tamilnadu

img

நட்டம் என்று பொய் கூறி மின் கட்டணத்தை உயர்த்த முயற்சிப்பதா?

2016-17ல் லாபத்தில் இயங்கிய தமிழ்நாடு மின்சார வாரியம் 2017-18ஆம்  ஆண்டில் நட்டத்தை நோக்கிச் சென்றுவிட்டதாம். ரூ.7760 கோடி நட்டமாம். அது இந்த நிதியாண்டு முடிவதற்குள்  ரூ. 13,350 கோடியாக உயர்ந்து இதுவரை இல்லாத உச்சகட்ட நட்டமாம். மின் வாரியத்தின் நட்டத்தை ஈடுசெய்ய 30 சதவீத அளவிற்கு மின் கட்டணத்தை 
உயர்த்த உள்ளார்களாம். மின்சாரத்தின் மூலம் மொத்த வருமானம் தற்போது ரூ.46,800 கோடியாம். அதை மின் கட்டண உயர்வின் மூலமாக ரூ.60,345 கோடியாக உயர்த்த உள்ளார்களாம். உத்தேசித்துள்ள மின் கட்டண உயர்வின் மூலமாக ரூ.20,000 கோடியை  கூடுதல் வருவாயாக மாற்ற உள்ளார்களாம். அதாவது ஒரு யூனிட் மின்சாரத்திற்கு தற்போது ரூ.6.60 மின் கட்டணமாக செலுத்துபவர்கள் கட்டண உயர்வுக்கு பிறகு ரூ.8.40 செலுத்த வேண்டி வருமாம்.

உத்தேசித்துள்ள மின் கட்டண உயர்வுப்படி ரூ.20,000 கோடி அளவிற்கு பொருளாதார சுமையை சாதாரண மக்கள் மீது சுமத்த அ.தி.மு.க அரசு திட்டமிட்டுள்ளது. 
 மின் கட்டண உயர்வுக்கு காரணம் 2018-19ம் ஆண்டுகளில் மின் வாரியத்தில் வருவாய் இடைவெளி ரூ.7,760 கோடி என்றும், அது இந்த ஆண்டு முடிவதற்குள் ரூ.13,350 கோடியாக உயரும் என்றும் அரசுத் தரப்பில் கூறுகிறார்கள். இந்த வாதமே உண்மைக்கு புறம்பானது. கடந்தாண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்காக  வரவுசெலவு அறிக்கையை அளிக்கின்ற போது மின் வாரியம்
நட்டத்திலிருந்து மீண்டுவிட்டது என்றும் ரூ.4000 கோடி இலாபம் அடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்கள். 2018ம் ஆண்டில் ரூ.4000 கோடி லாபம் வந்தது என்று சொல்லி
விட்டு, 2019ம் ஆண்டில் ரூ.7760 கோடி ரூபாய் நட்டம்; அது இந்த ஆண்டு முடிவதற்குள் ரூ.13,350 கோடியாக உயரும் என்றும் அறிக்கை அளித்திருப்பது எப்படி? 
2018ம் ஆண்டு வாரியம் அறிவித்த நான்கு கோடி ரூபாய் இலாபத்தை மேலும் அதிகமாக்க வாய்ப்புகள் இருந்த போதும் மின் வாரியத்தின் அசட்டைத் தனமான நட
வடிக்கையால் அதை அடையாத நிலை ஏற்பட்டுள்ளதோ என்ற ஐயம் எழுந்துள்ளது.

தமிழக மின்சார வாரியத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆறு லட்சம் முதல் எட்டு லட்சம் வரை மின் நுகர்வோர்கள் அதிகரித்து உள்ளதாக வாரியத்தின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால் மின் வாரியத்தில் 2016-17ம் ஆண்டுகளில் மின்சார விற்பனை மூலமாக கிடைத்த தொகை ரூ.43,964 கோடி என்றும்  2017-18ம் ஆண்டுகளில் மின்சார விற்பனை மூலம் கிடைத்த தொகை ரூ.43,687 கோடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2016-17ம் ஆண்டுக்கும் 2017-18ம் ஆண்டுக்கும் மின்சார விற்பனை மூலமாக கிடைக்கும் தொகை கூடுவதற்கு பதிலாக ரூ.277 கோடி குறைந்துள்ளதாக குறிப்பிடுவது விந்தையாக உள்ளது. 

விந்தை மட்டுமல்ல, மின்வாரிய நிர்வாகம் எதை நோக்கிச் செல்கிறது என்ற ஐயப்பாடும் எழுந்துள்ளது. ஒரு கட்டத்தில் மின் ஊழியர் மத்திய அமைப்புக்கு கிடைத்த தகவல், மின்வாரியத்தின் வருமானத்தை உத்தரவாதப்படுத்தக்கூடிய உயர்அழுத்த மின் நுகர்வோர்கள் எண்ணிக்கையான 10,000த்தில் சரிபாதி மின் நுகர்வோர்கள் மின் வாரியத்திலிருந்து மின்சாரத்தை பெறுவதற்கு பதிலாக பொதுத்துறை மின் விநியோக கட்டமைப்பை பயன்படுத்தி தனியாரிடமிருந்து மின்சாரத்தை பெறுவதற்காக சென்றுவிட்டார்கள்; அதனால் மின் வாரியத்திற்கு வர வேண்டிய வருமானத்தில் ரூ.2000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மின்வாரிய நிர்வாகமே தெரிவித்தது என்பதுதான். இந்நிலை நீடித்தால் மின் வாரியம் வெகுவிரைவில் சீரழிவை நோக்கி சென்றுவிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

மின்சார விற்பனை மூலம் நமக்கு கிடைக்க வேண்டிய வருவாய் ரூ.2017-18 ஆம் ஆண்டுகளில் ரூ. 277 கோடி குறைகின்ற அதே நேரத்தில் மின்சார கொள் முதலுக்காக நாம் செலவு செய்த தொகை கோடிக்கணக்கில் உயர்ந்துள்ளது. அதாவது 2016-17ம் ஆண்டுகளில் மின்சார கொள்முதலுக்காக ரூ.37,385 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2017-18ம் ஆண்டுகளில் மின்சார கொள்முதலுக்காக ரூ.41,072 கோடி ரூபாய் செலவு. ஒரே ஆண்டில் ரூ.3,687 கோடி கூடுதலாக செலவு செய்துள்ளோம்.
மேலே கூறிய புள்ளி விவரங்களை பார்க்கின்ற போது மின்சார விற்பனை மூலம் வருவாய் என்பது குறைந்தும் மின்சார கொள்முதலுக்காக அதிக தொகை செலவு செய்ததனால்தான் இந்த வருவாய்க்கும் செலவுக்கும் இடைவெளி ஏற்பட்டுள்ளது என்பதும் கண்கூடாக தெரிய வருகிறது.

தமிழக மின்வாரிய வரவு செலவின் இந்த இடைவெளியைப் போக்க, தமிழக மின் நுகர்வோர்களின் மின் தேவையைக் கணக்கில் கொண்டு புதிய மின் நிலையங்களை அமைக்க திட்டமிடாத  மற்றும் திட்டமிட்ட மின் நிலையங்களையும் குறிப்பிட்டகாலத்தில் முடித்து மின் உற்பத்தியைத் துவங்கிட மின்வாரியம் நடவடிக்கை எடுக்காமல் அசட்டையாக இருந்த காரணத்தினால் தான் மின் உற்பத்திக்கும் தேவைக்கும் இடைவெளியும் இடைவெளியை எதிர்கொள்ள கூடுதலான விலை கொடுத்து மின்சாரத்தை கொள்முதல் செய்வதனால் கூடுதல் செலவும் ஏற்பட்டுள்ளது. இதை மாற்றிட போர்க்கால நடவடிக்கையை தமிழக அரசும் மின்வாரியமும் எடுத்தால் தான் தமிழக மின் வாரியத்தை காப்பாற்ற முடியும்.

மேலும், நட்டத்தை ஏற்படுத்தக் கூடிய மின்சார கொள்முதல் கொள்கையை மாற்றி அமைத்திடுவதற்கான நடவடிக்கையை எடுத்திட வேண்டும். அதாவது காற்றாலை மின்சாரத்தை கொள்முதல் செய்யும் போது எந்த மாநிலத்திலும் பின்பற்றாத ‘பேக்கிங் சிஸ்டத்தை’ பின்பற்றுவதனால் நிதி இழப்பீடு ஏற்படுகின்றது. அதாவது காற்றாலை மின்சாரத்தை கொள்முதல் செய்யும் போது கொள்முதலுக்காக நிர்ணயிக்கப்பட்ட தொகை அடிப்படையில் வழங்காமல் பல மாதங்கள் கழித்து
மின்சார விற்பனை கட்டணம் உயர்ந்திருக்கின்ற போது காற்றாலை நிறுவனங்களின் மின்சாரத்தை பெறுவதனால் பலகோடி ரூபாய் மின்வாரியத்திற்கு இழப்பு ஏற்படுகிறது
என்று தணிக்கை அறிக்கைகள் கூறுகின்றன.  

காற்றாலை மின்சார கொள்முதலுக்கு பேக்கிங் சிஸ்டத்தை பின்பற்றுவதனால் ஆண்டுக்கு ரூ.800 கோடி நிதி இழப்பீடு ஏற்படுவதாக தெரியவருகிறது. காற்றாலை 
மின்சாரத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட மின் கொள்முதல் விலை ரூ.3.39 பைசாவாக இருக்கின்ற போது மின் வாரியம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.6.60 ஆக நிர்ணயிக்கப்பட்ட
மின்சாரத்தை வழங்குகின்ற அவலநிலை உள்ளது.புதிய மின் நிலையங்களை அமைக்கின்ற போது அதற்கு தகுதி உடைய நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்காமல், தகுதியற்றவர்களுக்கு சுயஆதாயத்தை மனதில் கொண்டு ஒப்பந்தம் அளிப்பதனால் மின் நிலையத்தின் திட்டமதிப்பை விட பல கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் அளிக்கின்ற ஊதாரித்தனமான நிர்வாக நடவடிக்கையினால் பெரும் அளவுக்கு நிதி இழப்பீடு ஏற்படுகிறது. அதாவது ஒரு மின் நிலையத்தை அமைக்க ரூ.4000 கோடிக்கு ஒப்புதல் அளித்துவிட்டு அதே மின் நிலையத்தை அமைக்க ரூ.7100 கோடி மறு ஒப்புதல் அளிப்பதன் மூலமாக மின்வாரியத்திற்கு பல கோடி ரூபாய் நட்டத்தை உருவாக்கியுள்ளது.
இவை போன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக மின்வாரியத்தின் நட்டத்திற்கு ஊழியர்களுக்கு கூடுதல் ஊதியம் அளிக்கப்பட்டதால்தான் இந்த வருவாய் இடைவெளி என்ற வாதத்தை வைப்பதானது ஒரு சிறுபிள்ளைத்தனமானது. மனிதசக்தி இல்லாமல் மின்வாரியம் இந்த பிரம்மாண்டமான வளர்ச்சியை கண்டு இருக்க முடியாது என்பதை உணராத நிலையில் மனித சக்திக்கு வழங்கும் தொகையில்தான் நட்டம் ஏற்பட்டது; வருவாய் இழப்பு ஏற்பட்டது என்பதும் ஏற்றுக் கொள்ளக்
கூடிய ஒன்றல்ல. மின்வாரிய பணிகளுக்கு மனித சக்தியை ஈடுபடுத்துவதும், அதற்காகும் செலவு என்பதும் ஏற்கனவே திட்ட ஒதுக்கீட்டில் இணைக்கப்பட்ட ஒன்று என்பதை மூடி மறைப்பது நியாயம் இல்லை.

வருவாய் இடைவெளிக்கு மின்வாரியம் கூறும் அடுத்த காரணம், அதிகாரிகளுக்கு, பொறியாளர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்குவதுதான் என்று திசை திருப்பப் பார்ப்பதும் சரியல்ல. மின்வாரிய ஊழியர்களுக்கோ, அதிகாரிகளுக்கோ, பொறியாளர்களுக்கோ தனியான ஓய்வூதிய திட்டம் எதுவும் கிடையாது. மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கின்ற வகையில் தான் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் வழங்குகின்ற ஓய்வூதியத் தினால் தான் தமிழக அரசின் கடன் தொகை அதிகரிக்கிறது என்று எப்படிச் சொல்ல முடியாதோ அப்படித்தான் மின்வாரிய அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் வழங்கப்படும் ஓய்வூதியத்தினால் தான் நட்டம் என்று சொல்ல முடியாது.

வருவாய் இடைவெளிக்கு கூறும் காரணங்களில் ஒன்று, மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் விலையை உயர்த்திவிட்டார்கள். உள்நாட்டு நிலக்கரி விலை உயர்ந்துவிட்டது என்பதாகும். இதுவும் சொத்தையான வாதமே. தமிழக அரசு தனக்கு மத்திய அரசில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி விலை உயர்வின்றி மின்சாரத்தையும், நிலக்கரியையும்,  பெறுவதற்கு யார் தடுத்தார்கள்? எனவே, மின்வாரியத்திற்கு  ஏற்படாத நட்டத்தை, நட்டம் என்று சொல்லி அதை ஈடு
செய்ய பல ஆயிரம் கோடி ரூபாய் மின் கட்டணமாக உயர்த்த உத்தேசித்துள்ளதை கைவிட வேண்டும்.

===எஸ்.எஸ்.சுப்பிரமணியன்===
தலைவர், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு)