சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டு, கோவில்பட்டி சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் இறந்துவிட்டார்கள். இச்செய்தி கேட்டு சாத்தான்குளம் ஸ்தம்பித்தது. மாநிலமே கொந்தளித்தது. நாடே அதிர்ச்சியுற்றது. ஆனாலும் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் நெஞ்சுவலி, மூச்சுத் திணறல் ஆகிய காரணங்களால் இருவரும் இறந்துவிட்டார்கள் என்றார். முதலமைச்சரும் அதே காரணத்தையே கூறினார். அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டி சிறையில் இறந்தவர்களை எப்படிக் காவல்நிலைய மரணம் என்று சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
மக்களின் கோபாவேசம்
காவலர்கள் மீது 302வது பிரிவின்கீழ் கொலைவழக்குபதிவு செய்கின்ற வரையில் இறந்தவர்களின் உடலை வாங்க மாட்டோம் என்று அவர்களுடைய குடும்பம் உறுதியாகப் போராடியது. சாத்தான்குளம் நகர மக்கள் மட்டும் அல்ல, கடையடைப்பு நடத்தி மாநிலமே அந்தக் குடும்பத்தின் பின்னால் நின்றது. ஊரடங்கு இல்லை என்றால் இன்றும் பல மடங்கு மக்களின் கோபாவேசத்தை நாம் பார்த்திருக்க முடியும். உடற்கூறு பரிசோதனையை வீடியோ எடுக்க வேண்டும் என்று ஜெயராஜின் மனைவி உயர்நீதிமன்றத்திற்கு மனு அளித்தார். வீடியோ எடுக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அமர்வு நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அந்த வழக்கை இருவரும் தாமாகவே விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிட்டனர். மாஜிஸ்ட்ரேட் விசாரணை அறிக்கையையும், உடற்கூறு அறிக்கையையும் ஆதாரமாக வைத்து, நீதிபதிகள் இருவரும் 302 பிரிவின்கீழ் வழக்கைப் பதிவு செய்வதற்கான முகாந்திரம் இருக்கிறது என்று கூறி, புலன்விசாரணையைத் தொடங்க சிபிசிஐடிக்கு உத்தரவிட்டார்கள்.
சிபிசிஐடி விசாரணை தொடங்கி 302ன் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஓர் ஆய்வாளர், இரண்டு உதவி ஆய்வாளர்கள், இரண்டு காவலர்கள் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். இந்தச் செய்தி அறிந்து தமிழகமே நிம்மதிப் பெருமூச்சுவிட்டது. இந்தப் பிரச்சனை பற்றி அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களிலும், மக்கள் மத்தியிலும் தொடர்ச்சியாக விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அந்த விவாதங்களில் உயர்நீதிமன்ற உத்தரவைப் பாராட்டுகிற அதே நேரத்தில், எதிர்காலத்தில் இத்தகைய சித்தரவதையைத் தடுத்து நிறுத்த முடியுமா? ஏன் தொடர்ச்சியாக காவல்நிலைய மரணங்களில் ஈடுபடக்கூடிய காவலர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்? இவற்றை எப்படித் தடுப்பது? என்பதுதான் மையப்புள்ளியாக இருக்கிறது.
நேர்மையான புலனாய்வு நடப்பதில்லை
பொதுவாக காவல்நிலைய மரணங்கள் நடந்த பிறகு ஆளும் அரசு, உயர் காவல்துறை அதிகாரிகள், இது காவல்நிலைய மரணம்தான் என உறுதியாக நடவடிக்கை எடுப்பதில்லை. சிபிசிஐடியோ, காவல்துறையோ புலன்விசாரணை செய்கிறபோது, நேர்மையாக புலனாய்வு செய்யவும் அனுமதிப்பதில்லை. புலனாய்வு செய்யக்கூடிய காவல்துறை அதிகாரிகளும் லாக்கப் கொலைகளில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு புலனாய்வு செய்கிறார்கள்.
ஏதாவது ஓர் இடத்தில் ஒருவர் இன்னொருவரை வெட்டிக் கொன்றால் அது கொலை வழக்கு. அதுவே காவல்நிலையத்தில் காவலர் ஒருவரை அடித்துக்கொன்றால் அது சந்தேக மரணம். இதுதான் இன்றுள்ள சட்டம். கடந்த மூன்று ஆண்டுகளில் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு 5300 காவல்நிலைய மரணங்கள் பற்றிய புகார்கள் வந்துள்ளன. (இந்த எண்ணிக்கையைவிட அதிக மரணங்கள் நடந்து புகார் செய்யப்படாமல் இருக்கும் வாய்ப்புகளே அதிகம்.) 2000ல் இருந்து 2018 வரையில் 1727 காவல்நிலைய மரணங்கள் மட்டுமே வழக்குகளாக நீதிமன்ற விசாரணைக்கு சென்றது. இதன் பொருள் பெரும்பான்மையான காவல் நிலைய மரணங்கள் கொலை வழக்குகளாகப் பதிவு செய்யப்படுவதில்லை என்பதுதான். இந்த 1727 வழக்குகளில்கூட வெறும் 26 காவலர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர்.
குற்றவியல் சட்டத்தில் திருத்தம்
2005 வரையில் காவல்நிலைய மரணங்கள் சந்தேகத்துக்கு உரிய மரணங்கள் என இந்தியக் குற்றவியல் சட்டம் 174ன் கீழ் வழக்காகப் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கை இந்தியக் குற்றவியல் சட்டம் 176ன் கீழ் ஆர்டிஓ விசாரணை மேற்கொள்வார். இந்த நடைமுறையில், உண்மைகள் மறைக்கப்பட்டு, பல கோளாறுகளும், பிரச்சனைகளும் ஏற்பட்ட கசப்பான அனுபவத்துக்குப் பிறகு, 2005 ஆம் ஆண்டு 176 குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு 176 (1A) என்ற உட்பிரிவு சேர்க்கப்பட்டது. அந்தத் திருத்தத்தின்படி காவல்நிலையத்தில் மரணம் ஏற்பட்டால், மாஜிஸ்ட்ரேட் விசாரணை மேற்கொள்வார். இதன் அடிப்படையில்தான் சாத்தான்குளம் தந்தை மகன் காவல்நிலைய மரணத்தில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிட்டது.
சித்ரவதைக்கு எதிரான உடன்படிக்கை
தொடர்ந்து பல ஆண்டுகாலமாகக் காவல்நிலையங்களில் சித்திரவதை செய்யப்பட்டு மரணம் அடைவது தொடர்கதையாக நீடித்து வருகிறது. காவல்நிலையத்தில் விசாரணை செய்கிறபோது சித்திரவதை செய்வது சட்டவிரோதம். இத்தகைய சித்திரவதைகளைத் தடுப்பதற்கு இந்தியாவில் கடந்த 72 ஆண்டுகளில் எந்தச் சட்டமும் இல்லை. கைது செய்து, விசாரணை இல்லாமல், ஜாமீனில் வெளியே விடாமல், பல ஆண்டுகள் சிறையில் அடைக்கக்கூடிய தேசிய புலனாய்வு முகமை, சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் போன்ற மனித உரிமைகளைப் பறிக்கும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனாலும், காவல்நிலைய சித்திரவதைகளைத் தடுத்து, மனித உரிமைகளைக் காப்பதற்கான சட்டம் எதுவும் சுதந்திர இந்தியாவில் கொண்டு வரப்படவில்லை.
இந்தப் பின்னணியில் தான் 1997 ஆம் ஆண்டில், ஐ.நா.மன்றத்தின் முன்முயற்சியில், சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கை என்ற ஐக்கிய நாடுகளின் சிறப்பு மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் இந்திய அரசின் பிரதிநிதி கலந்துகொண்டு, உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டது. இதன் அடிப்படையில் சித்திரவதையைத் தடுப்பதற்கான முறையான சட்டத்தை இந்தியாவில் கொண்டு வர வேண்டும். 2010 ஆம் ஆண்டில் ஒரு மசோதா தயாரிக்கப்பட்டு மக்களவை விவாதங்களுக்குப் பிறகு, மாநிலங்களவைக்கு சென்றது. மாநிலங்களவை தெரிவுக்குழுவிற்கு அந்த மசோதாவை அனுப்பியது. பிறகு அந்த மசோதா வெளிச்சத்துக்கு வராமல் உயிர்விட்டது.
சட்டக் கமிஷனின் மசோதா
2017 ஆம் ஆண்டில் தேசிய சட்டக் கமிஷன் சித்தரவதையைத் தடுக்கும் ஒரு மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பியது. அந்த மசோதாவின்படி, காவல்நிலையத்தில் சித்ரவதையால் ஒருவர் இறந்தால், தங்களுடைய சித்திரவதையால் அவர் இறக்கவில்லை என்று சம்பந்தப்பட்ட காவல்துறையினர் நிரூபிக்க வேண்டும். (பொதுவான வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்தான் குற்றம் புரிந்தார்கள் என்று அரசு நிரூபிக்க வேண்டும்) காவல்நிலைய லாக்கப்களில் எந்த ஆதரவும் இல்லாமல், நிராயுதபாணியாக இருக்கும் மக்களைப் பாதுகாக்க வேண்டியவர்களே சித்திரவதை செய்து கொல்லும் கொலையாளிகளாக மாறும்போது, இத்தகைய சம்பவங்களுக்கு யாரும் சாட்சி கூற முடியாது. என்ன நடந்தது என்பது வெளியில் தெரியாது. அதனால், இத்தகைய சம்பவங்களுக்கு வெளியில் உள்ள யாரும் சாட்சி கூறவும் முடியுது. சககாவலாளிக்கு எதிராக காவல்துறையினர் சாட்சி சொல்ல வரமாட்டார்கள். (சாத்தான்குளம் காவல்நிலைய தலைமை பெண் காவலர் சாட்சி சொன்னது விதிவிலக்கு). அதுமட்டுமல்ல, சாத்தான்குளத்தில் நடந்தது போல ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற பெயரில் போலீஸ் நண்பர்கள் எனக் கூறி பலர் காவல்துறையினரின் அடியாட்களாக பயன்படுத்தப்படுகிறார்கள். அந்த நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்ற குரலும் தற்போது ஓங்கி ஒலித்துள்ளது. எனவே தேசிய சட்டக் கமிஷன் அளித்துள்ள மசோதாவை மத்திய அரசு உடனடியாக சட்டமாக நிறைவேற்ற வேண்டும். அதுதான் சாத்தான்குளம் காவல்நிலைய மரணத்தில் இருந்து, அரசும், மக்களும் பெற வேண்டிய படிப்பினை.
அரசின் அடக்குமுறைக் கருவி
இந்தியா போன்ற சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பு உள்ள நாடுகளில் காவல்துறை என்பது அரசின் அடக்குமுறைக் கருவியாகவே இருக்கிறது. ஆளும் வர்க்கங்களின் நலன்களைப் பாதுக்காக்கவே இயங்குகிறது. ஸ்டெர்லைட் படுகொலை இதற்கு மிகச்சிறந்த உதாரணம். ஜனநாயகம் உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகள் வருகிறபோது, மனித உரிமைகளைப் பறிக்கும் முறையிலேயே இந்தத் துறை இயங்குகிறது. எனவே, சித்திரவதையைத் தடுக்கும் இத்தகைய சட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும், அவை அமலாவதென்பது, மக்கள் கொடுக்கும் நிர்ப்பந்தம் மற்றும் நீதித்துறையின் தலையீட்டைப் பொறுத்தே உள்ளது. பல காவல்நிலைய மரணங்கள் குறித்த வழக்குகளில், உச்சநீதி மன்றமும், உயர்நீதிமன்றங்களும் காவல்நிலைய சித்திரவதையைத் தடுப்பதற்கான பல நடைமுறைகளை வலியுறுத்தியுள்ளன. ஆனாலும் அவை, பெரும்பான்மையாக ஏட்டில் மட்டுமே உள்ளன.
இதே சாத்தான்குளத்தில் காவல்நிலையத்தில் சித்திரவதைக்கு உள்ளாகி மருத்துவமனையில் ஒருவர் இறந்த ஒரு வழக்கை, சம்பந்தப்பட்ட குடும்பத்தை மிரட்டி காவல்நிலைய மரணம் இல்லை என வழக்கை முடித்துவிட்டார்கள். தமிழகத்தில் சிதம்பரம் காவல்நிலையத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பத்மினி வழக்கிலும், தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தியில் பழங்குடியின மக்களை கொடூரமாக தாக்கி மானபங்கப்படுத்திய வனத்துறை மற்றும் காவல்துறை மீது தொடுக்கப்பட்ட வழக்கிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகுதான் காவல்துறையினர் தண்டிக்கப்பட்டனர் என்பதை தமிழகம் அறியும். சாத்தான்குளம் தந்தை - மகன் லாக்கப் மரணத்திலும், மக்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சியும் ஒரு அழுத்தத்தைக் கொடுத்தது. மனித உரிமைகளைக் காக்க சட்டங்களும் வேண்டும், சட்டங்களை நடைமுறைப்படுத்திட மக்களைத் திரட்டிப் போராடவும் வேண்டும்.