tamilnadu

img

குழப்பத்தின் உச்சத்தில் உள்ளாட்சி வாக்காளர் பட்டியல்

இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. வழக்கமாக ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும் முகாம்களில் புதிதாக பெயர் சேர்த்தல், இரட்டைப்பதிவு, இடம் மாறிச் சென்றவர்கள், இறந்தவர்கள் பெயர்நீக்கப்படும். புகைப்படம் மாறி இருந்தாலும், முகவரி, வயது மாறி இருந்தாலும் திருத்தம் செய்ய படிவங்கள் பெறப்படும்.இந்த முகாம்களில் வாக்காளர்கள் படிவங்களை நேரில் சென்று கொடுப்பார்கள். பிறகு களப்பணியாளர்கள் சம்பந்தப்பட்ட முகவரிக்கு நேரில் சென்று விசாரிப்பார்கள் இது வழக்கமான நடைமுறை. ஆனால் இந்த முறை நடத்தப்படும் வாக்காளர் சரிபார்த்தல் பணி என்பது வேறு. குறிப்பாக தேர்தல்அலுவலக பணியாளர்கள், வாக்காளரின் முகவரிக்கு நேரில் சென்று வாக்காளரின் அனைத்து விபரங்களும் சரியாக உள்ளதா என்றும் தவறாக இருந்தால் உதாரணமாக, புகைப்படம் மாறி இருந்தால் சரியான புகைப்படம், கருப்பு வெள்ளை புகைப்படத்திற்கு கலர் புகைப்படம், இறந்தவர்களை நீக்குதல், மாறி வந்தவர்கள் புதிய முகவரி மாற்றம் செய்தால், குடியிருப்பில் இல்லாமல் வேறு பகுதிக்கு சென்றவர்களை நீக்குதல் என பிழையில்லாத வாக்காளர் பட்டியல் சரிசெய்யும் பணி மற்றும் வாக்காளர் எண்ணுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஆவணங்களை இணைத்தல் இணையதளம் மூலம் நடைபெற வேண்டும்என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மேற்கண்ட தவறுகளை சரிசெய்து வாக்காளர் எண்ணுடன் ஒரு ஆவணத்தை இணைக்க வேண்டும் என்பதுதான் உத்தரவு.

தற்போது தமிழகத்தில் மேற்கண்ட தவறுகளை சரி செய்யாமல் வாக்காளர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பணி மட்டும் தான் நடைபெறுகிறது. இதனால் மக்கள் பணம் வீணாகிறது. பிழைகளுடன் கூடிய வாக்காளர் பட்டியல் தான் மீண்டும்வரும்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு, மேற்கண்ட ஆவணங்களை இணைப்பதை தவிர்த்து மக்கள் பணம் வீணாகாமல் வழக்கமாக நடைபெறும் முகாம்கள் மூலம் தான் நடத்த வேண்டும்; இணைய தளம் என்பது எல்லா வாக்காளர்களுக்கும் நடைமுறையில் கிடைப்பது அரிது; ஸ்மார்ட்போன் வைத்துள்ள மக்கள் குறைவு, எனவே வழக்கமாக  நடைபெறும் முறையில்தான் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியுள்ளது.
இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையம், உள்ளாட்சி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப்பட்டியலில் பெயர் இல்லாத வாக்காளர்கள்விண்ணப்பிக்கலாம் என்று சொல்லியுள்ளது. ஆனால் விண்ணப்பம் ஸ்மார்ட்போன் மூலம் தான் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.வாக்காளர்களை சேர்ப்பதற்கு மாநில தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம்இல்லை. மத்திய தேர்தல் ஆணையம் தான் வாக்காளர்களை சேர்க்க வேண்டும். ஆனால் மத்திய தேர்தல் ஆணையம் இணையதளத்தின் மூலம்தான் வாக்காளர்களை சேர்க்க முடியும் என்று கூறியுள்ளது இதனால் எளிய மக்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
உள்ளாட்சி வாக்காளர் பட்டியல், வார்டு மறுவரையறை வாக்காளர் பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரிகள், வார்டு மறுவரையறை செய்யப்பட்ட எல்லைக்குள் உள்ள வாக்காளர்கள் பெயர் எதுவும் விடுபடவில்லை என்று சான்றளித்து வாக்காளர்பட்டியல் வெளியிட்டுள்ளார்கள். ஆனால் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் என்பது குழப்பத்தின் உச்சத்தில் உள்ளது. உதாரணமாக திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரத்தில் மறுவரை செய்யப்பட்ட எல்லைக்குள் இருக்கவேண்டிய வாக்காளர்கள் சம்பந்தமில்லாமல் வேறு வார்டிற்கு நூற்றுக்கணக்கில் மாற்றப்பட்டு உள்ளார்கள்.  உதாரணமாக, பழனி நகரம் 15-ஆவது வார்டு, லட்சுமிபுரத்தில் இருக்கவேண்டிய 128 வாக்காளர்கள் 16 வதுவார்டு, 17 வது வார்டுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். 16வது வார்டு வாக்காளர்கள் 15வது வார்டில் 60 பேருக்கு மேல் இருக்கிறார்கள். ஒரே வார்டில் மூன்று விதமான வாக்காளர்கள் இருக்கக் கூடிய சூழ்நிலை என்பது ஏற்பட்டுள்ளது. தாய் ஒரு வார்டுடிலும், மகன் ஒரு வார்டிலும் எனப் பெயர் உள்ளது. வாக்காளர்களுக்கு தாங்கள் நகர்மன்ற உறுப்பினர் யார் என்பது தெரிந்து கொள்ள முடியாத குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

மேலும் குறிப்பாக பழனி அடிவாரத்தில் 33, 28, 27 ஆகிய வார்டுகள்குழப்பத்தின் உச்சத்தில் ஆழ்த்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள பெயர்கள், ஒவ்வொரு வார்டில்வந்துள்ளது. இதனால் எந்த வேட்பாளரும்ஒரு தெருவில் சென்று முழுமையாக வாக்கு கேட்க முடியாத நிலை என்பது ஏற்பட்டுள்ளது. பழனி நகரில்  17வது வார்டிலும் இதேபோன்ற குளறுபடி உள்ளது. இதை மாற்றுவதற்கு மாநிலதேர்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியர்,நகராட்சி ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரைஎந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதேபோன்ற நிலை, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது. இதனால் வாக்காளர்கள் குழப்பத்தின் உச்சத்தில் உள்ளார்கள். வாக்காளர் பட்டியல், வார்டு மறுவரையறை செய்து உருவாக்குகின்ற பொழுது களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் ஒழுங்குபடுத்துவதற்கு பதிலாக, சட்டமன்ற வாக்காளர் பட்டியலை வைத்து அவர்களாகவே பிரித்து வெளியிட்டதன் காரணமாக இன்றைக்கு வாக்காளர்கள் தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு நகர்மன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க முடியாமல் தங்கள் குடியிருப்பு அல்லாத ஒரு பகுதிக்கு - வேறு ஒரு வார்டுக்குவாக்களிக்க வேண்டிய சூழ்நிலையை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் உருவாக்கியுள்ளன.எனவே மாநில தேர்தல் ஆணையம், குழப்பமான உள்ளாட்சி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களை, குடியிருக்கும் வார்டுக்கு மாற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிஅல்லது வாக்காளர்கள் மனு கொடுத்தால் அதை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இரட்டைப் பதிவு வாக்காளர்கள், இறந்தவர்கள்,  குடியிருப்பிலேயே இல்லாமல் இருப்பவர்களை நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு பிழையில்லா உள்ளாட்சி வாக்காளர் பட்டியல் வெளியிட மாநில தேர்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகள் அவசர, அவசியம் கருதி உடனடியாக செய்திட வேண்டும்.

கே.கந்தசாமி, சிபிஐ(எம்),  பழனி நகரச்  செயலாளர், 
முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்.