பெங்களூரு,ஜூலை 19- நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமல் ஆளுநரின் கெடு நிராகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது. இந்த நிலையில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து, பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் கொடுத்தனர். இந்த ‘அதிருப்தி’ எம்.எல். ஏ.க்களின் ராஜி னாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்கவில்லை. இதற்கிடையே சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க தயார் என்று முதல்வர் குமாரசாமி அறிவித்தார். இதனையடுத்து சட்டமன்றத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இதன்மீது விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் வெள்ளியன்று மாலை 6 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் குமார சாமிக்கு ஆளுநர் வஜுபாய் வாலா மீண்டும் கடிதம் அனுப்பினார்.
இதுகுறித்து சட்டமன்றத்தில் முதல்வர் குமாரசாமி பேசுகையில், “குதிரை பேரம் நடக்க வாய்ப்புள்ளதால் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநர் என்னை நிர்ப்பந்தித்துள்ளார். ஆளு நர் மீது எனக்கு மரியாதை உண்டு. ஆனால் ஆளுநரின் இரண்டாவது கடிதம் என்னை காயப்படுத்தியுள்ளது. குதிரை பேரம் பற்றி 10 நாட்களுக்கு முன்புதான் அவருக்குத் தெரி யுமா? (சுயேட்சை எம்.எல்.ஏ எச்.நாகேஷுடன் எடியூரப்பா விமானத்தில் ஏறியதாகக் கூறப் பட்ட புகைப்படங்களை குமாரசாமி காட்டினார்). பாஜகவினர் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக நாங்கள் புகார் அளித்த போது ஆளுநருக்கு தெரியவில்லையா?. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்து சபாநாயகர்தான் முடிவு எடுக்க வேண்டும்’ என்று கூறினார்.
விவாதத்திற்குப் பின்னர் சட்ட மன்றத்தில் சபாநாயகர் ரமேஷ்குமார் பேசுகை யில், காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முய ற்சிக்கும் பாஜகவின் செயல் மோசமானது ஆகும். இதை நாம் அனுமதிக்கக் கூடாது. இன்றைக்கு நானும், எம்.எல்.ஏ.க்களும் பேசிய பேச்சுகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க மாட்டோம். அவை கட்டாயம் அவைக்குறிப்பில் இடம்பெறும். நம்பிக்கை வாக்கெடுப்பை முதல்வர் குமாரசாமி கொண்டு வந்துள்ளார். இந்த தீர்மானம் என்பது சட்டசபையின் சொத்தாகும். இதில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை. இந்த தீர்மானத்தின் மீது சட்டமன்ற த்தில் விவாதம் நடக்கிறது. இந்த சபை நட வடிக்கையில் குறுக்கிட்டு கெடு விதிப்பதற்கு ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. சபை செயல்பாடுகளில் தலையிடவும் அவ ருக்கு அதிகாரம் கிடையாது. எனவே இதில் அவர் கெடு விதிக்க வேண்டியது இல்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு உரிய நேரத்தில் நடத்தப்படும் என்று கூறினார். இரவு 8.30 மணி வரை சட்டமன்றக் கூட்டம் நடைபெற்ற நிலையில், திங்கள் காலை 11 மணி வரை ஒத்தி வைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.