tamilnadu

வெளிநாடு தப்பிச்செல்ல முயன்ற ஜெட் ஏர்வேஸ் நிறுவனர், மனைவி

புதுதில்லி,மே 26-லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல், மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் வெளிநாடு தப்பிச்செல்ல முயன்ற போது சுங்கத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள னர். ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கடன்சுமை, குத்தகை மற்றும் சம்பளப் பாக்கி போன்ற நிதிப் பிரச்சனைகள் காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.மேலும், அந்த நிறுவனத்தில் பணி புரியும் 20 ஆயிரம் ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்பட வில்லை. இந்நிலையில், ஜெட் நிறுவனர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயலும் துபாய் சென்று அங்கிருந்து லண்டன் செல்வதற்காக மும்பை விமானநிலையத்துக்கு சென்றனர். ஆனால், அவர்கள் இருவரும் விமானநிலையத்திலேயே சுங்கத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர். முன்னதாக அவர்கள் இருவரும் விமானத்தில் ஏறிவிட்டனர்.விமானம் கிளம்பத் தயாரானபோது, திடீரென நிறுத்தப்பட்டது. பின்னர், தம்பதியர் இருவரும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர்.‘நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் அவர்கள் வெளிநாடு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர்’ என்று கூறப்படுகிறது.