தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அடுத்த 24 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கடலூர், தூத்துக்குடி, நெல்லை, நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை அளவாக தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 14 செ.மீ., கன்னியாகுமரி, கொடைக்கானலில் 13 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 12 செ.மீ., திருவாரூரில் 9 செ.மீ., மாமல்லபுரத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.