில் பணத்தை புழங்க வைப்பது இன்றைய முக்கிய தேவை ஆகும். இதற்கு சிறந்த வழி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுதான். தனியார் துறையினர் தமது மூலதனத்திற்கு சரியான இலாபம் இல்லாததால் முதலீடு செய்ய மறுக்கின்றனர். ‘மயிலே மயிலே இறகு போடு’ என மோடி அரசாங்கம் அவர்களை கெஞ்சி கொண்டுள்ளது. இத்தகைய சூழல்களில் அர சாங்கமே முதலீடு போடவும் செலவழிக்கவும் முன்வர வேண்டும். முதலில் கிராமப்புறங்களில் மகாத்மா காந்தி வேலை வாய்ப்புக்கு வழங்கும் முதலீட்டை பல மடங்கு உயர்த்த வேண்டும். இன்றைக்கு மோடி அரசாங்கம் மொத்த உற்பத்தி (ஜி.டி.பி)யில் 0.2% மட்டுமே இதற்கு ஒதுக்கீடு செய்கிறது. 2010ம் ஆண்டு இது 0.6 ஆக இருந்தது. குறைந்த பட்சம் அந்த அளவிற்காவது உயர்த்த வேண்டும். இது கணிசமான கிராமப்புற உழைப்பாளிகளின் கைகளில் பணத்தை சேர்க்கும்.

கிராமப்புறத்தை போல நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும். இந்த கோரிக்கையை இடதுசாரிகள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். சட்டம் மற்றும் கொள்கை ஆய்வு மையத்தை சார்ந்த மாத்யூ ஐடிகுலா போன்றவர்கள் இப்பிரச்சனை குறித்து பல ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர். இந்தியாவில் 5000க்கும் அதிகமான நகரங்கள் உள்ளன. இந்த நகரங்களை பல்வேறு உள்ளாட்சி அமைப்புகள் அல்லது அரசாங்கங்கள் நேரடியாக நிர்வகித்து வருகின்றன. நகரங்களில் பல பணிகளை செய்ய இயலும். உதாரணத்திற்கு சாலை பராமரிப்பு, நடைபாதைகளை பராமரிப்பது, அரசாங்கத்தின் பல்வேறு கட்டிடங்கள் பரா மரிப்பு, பசுமை இடங்களை பாதுகாத்தல், நீர்நிலைகளை மீட்டு பராமரித்தல், நகரங்களுக்குள் அல்லது அருகில் உள்ள சிறு வனங்கள் அல்லது மரங்கள் உட்பட பயிரினங்களை பாதுகாத்தல் போன்ற பல பணிகளை இத்திட்டம் மூலம் செய்ய இயலும். ஒரு நாளைக்கு ஒரு உழைப்பாளிக்கு ரூ 500 வீதம் 100 நாட்களுக்கு ஊதியம் அளித்தால் கூட நகர்ப்புற மக்களின் கைகளில் பணத்தை தர முடியும்.

மேலும் வேலை வாய்ப்புகளை அதிகமாக உருவாக்க வாய்ப்புள்ள கல்வி/மருத்துவம்/உள்கட்டமைப்பு ஆகிய துறைகளுக்கும் அதிகமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உழைப்பாளிகள் தாம் ஈட்டிய பணத்தை செலவு செய்ய முன்வருவர். அது பொருட்களின் கிராக்கியை அதிகரிக்கும்; உற்பத்தி அதிகரிக்கும்; அதி கரிக்கும் உற்பத்தி அதிக வேலைவாய்ப்புகளை உருவாக் கும்; அது மீண்டும் பணப்புழக்கத்தை அதிகரிக்கும்- இப்படி சங்கிலி தொடர் பலனை இது உருவாக்கும். உழைப்பாளிகள் மீது அக்கறை உள்ள எந்த ஒரு அரசாங்கமும் இந்த வழியைத்தான் தேர்ந்தெடுக்கும். ஆனால் மோடி அரசாங்கம் இதனை செய்யுமா என்பதே மிகப்பெரிய கேள்வி குறி. இதனை செய்ய மறுத்தால் இந்த அரசாங்கத்தை செய்ய வைக்க வேண்டிய கடமை மக்கள் இயக்கங்களுக்கு உள்ளது!

விவரங்கள்  
1. ஜெயன் ஜோஸ் ஜோசப் (01.10.2019) இந்து ஆங்கில பத்திரிக்கை/ 2.ஜினாய் ஜோஸ் (பிசினஸ் லைன் 30.09.2019) 
3. திகேந்தர் சிங் பன்வார் கட்டுரை
4. நியூஸ் கிளிக் (29.09.2019)  
5. பொருளாதார ஆய்வாளர் பேரா. ஜெயதி கோஷ் பேட்டி.