காஞ்சிபுரத்தில் அத்திவரதர் பெருவிழாவிற்கு 9 நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் தரிசனத்தின்போது மின்சாரம் தாக்கியதில் 30 பேர் படுகாயம் அடைந்துள்னர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் அத்தி வரதர் வைபவம் நடைப்பெற்று வருகிறது. அந்த வகையில் இன்னும் 10 நாட்கள் மட்டும் அத்தி வரதரை தரிசிக்க முடியும் என்பதால், கூட்டம் அதிகரித்து வருகிறது.
இதனால் அத்தி வரதரை தரிசிக்க 2 நாட்கள் கூட ஆக வாய்ப்புள்ளதால், பக்தர்கள் முன்னெச்சரிக்கையுடன் வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13, 14,16 ஆகிய நாட்களிலும், பக்ரித் சுதந்திரதினம், வார விடுமுறை என மொத்தம் 9 நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்திவரதர் விழாவிற்கு வரும் பக்தர்களின் வாகனங்களை பள்ளி வளாகங்களில் நிறுத்தவும் பக்தர்கள் ஓய்வெடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் காஞ்சிபுரம் நகரபள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அத்திவரதர் தரிசனத்தில் மின்சாரம் தாக்கிய விபத்தில் 30 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த 5 பக்தர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.