tamilnadu

img

இடைத்தேர்தல்: திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு சிபிஎம் ஆதரவு

மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் செவ்வாய்கிழமை செப்-24ல் துவங்கி மூன்று நாட்கள் புதுச்சேரியில் நடைபெறுகிறது. கட்சியின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே.ரங்கராஜன் எம்.பி., உ.வாசுகி, பி.சம்பத், அ. சவுந்தரராசன் உட்பட மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில்  தமிழகத்தில்  நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி மாநிலம் காமராஜர் நகர் தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு முடிவு செய்கிறது. மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பாஜக தலைமையிலான கூட்டணி அரசு அரசியல் சட்ட நெறிகளின் மீது தொடர்தாக்குதல் நடத்தி வருகிறது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, மாநில உரிமைகள், மனித உரிமைகள் என அனைத்தும் சிதைக்கப்படுகின்றன.

இந்தியாவின் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி முற்றி வருகிறது. கார் கம்பெனி முதல் பிஸ்கட் கம்பெனி வரை மூடப்படுகின்றன. லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.  பாதிக்கப்படும் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், சிறு-குறு தொழில் முனைவோர் மற்றும்  தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு பதிலாக கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கருணை மழை பொழிகிறது மோடி அரசு.

மத்தியில் உள்ள பாஜக கூட்டணி அரசில் பினாமி போலவே தமிழக அதிமுக அரசு மாறிவிட்டது. மோடி அரசு கொண்டு வரும் அனைத்து மக்கள் விரோத திட்டங்களையும் எவ்வித எதிர்ப்பும் இன்றி உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது.

நீட் தேர்வு முதல் ஹைட்ரோ கார்பன் திட்டம் வரை மத்திய மாநில அரசுகள் இணைந்து தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடி வருகின்றன. இந்தப் பின்னணியில் தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலிலும் மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டியுள்ளது. விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜர் நகர் தொகுதிகளில் அதிமுக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டியது அவசியமாகும். எனவே இந்த  தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பது என்றும், அவர்களது வெற்றியை உறுதி செய்ய கூட்டணி கட்சிகளோடு இணைந்து தீவிரமாக களப்பணியாற்றுவது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு முடிவு செய்கிறது.