அடக்குமுறை அங்கிங்கு என இல்லாமல் திரும்பும் திசையெல்லாம் என்பதாகியுள்ளது. பாஜகவின் ஆட்சி அறிவுலக மக்கள் மீது, பெரும் ஆத்திரம் கொண்டு அடக்க முயற்சிக்கிறது. குறிப்பிட்ட சமூகத்தின் மீது இருந்த வெறுப்பு வளர்ந்து குறிப்பிட்ட நிறுவனங்களின் மீதான வெறுப்பாக மாறி யுள்ளது. ஏற்கனவே புனேவில் இருக்கும், திரைப்படக் கல்லூரி; அடுத்து, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்; அதைத் தொடர்ந்து அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஆகியவை இலக்காக இருந்தன. இதில் படிக்கும் மாண வர்களும் தாக்குதலுக்கு ஆளாகினர். எதிர்ப்பும் வலுத்தது. இப்போது தலைநகர் தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் திட்டமிட்டு தாக்கப்படுகிறது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம்
1969 -ல் உருவாக்கப்பட்ட மத்தியப்பல்கலைக்கழகம் இது. இங்கு 8500 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில் 5200 பேர் ஆராய்ச்சி மாணவர்கள். உலகில் உள்ள அனைத்து ஜனநாயக சிந்தனைகளும் கொண்ட வளாக மாக இந்தியாவில் இயங்கி வருகிறது. காங்கிரஸ் ஆட்சி இந்த பல்கலைக் கழகத்தை, நேருவின் மறைவை தொடர்ந்து உருவாக்கி இருந்தாலும், இங்கு இடதுசாரி சிந்தனை யாளர்களே அதிகம் இருந்தனர். பிரகாஷ் காரத், சீத்தாராம் யெச்சூரி, சுபாஷினி அலி, சுனீத் சோப்ரா போன்றவர்கள் உள்ளிட்டு, ஏராளமான தலைவர்கள் மாணவர் இயக்கப் பணியாற்றிய வளாகம். இளம் தலைவர்களான விஜு கிருஷ்ணன், கன்னய்ய குமார் ஆகியோர் அண்மைக் காலத்து உதாரணங்கள். புகழ் பெற்ற பேராசிரியர்களான ரொமிலா தாப்பர், பிரபாத் பட்நாயக், உத்சா பட்நாயக், கே. என். பணிக்கர், சி.பி. சந்திரசேகர், ஜெயதிகோஷ் என்ற இந்த வரிசை நீளமானது. அண்மையில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் அபிஜித் பானர்ஜி இந்த பல்கலைக் கழக மாணவர் தான். பொருளாதாரம், வரலாறு, அரசியல் உள்ளிட்ட துறைகள் உலக புகழ் பெற்ற அறிஞர்களை உருவாக்கியுள்ளது.
பல அரசியல் கட்சிகளுக்கான தலைவர்களையும், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் போன்ற அதிகாரிகளையும் உரு வாக்கிய பெருமை இந்த கல்வி வளாகத்திற்கு உண்டு. உலகம் முழுவதும் உள்ள பெருமை மிகு கல்வி நிலையங்க ளில் இந்த பல்கலைக் கழக மாணவர்கள் பேராசிரியர்க ளாக உள்ளனர். ஹூயுகோ சாவேஸ் முதல் பல நாட்டுத் தலைவர்கள் இந்த பல்கலைக் கழகத்தில் பாராட்டு பெற்ற தும், வரவேற்கப்பட்டதும் உண்டு. இங்கு நடைபெறும் மாணவர் பேரவைத் தேர்தல், ஜனநாயகத்தின் மாண்பை பறைசாற்றக் கூடியது. அனைத்து தரப்பும் விவாதிக்க வாய்ப்பு அளிக்கும் இடமாக இருக்கிறது. மிகச்சிறந்த தேர்தல் முறை இங்கு பின்பற்றப்படுவதால், இதன் முடிவை அறிவதில் இந்தியா முழுக்க மாணவர்கள் ஆர்வம் காட்டுவதை காணமுடியும். இதன் விளைவு தான் மாணவ, மாணவியர் நள்ளிரவிலும் நூலகத்தை பயன்படுத்த முடிகிற, பல்கலைக்கழகமாக இருக்கிறது. இங்குள்ள தேனீர் கடைகளும், இதர பல இடங்களும் மாணவியருக்கு அச்சம் தருவதாக இருந்ததில்லை. கேண்டீன் மற்றும் விடுதி களும் இருபாலரும் ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பு என்ற வகையிலேயே, செயல்படும் ஜனநாயகத் தன்மை கொண்டுள்ளது.
1984 ல் இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட போது, சீக்கியர்கள் மிகக் கடுமையாக தாக்கப்பட்டனர். அப்போது 3000க்கும் மேற்பட்ட சீக்கியர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, காங்கிரஸ் கட்சியினரின் பழி வாங்கும் உணர்ச்சியை ஒதுக்கித் தள்ளிய வரலாறு இந்த பல்கலைக் கழக மாண வர்களுக்கு உண்டு. அதேபோல் 1975-77 காலத்தில் அவசரச் சட்டத்தை இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அமலாக்கிய நேரத்தில், இன்றைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர். சீத்தாராம் யெச்சூரி, ஜே.என்.யு மாணவர் பேரவைத் தலைவராக இருந்தார். அவர் தலைமையில், இந்திரா காந்தி வீடு முன் ஜே.என்.யு மாணவர்கள் குழுமி, இந்திரா காந்தி முன்னிலையில், அடக்கு முறையைக் கண்டித்து தீர்மானம் இயற்றிய பெருமை ஜே.என்.யு மாணவர்களுக்கு உண்டு.
தொடரும் முரண்பாடுகளும் ஜனநாயகத்திற்கான போராட்டமும்
பல்வேறு வகையில் சிறப்புக்களைப் பெற்று இருந்தாலும், முரண்பாடுகளும், அடக்குமுறைகள் பல வற்றினை கொண்டதாகவும் இருந்துள்ளது. குறிப்பாக இடதுசாரிகளின் செல்வாக்கை இந்த பல்கலைக்கழகத்தில் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆளும் வர்க்கம் பலவகை முயற்சிகளை மேற்கொண்டு தோல்வியை தழுவி யுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் மாணவர் அமைப்பு என்.எஸ்.யு.ஐ , தற்போது பாஜகவின் ஏ.பி.வி.பி களம் கண்ட தேர்தல் மற்றும் கருத்தியல் தளத்தில் தோல்வியுறுவது தொடர்கிறது.
இந்த ஆளும் வர்க்கக் கருத்துக்களுடன் மோதும் வலிமை ஜே.என்.யு மாணவர்களிடம் அதிகரித்து இருப்பதை பொறுத்துக் கொள்ள இயலாத நிலை கடந்த சில ஆண்டுகளாக தொடர்வதைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக தில்லி உயர்நீதிமன்றம் வழங்கிய 377 வது சட்டப்பிரிவு குறித்த தீர்ப்பு, அடிப்படை வாதிகளால் எதிர்க்கப்பட்ட போதும், ஜே.என்.யு மாணவர்கள் ஜனநாயக உரிமை என்ற முறையில் ஆதரித்தனர். அடக்குமுறை அதிகரித்த போது, வானவில் பேரணி என 2015 ம் ஆண்டு நடத்தியது, பெரும் வரவேற்பை பெற்றது. 2016 ம் ஆண்டில், கன்னய்ய குமார், நஜிப் ஆகிய மாணவர்கள் தேச விரோத சட்டத்தின் பெயரில் தாக்குண்ட போது, இந்தியா முழுமைக் குமான ஜனநாயக சக்திகள் குரல் கொடுத்ததை பார்க்க முடிந்தது. வாஜ்பாய் பிரதமராக இருந்த காலம் தொட்டு, கல்வி காவிமயம் ஆவதையும், சமஸ்கிருத மொழி திணிப்பு, ஜோதிட கல்வி என பழமைவாத கண்ணோட்டம் கொண்ட பாடத்திட்ட மாற்றங்களை அறிவியல் பூர்வமாக எதிர்த்து நின்ற வலிமை, ஜே.என்.யு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு உண்டு. ஆக்ஸ்போர்டு, மஸா சூஸெட்ஸ் இண்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி ஆகிய பல்க லைக் கழகங்கள் அதன் பேராசிரியர்கள் நோம்சாம்ஸ்கி, அமர்த்தியா சென் ஆகியோர் உலக நிகழ்வுப் போக்குக ளில் கருத்து சொல்வதில் முன்னணியில் இருப்பது போல், ஜே.என்.யு பேராசிரியர்கள் ரொமிலா தாப்பர், கே.என். பணிக்கர், பிரபாத் பட்நாயக் ஆகியோர் செயல்படு கின்றனர்.
இந்த பின்னணியில் தான் மாணவர் சேர்க்கை வடி கட்டப்படுவதை, ஆளும் வர்க்கம் விரும்புகிறது. குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களின் அதிகரிப்பைத் தடுக்க விரும்புகிறது. இதில் அண்மையில் அதிகரித்து வரும் தனியார் பல்கலைக் கழகங்களின் விருப்பமும் உள்ளடங்கும். அசிம் பிரேம்ஜியின் பல்கலைக் கழகம், சிவ் நாடார் பல்கலைக் கழகம் ஆகியவை, ஜே.என்.யு அதன் வரலாற்று பின்புலத்துடன் நீடிப்பதை விரும்ப வில்லை. ஜே.என்.யுவை விட தனியார் பல்கலைக் கழகங்கள் சிறந்தவை என்ற கருத்தாக்கம் தோல்வி யுறுவது, ஆளும் வர்க்கத்தை நெருக்கடிக்கு தள்ளுகிறது. குறிப்பாக பாஜகவின் தொடர் முயற்சியான, பன்னாட்டு பல்கலைக் கழகங்களுக்கான அனுமதி மசோதா, அமலாக்கம் நிலுவையில் உள்ளது. இதற்கெல்லாம், ஜே.என்.யு ஒரு தடை என்றால் மிகையல்ல.
கல்விக் கட்டண உயர்வு மற்றும் உரிமை பறிப்புகள்
கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணம் ஆகியவை பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்து பகுதியில் இருந்தும், சாதாரண குடும்ப பின்புலம் கொண்ட மாணவர்கள் கல்வி பயிலும் இந்த நிறுவனத்தில் வசதி படைத்தோரின் ஆதிக்கத்தை மேம்படுத்த விரும்பும் நோக் கத்துடன், இந்த கட்டண உயர்வு திணிக்கப்பட்டு உள்ளது. விடுதிகளுக்குள் செல்லும் நேரக்கட்டுப்பாடு , ஆண்-பெண் பழகும் விதத்தில் கட்டுப்பாடு என்ற பெயரில் பழமை வாத திணிப்பு ஆகியவற்றை பாஜகவின் கொள்கைப் பிரச்சா ரகராக செயல்படும் துணைவேந்தர் அறிவிப்பு செய்துள் ளார். மேலே விவாதித்த அனைத்து பெருமைகளையும் நாசம் செய்யும் உள்நோக்கம், நீண்ட கால திட்டமிடலுடன் திணிக்கப்பட்டு இருப்பதை எதிர்த்துத் தான் தற்போது மாணவர்கள் போராட்டக் களத்தில் உள்ளனர்.
எண்ணற்ற போராட்டங்களுக்கு தலைமையேற்று, வழிகாட்டிய ஜே.என்.யு மாணவர்களின் போராட்டத்தை வளாகத்திற்குள்ளேயே அடக்கி விட எடுக்கும் முயற்சியை ஒன்றுபட்டு மாணவர்கள் எதிர்த்து போராடி வருகின்றனர். இந்த வீரம் செறிந்த போராட்டம் பாராட்டுக்குரியது. தலைமை தாங்கும் மாணவர்களைக் குறிவைத்து தனி யாக பிரிப்பது, அவர்கள் மீது கண்மூடித்தனமாக தடியடிப்பிர யோகம் செய்வது, இதில் மாணவிகளையும் விட்டு வைப்ப தில்லை என்ற மனப்போக்குடன் செயல்படுவது ஆகிய வற்றைப் பார்க்க முடிகிறது. இது ஒரு குறிப்பிட்ட மாணவர் போராட்டம், கல்வி கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டம் என குறுக்கிவிட முடியாது. ஜனநாயகக் குரலை, அறிவு ஜீவிகளின் வலிமையை, மாற்றுக் கொள்கையை வடிவ மைத்துப் போராடுவதை ஒடுக்க முயற்சிக்கும் சர்வாதிகா ரப்போக்கு எனப் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே தான் இந்தியாவின் அனைத்து மத்திய தொ ழிற்சங்கங்கள், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஏ.ஐ.சி.சி.டி.யு, ஐ.என்.டி.யு.சி, எச்.எம்.எஸ், யு.டி.யு.சி உள்ளிட்டவை ஜே.என்.யு மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து, அறிக்கை வெளியிட்டுள்ளன. ஆதரவுப் போராட்டத் திற்கான அழைப்பு விடுத்துள்ளன. அண்மையில் பாரீஸ், சிகாகோ, கலிபோர்னியா, சிலியின் சாண்டியாகோ போன்ற நகரங்களிலும், மாணவர் - தொழிலாளர், ஆசிரியர் - மாணவர் ஆகியோரின் ஒன்றுபட்ட போராட்டம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. தலைநகர் தில்லி யிலும் அத்தகைய வெற்றிக்கு வாய்ப்பிருக்கிறது. இந்தியா முழுவதும் இந்த ஒன்றுபட்ட போராட்டங்கள் அணிவகுக்க வேண்டிய தேவை, அதிகரித்துள்ளது. ஜே.என்.யு மாண வர்கள் முழக்கமிடுவது போல், நாடே முழங்கட்டும்!
கட்டுரையாளர் : சிஐடியு மாநில துணை பொதுச் செயலாளர்