புதுதில்லி:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட சாலைகள் மற்றும் பாலங்களைச் சீரமைக்கத் தமிழக அரசுக்கு ரூ.159 கோடி நிதியுதவி வழங்குவதாக நபார்டு வங்கி அறி வித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கஜா புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் புதுக்கோட்டை, தஞ்சாவூர்,நாகப்பட்டினம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
வேளாண் நிலங்களும், மரங்களும், சாலைகளும், பல்வேறு கட்டுமானங்களும் சேதமடைந்தன. கஜா புயலால் பாதிக்கப்பட்ட சாலைகள் மற்றும் பாலங்களைச் சீரமைப்பதற்காகத் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியான நபார்டு, தமிழக அரசுக்கு ரூ.159 கோடி நிதியுதவி வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த நிதியைக் கொண்டு புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் கிராமப்புறங்களில் உள்ள 147 சாலைகளும், 115 பாலங்களும் சீரமைக்கப்படுகின்றன. இந்தச் சீரமைப்புப் பணிகளை, 31 2021 மார்ச் மாத நிறைவுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நபார்டு வங்கியின் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து தமிழகத்துக்கு இந்த உதவி வழங்கப்படுகிறது.நபார்டு வங்கியுடன் உதவியுடன் தமிழகத்தில் பல்வேறு ஊரக உள்கட்ட மைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.