tamilnadu

img

குதிரை பேரம் வென்றது; குமாரசாமி அரசு கவிழ்ந்தது

பெங்களூரு,ஜூலை 23- கர்நாடக சட்டமன்றத்தில் செவ்வாயன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்தது. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி முதலமைச்சராக இருந்தார். இந்நிலையில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த  16 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து,சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினர். இதனால் குமாரசாமி அரசின் பெரும்பான்மை பலம் குறைந்தது. எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்கவில்லை.

இதையடுத்து எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றனர். சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.  ஆட்சியைப் பிடிப்பதற்காக பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா  தளம் கட்சிகளின் தலைவர்கள் குற்றம்சாட்டினர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி ஆளுநர் விதித்த கெடுவை சபாநாயகர் நிராகரித்தார். சட்டமன்ற செயல்பாடுகளில்  தலையிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று அதிரடியாக தெரிவித்தார்.  இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கத் தயார் என்று முதல்வர் குமாரசாமி அறி வித்தார். இதனையடுத்து கடந்த வியாழக்கிழமை யன்று முதல் இதன் மீது விவாதம் நடைபெற்றது.

ஜூலை 23 செவ்வாயன்று அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பின்னர் வாக்கெடுப்பு நடைபெற்றது. அரசுக்கு ஆதர வாக 99 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் பதி வாகின.6 வாக்குகள் வித்தியாசத்தில் நம்பிக்கை  வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்தது. 14 மாதங்களே நடைபெற்ற குமாரசாமி அரசு பாஜக வின் குதிரை பேரத்தால் கவிழ்ந்தது.  விவாதத்தில் பேசிய முதலமைச்சர் குமாரசாமி, 6 கோடி கர்நாடக மக்களிடமும் தான் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக உருக்கமுடன் தெரிவித்தார். தான் முதலமைச்சராகக் காரணமாக இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார். தனது பதவியை மகிழ்ச்சியுடன் தியாகம் செய்ய தயாராக இருப்பதாக கூறினார். ஆதாரமின்றி தன் மீது பாஜக ஊழல் குற்றச்சாட்டு சுமத்துகிறது என்றும் பல நூறு கோடி ரூபாய் ஊழல் செய்து பின்வாசல் வழியாக பாஜக ஆட்சிக்கு வர முயற்சிப்பதாகவும், ஆட்சிக்கு வந்த நாள் முதலே குதிரை பேரம் துவங்கி விட்டதாகவும் சாடினார். கர்நாடக சட்டப்பேவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருப்பதை முன்னிட்டு பெங்களூருவில் 48 மணி நேரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.