tamilnadu

img

யாருடைய குரலில் பேசுகிறார் ரஜினிகாந்த்? - கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)

துக்ளக் ஏட்டின் பொன் விழாவில் கலந்து கொண்டு ரஜினிகாந்த் பேசியதையொட்டி தமிழகத்தில் சர்ச்சை எழுந்துள்ளது. இவ்விழாவில் பேசும்போது, 1971ல் சேலம் நகரில், தி.க. சார்பில் நடத்தப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர்வலத்தில் ராமர், சீதை படங்கள் அவமதிக்கப்பட்டதாகவும், அந்த செய்தியை துணிச்சலாக விமர்சித்தவர் சோ என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு பத்திரிகை ஆசிரியர் என்ற முறையில் சோ-வை பாராட்டுவதற்கு வேறு பல சம்பவங்களை குறிப்பிட்டிருக்க முடியும். உதாரணமாக, அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து துக்ளக் பத்திரிகை  துணிச்சலாக செயல்பட்டதை பலரும் பாராட்டினார்கள். ‘இம் என்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம்’ என்ற அடக்குமுறை கோலோச்சிய காலத்தில் அவசர நிலையை எதிர்த்து பத்திரிகைச் சுதந்திரத்திற்கு குரல் கொடுத்ததுதான் உண்மையான துணிச்சலான நடவடிக்கையாகும். அவரை பாராட்ட வேண்டுமானால் இதைக் குறிப்பிட்டு ரஜினி பாராட்டியிருக்க முடியும். மேலும், அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரம் தகர்த்தது அயோக்கியத்தனம் என்று சோ கடுமையாக விமர்சித்து துக்ளக் பத்திரிகையில் எழுதியிருந்ததையும் கூட குறிப்பிட்டிருக்கலாம்.

தி.க. மாநாட்டு செய்தியை துக்ளக் பத்திரிகையில் வெளியிடுவதற்கு ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளதைப் போல தனிப்பட்ட துணிச்சல் எதுவும் தேவை இருப்பதாக தோன்றவில்லை. தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் ஆட்சி அதிகாரத்தில் எப்போதும் இருந்தது இல்லை. அவரது உத்தரவுக்கு காவல்துறையோ, அதிகாரிகளோ பயந்து செயல்பட்டிருக்க வாய்ப்பு ஏதுமில்லை. அப்படியிருக்கும் போது அந்த மாநாட்டு செய்தியை துணிச்சலாக வெளியிட்டவர் சோ என கூறுவது இல்லாத ஒன்றை இட்டுக்கட்டி சொல்வதாகவே கருத வேண்டியுள்ளது.

இது மறக்க வேண்டிய ஒன்று என்று கூறும் ரஜினிகாந்த், தன்னுடைய பேச்சின் மூலம் அதை நினைவுபடுத்தி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்துவதன் நோக்கம் என்ன? யாரை திருப்திப்படுத்த முயல்கிறார் ரஜினிகாந்த்? தந்தை பெரியார் தன் வாழ்நாள் முழுவதும் சமூக நீதிக்காகவும், சாதி ஒழிப்புக்காகவும், பெண் விடுதலைக்காகவும், மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும், பகுத்தறிவுக் கொள்கைகளை பிரச்சாரம் செய்வதற்கும் கடுமையாக உழைத்தவர். தமிழ்நாட்டில் இன்று நிலைத்திருக்கும் சமூக நீதிக் கோட்பாடுகளுக்கு அவரது பணியும் அடிப்படையானது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதே சமயம், தந்தை பெரியார் நாத்திகராக இருந்ததோடு, நாத்திக கருத்துக்களை வலிமையாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார். நாத்திகராக இருப்பது தவறானதல்ல. சட்டவிரோதமானதும் அல்ல. மேலும் ஆத்திக கருத்துக்கள் மனித சமூக வரலாற்றில் தோன்றிய காலத்திலிருந்தே நாத்திக கருத்துக்களும் நீடித்து வந்துள்ளன. நாத்திக கருத்துக்களை வலுவாக சித்தர்கள் முன்னெடுத்ததை மறந்துவிட முடியாது. பல்வேறு துறைகளில் அரிய பணியாற்றிய பெரியாரின் பங்களிப்பு பற்றி இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பிரச்சாரம் செய்து வருகின்றன. பெரியார் சிலைகளை அவமதிப்பது, சேதப்படுத்துவது போன்ற காரியங்களை தொடர்ந்து வருகின்றனர்.

இவ்வாறான பின்னணியில், ரஜினிகாந்த், 1971ம் ஆண்டு நடந்த மாநாட்டு நிகழ்வைப் பற்றி மீண்டும் விவாதப் பொருளாக ஆக்குவதன் நோக்கம் என்ன என்பதே கேள்வி. சேலம் மாநாட்டின் போது நடந்த சம்பவங்கள் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் இருக்கக் கூடும். ஆனால், சுமார் அரைநூற்றாண்டுக்குப் பிறகு அந்த சம்பவங்களை நினைவூட்டும் வகையில் இப்போது பேசுவதானது பத்திரிகையாளர் சோ அவர்களை பாராட்டுவதற்காக பேசியதாக தோன்றவில்லை. அவரை பாராட்டுவதற்கு மேலே குறிப்பிட்டுள்ளதைப் போல சில சம்பவங்கள் இருக்கும் போது அதையெல்லாம் விடுத்து சேலம் மாநாட்டு சம்பவங்களை குறிப்பிடுவது பெரியாருடைய நடவடிக்கைகளை இழிவுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டதாகவே கருத வேண்டியுள்ளது.

மேலும், இது தொடர்பான மாறுபட்ட கருத்துக்களையும், எதிர்ப்புகளையும் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் வெளியிட்டுள்ள நிலையில் அது தொடர்பாக கருத்து தெரிவித்த ரஜினிகாந்த் தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ள முடியாது எனவும், மன்னிப்பு கோர முடியாது எனவும் அழுத்தமாக தெரிவித்துள்ளார். அதன் மூலம் தான் பெரியார் குறித்த அழுத்தமான கருத்தை மீண்டும் வலியுறுத்துவதாகவே கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் இதற்கு முன் வேறு பல சம்பவங்களில் ஒரு கருத்தை தெரிவித்துவிட்டு, பின்னர் அதை மாற்றிக்கொண்டதற்கான பல ஆதாரங்களை சுட்டிக்காட்ட முடியும். இத்தனை எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி எதிர்க்கிறது என்று சொன்னால், பாஜக ஆபத்தான கட்சியாகத்தான் இருக்க முடியும் என்று கூறிவிட்டு, பின்னர் நான் அந்தப் பொருளில் கூறவில்லை; பாஜக ஒரு வலிமையான கட்சி என்றுதான்  கூறியதாக பல்டி அடித்தார். அதேபோல, பாஜக தன் மீது காவிச்சாயம் பூச முயல்வது நடக்காது என்று கூறிவிட்டு, கொஞ்ச நேரத்திலேயே அதை மாற்றி பேட்டி கொடுத்த சம்பவமும் உண்டு. ஆனால் பெரியார் விஷயத்தில் மட்டும், தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ள முடியாது என்று சொல்வதன் மூலம் பெரியாரையும், அவரது கருத்துக்களையும் எதிர்த்த ஒரு பிம்பமாக தன்னை சிருஷ்டித்துக் கொள்ள விரும்புகிறார் என்பது தெளிவு. இந்த பிம்பத்தை அவருக்கு தர முயல்பவர்கள் யார் என்பதையும் புரிந்து கொள்வது கடினமல்ல.

மேலும் அந்த விழாவில் இத்தோடு நில்லாமல், துக்ளக் படிப்பவர்கள் தான் அறிவாளிகள் எனவும் திருவாய் மலர்ந்துள்ளார். துக்ளக் உள்ளிட்ட எந்தவொரு ஏட்டையும், இதழ்களையும் தொடர்ந்து படிப்பது நல்லது என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது. ஆனால், அறிவாளிகளுக்கான அளவுகோல் என்று ஒரே ஒரு பத்திரிகை படிப்பதை மட்டும் கூறுவது என்பது பகுத்தறிவுக்கு பொருத்தமான அளவுகோல்தானா என்பதை அவர் சிந்தனைக்கே விட்டு விடுகிறோம். திரையுலகில் முன்னணி கலைஞராகத் திகழும் ரஜினிகாந்த், பெரியாரை விமர்சிப்பதன் மூலம் மதவெறி சக்திகளுக்கு துணைபோகிற வகையில் கருத்துக்களை தெரிவிப்பது மக்கள் நலனுக்கு உகந்தது அல்ல. ஏற்கனவே திருவள்ளுவரையும் என்னையும் காவிமயப்படுத்த முடியாது என கூறியவர், தற்போது தன்னைத் தானே காவிமயப்படுத்திக் கொள்ளும் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்பதே தமிழக மக்களின் விருப்பமாகும்.

;