tamilnadu

img

சுபஸ்ரீ மரணம்: அதிமுக ஜெயகோபலுக்கு நீதிமன்ற காவல்

பேனர் கவிழ்ந்து விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ வழக்கு அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை அக்டோபர் 11ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை பள்ளிக்கரணையில் வைக்கப்பட்ட அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண விழா பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் செப்டம்பர் 12ஆம் தேதி உயிரிழந்தார். இந்த விபத்தில் முக்கிய குற்றவாளியாகத் தேடப்பட்டு வரும் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீஸார் மற்றும் போக்குவரத்து புலனாய்வுத் துறை போலீஸார் சார்பில் தடை மீறி பேனர் அமைத்ததற்கும், விபத்தை ஏற்படுத்தியதற்கும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று 15 நாள்களுக்கும் மேலாக தேடப்பட்டுவந்த ஜெயகோபால் கைது செய்யப்பட்டார் . இன்று அவரிடம் போக்குவரத்து புலனாய்வு அலுவலகத்தில் விசாரணை நடத்தினர்.
பின்னர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை நீதிபதி சார்லி விசாரித்தார். அப்போது அக்டோபர் 11ஆம் தேதி வரை ஜெயகோபாலை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் கொடி கட்டுதல், பேனர் வைத்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்ட பழநி(50), சுப்பிரமணி(50), சங்கர்(35), லட்சுமிகாந்தன் (38) ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.