இந்திய நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் மேலானவர்கள் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆவார்கள். இளைஞர்களின் வாழ்வில் ஏற்படும் முன்னேற்றம் என்பது இந்தியாவின் முன்னேற்றத்தை குறிக்கிறது என்றால் மிகையல்ல.
இந்திய இளைஞர்களின் ஆற்றலை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த கூடிய முறையில் திட்டங்களும் கொள்கைகளும் உள்ளதா என்பதை ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம். இந்திய நாட்டின் பொதுத்துறை சொத்துக்கள் தொடர்ந்து சுமார் ஏழு லட்சம் கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இதோடு 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் ரிசர்வ் வங்கியிலிருந்து இருப்புத் தொகையை எடுத்து மத்திய அரசாங்கம் தன்னுடைய இருப்பாக மாற்றியுள்ளது. இதன் மூலமாக மத்திய அரசாங்கத்திற்கு பத்தரை லட்சம் கோடி ரூபாய் ‘வருமானமாக’ மாற்றப்பட்டுள்ளது. இது யாருக்காக எப்படி செலவாகிறது என்பது முக்கியம். ரிசர்வ் வங்கி வருமானத்தில் எடுத்த பணத்தில் ஒரு லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய் கார்ப்பரேட்டுகளுக்கு சலுகையாக அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாட்டின் பிரதான பிரச்சனையான வேலையின்மைக்குத் தீர்வுகாண ஏதேனும் செலவிடப்படுகிறதா என்றால் இல்லை.
வேலைவாய்ப்பு குறித்த பல்வேறு புள்ளி விவரங்கள், தகவல்கள் தொடர்ந்து செய்தித்தாள்களில் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் வராத செய்திகளும் பிரச்சனைகளும் ஏராளம். சமீபத்தில் 7,000 பேரை காக்னிசன்ட் நிறுவனத்திலிருந்து வேலை நீக்கம் செய்யப்போவதாகவும் 10,000 பேரை டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து வேலை நீக்கம் செய்யப் போவதாகவும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து ஒரு லட்சம் பேரை விருப்ப ஓய்வில் அனுப்ப இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. சி.எம்.ஐ. தந்துள்ள புதிய புள்ளி விவரத்தில் வேலையின்மை விகிதம் 8.5 சதவீதமாக கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. உற்பத்தி மற்றும் விவசாயத் துறையில் வேலைவாய்ப்பில் ஏற்பட்டுள்ள சரிவு மிக மோசமான முறையில் இந்திய இளைஞர்களை பாதித்து வருகிறது; கௌரவமான வேலை என்று சொல்லக்கூடிய பதத்தை உலக தொழிலாளர் நிறுவனம் பயன்படுத்துகிறது. ஆனால் இத்தகைய வேலை இந்தியாவில் நாளுக்கு நாள் அரிதாகி வருகிறது.
ஆட்டோமொபைல் ஐடி துறையைத் தொடர்ந்து பிஎஸ்என்எல் சம்பந்தப்பட்ட டெலிகாம் துறையும் எத்தகைய வேலை இழப்பிற்கு ஆளாகி உள்ளது என்பதை நாம் பார்க்கிறோம். இத்தோடு இந்திய உழைப்பாளிகளின் வேலை நேரம் உயர்ந்து வருகிறது. நகர்ப்புறம், கிராமப்புறம், பெண்கள் என்ற வித்தியாசமின்றி வேலை நேரம் உயர்வு என்பது அனைவரையும் பாதித்துள்ளது. வேலை நேரம் அதிகரித்துள்ள போதும் அதற்கான முழு பயனாக சம்பளத்தில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை என்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியுள்ளது.
ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவோம் என்று ஆட்சிக்கு வந்த மோடி அரசாங்கம் கடந்த ஐந்து வருடங்களில் எத்தனை வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது? ஒவ்வொரு ஆண்டும் படித்து முடித்து வேலைவாய்ப்பு சந்தையில் ஒரு கோடியே 30 லட்சம் இளைஞர்கள் புதிதாக இந்திய நாடு முழுவதும் இணைந்து வருகின்றனர் தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி இவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்ற கேள்வி முன்னுக்கு வந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனை, ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம் என இருக்கிற வேலைவாய்ப்பையும் பறிக்கிற ஏற்பாடுதான் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு இல்லாததன் காரணமாக தமிழகத்தில் 6,800 குரூப் 4 பணியிடங்களுக்கு 14 லட்சம் பேர் விண்ணப்பித்து தேர்வு எழுதி உள்ளனர். அதேபோல 12 ஆயிரம் பணியிடங்களுக்கு 10 லட்சம் பேர் குஜராத்தில் விண்ணப்பித்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் 62 பியூன் பணியிடங்களுக்கு பிஎச்டி முடித்தவர்கள் உள்ளிட்ட பல ஆயிரக்கணக்கான பேர் விண்ணப்பித்துள்ளனர். இவையெல்லாம் வேலைவாய்ப்புக்கான நெருக்கடி எந்த அளவு அதிகரித்துள்ளது என்பதற்கான சில உதாரணங்களாகும். எனவே, மோடி அரசாங்கம் தான் கொடுத்த வாக்குறுதியை மறந்துவிட்டது என்று சொல்வதை விட தெரிந்தே இளைஞர்களை ஏமாற்றிவிட்டது என்பதுதான் உண்மை. கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்தெந்த துறையில் எவ்வளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என அரசு துறைவாரியாக வேலைவாய்ப்பு உருவான விவரங்களை வெளியிடவில்லை. அதேசமயம் பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் வேலை இழப்புகள் அதிகரித்து வருவதையே உறுதிப்படுத்துகின்றன. வேலைவாய்ப்பை அரசு தந்து இருப்பின் அதனுடைய அதிகாரப்பூர்வ மான புள்ளிவிவரங்களை மறைக்க வேண்டிய அவசியம் என்ன?
அரசுத்துறை
மத்திய அரசின் பணியிடங்களில் 24 லட்சம் பணியிடங்கள் காலிப் பணியிடங்களாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கு அரசாங்கம் எவ்விதமான முயற்சியும் மேற்கொள்ளவில்லை. சில ஆயிரம் பேரை பணி நியமனம் செய்து விட்டு தொடர்ந்து காலியிடங்களை அதிகரித்து வருகிறது. ஒவ்வோராண்டும் ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை அளவிற்குக்கூட புதிய நியமனங்கள் செய்யப்படுவதில்லை. இதனால் காலியிடங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. மாறாக, இது குறித்த புள்ளி விபரங்களை கணக்கெடுத்து பணியிடங்களை தனியார்மயப் படுத்துவதற்கான முயற்சியை மேற் கொண்டு வருகிறது. தற்சமயம் அரசுப் பணிகளை முறைசாரா வேலைவாய்ப்புகளாக மாற்றி வருகிறது.
அரசுத் தரப்பில் எழுத்துப்பூர்வமான எந்த உத்தரவாதமும் இல்லாமல் வேலைவாய்ப்புகள் தொடர்ந்து தனியார்மயமாக்கல் படுகிற தன்மை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட 50 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளன.
பொதுத்துறை
பொதுத்துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் ரயில்வே துறை தவிர்த்து மற்ற துறைகளில் பணிநியமனம் மிகச் சொற்பமானதாகும். ஆரம்பகாலத்தில் ரயில்வேயில் 17 லட்சம் பேர் பணியாற்றி வந்தனர். தற்சமயம் 13 லட்சம் பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர், தற்போது ரயில்வே கையாளக்கூடிய சரக்குகளின் அளவு, பயணிகளின் எண்ணிக்கை, இயக்கக்கூடிய ரயில்களின் அதிகரிப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் உயர்ந்துள்ளது. ஆனால் வேலைவாய்ப்பு மட்டும் இத்துறையில் உயரவில்லை என்பது விசித்திரமானதாகும் ரயில்வேயில் உணவு விற்பனை, சுகாதார பராமரிப்பு, ஓய்வு இடங்கள் பராமரிப்பு உள்ளிட்ட இன்னும் பல அம்சங்களை தனியார்மயமாக்கியதின் விளைவாக முறையான வேலைவாய்ப்புகள் குறைந்து போய்விட்டன. இவைல்லாம் தனியார் துறையின் லாபத்திற்கான ஒன்றாக ரயில்வே துறையால் தற்சமயம் மாற்றப்பட்டுள்ளது.
பொது மற்றும் தனியார் துறை கூட்டு
தனியார் - பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டு நடவடிக்கை என்ற பெயரில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறபோதும் இயல்பில் அமுலாக்கத்திற்கு வரும்போது அது தனியார் துறை மூலமாக மேற்கொள்ளப்படக் கூடிய தன்மையே உள்ளது. இதனால் அரசின் பணிகள் தனியார் மயப்படுத்தப் படுவதைத் தவிர வேறொன்றும் நடைபெறுவதில்லை. இதனை காண்ட்ராக்ட் முறை என்றே குறிப்பிடமுடியும்.
சுய வேலைவாய்ப்பு
இளைஞர்கள் விரும்பக் கூடிய துறையாக சுயவேலை வாய்ப்பு இருக்கிறது. இதனால் ஸ்டார்ட் அப் உள்ளிட்ட திட்டங்களில் இளைஞர்களுக்கு ஈர்ப்பு என்பது இயல்பாகவே காணப்படுகிறது. ஆனால் இதற்கான கடனை மத்திய அரசு வழங்கும்போது செலுத்தக்கூடிய வட்டிவிகிதம் கந்து வட்டியைப் போன்றதாக அமைந்துள்ளது. இதற்கு முத்ரா திட்டத்தையே உதாரணமாக குறிப்பிட முடியும். மோடி அரசு இதனை சாதனைத் திட்டமாக குறிப்பிடுகிறது. இதனால் கடன் பெற்றவர்கள் அடையும் வேதனையும் ஏராளம்.
இதர துறைகள்
இதர துறைகளில் வேலைவாய்ப்பு என்பது என்ஜிஓ உள்ளிட்ட சில அரசு சாரா வேலைவாய்ப்புகள் ஆகும். ஒட்டுமொத்த வேலைவாய்ப்பில் இது வெறும் 3.5 சதவீதம் ஆகும். அதுவும்கூட மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு சதவீதம் அளவிற்கு குறைந்து உள்ளது என்று புள்ளி விவரங்கள் கிடைத்துள்ளன.
தில்லியில் இன்று மாநாடு
எனவே இந்திய இளைஞர்களின் வேலை கனவு மோடி ஆட்சியில் வெறும் கனவாகவே போய்விடும் அபாயம் எழுந்துள்ளது. இதை அம்பலப்படுத்தும் வகையிலும், எங்கே எனது வேலை என முழக்கமிட்டு நாடு முழுவதும் இளைஞர்களை போராட்டங்களில் அணிதிரட்டும் அறைகூவலுடனும் “வேலை உரிமை” என்ற முழக்கத்துடன் தேசிய சிறப்பு மாநாட்டினை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நவம்பர் 11 (இன்று) தில்லியில் நடத்துகிறது. பொருளாதார அறிஞர் பேரா. ஜெயதி கோஷ், சிஐடியு தலைவர் டாக்டர் கே. ஹேமலதா, வாலிபர் சங்கத் தலைவர்கள் முகமது ரியாஷ், அவாய் முகர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்கின்ற னர். இம்மாநாட்டின் அறைகூவலை ஏற்று தமிழகத்திலும் வேலை உரிமைக்கான போர் முழக்கத்தை வாலிபர் சங்கம் எழுப்ப இருக்கிறது.
கட்டுரையாளர் : இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர்