நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக, கோவையில் உள்ள பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இருவர் மீது புகார் எழுந்துள்ளது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக உதித் சூர்யா என்ற மாணவர் சிக்கினார். இதை அடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான ஆவணங்களைச் சரிபார்க்கும்படி மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், கோவையில் உள்ள பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கப்பட்ட மாணவர்கள் இருவரின் ஆவணங்களில் உள்ள புகைப்படங்கள் வேறு வேறாக இருந்துள்ளது. எனவே, இதுகுறித்து பிஎஸ்ஜி கல்லூரி நிர்வாகம், மருத்துவக் கல்லூரி இயக்குநர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தது.
இதுகுறித்து கோவை பிஎஸ்ஜி கல்லூரி டீன் ராமலிங்கம் செய்தியாளர்களுக்குப் பேட்டியில், ”அரசு உத்தரவுப்படி, அனுமதிக்கப்பட்ட 150 மாணவர்களின் அனைத்து விதமான சான்றிதழ்களையும் அனைவரிடமும் சரி பார்த்தோம். அதில் இருவரது புகைப்படங்கள் மாறுபட்டு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
நீட் அட்மிட் கார்டில் இருப்பவர் புகைப்படமும் , தேர்வுக்குழு வழங்கிய அட்மிட் கார்டில் இருந்த புகைப்படமும் மாறுபட்டு இருப்பதால் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அம்மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து பேசி உள்ளோம். முறைகேடு நடைபெற்று இருக்கிறதா இல்லையா என தேர்வுக்குழு தான் நிருபிக்க வேண்டும். தேர்வுக்குழுவிடம் உள்ள மாணவர்களின் கைரேகைகளைக் கொண்டு சரிபார்க்க மாணவர்கள் இருவரையும் சென்னை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், மருத்துவர் படிப்பில் சேர தேர்வுக் குழுவால் கொடுக்கப்பட்ட இரு மாணவர்களின் அலாட்மெண்ட் கடிதத்தில் இருந்த புகைப்படமும், எங்களுக்கு கொடுக்கப்பட்ட புகைப்படமும் ஒரே மாதிரி இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.