tamilnadu

img

பொதுத்துறை வங்கிகளின் இணைப்பை கைவிடுக - வங்கி ஊழியர்கள் போராட்டம்

பொதுத்துறை வங்கிகளின் இணைப்பை கைவிட வலியுறுத்தி  வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் .  இதுகுறித்து 

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் பொதுச்செயலாளர் சிபிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

2019 ஆகஸ்ட் 30ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 10 பொதுத்துறை வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக மாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார். பொதுத்துறை வங்கிகள் இணைப்பு என்பது பெரு நிறுவனங்களுக்கு சாதகமாகவும், சாமான்ய மக்களுக்கு எதிராகவுமான நடவடிக்கையாகும். இதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான கிளைகள் மூடப்படும். பெரும் கடன் அதிகரிக்கும். சிறு கடன்கள் குறைக்கப்படும். சாமான்ய மக்கள் மீதான அபராதத் தொகை கூட்டப்படும். இதற்கு முன்பு நடைபெற்ற ஸ்டேட் வங்கி இணைப்பின் அனுபவமும் இதுதான்.

இந்த இணைப்பு வங்கிகள் தனியார் மயத்தின் முதல் படியாகும். ஸ்டேட் வங்கி, இணைப்பிற்கு பிறகு ஜியோ வங்கியின் இளைய பங்காளியாக மாறியுள்ளது. பெரு நிறுவனங்களின் வராக் கடனை முழுமையாக வசூலிப்பதற்கு பதிலாக ஐபிசி சட்டத்தின் மூலமாக அவற்றின் பெரும் பகுதி தள்ளுபடி செய்யப்படுகிறது. வங்கிகளில் போதுமான ஆட்கள் நியமனம் இல்லை. இதன் காரணமாக சிறு கடனாளிகளுக்கான கடன் மறுக்கப்படுகிறது. எனவே, வங்கிகள் இணைப்பை கைவிடக் கோரியும், பெரு நிறுவனங்களிடமிருந்து வராக் கடனை கறாராக வசூலிக்க வலியுறுத்தியும், சாமான்ய வாடிக்கையாளர் மீது விதிக்கப்படும் அபராதத் தொகையை கைவிடக் கோரியும், வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தக் கோரியும், வங்கிகளின் போதுமான எண்ணிக்கையில் பணியாளர்கள் நியமனம் கோரியும் 22.10.2019 செவ்வாய்கிழமை அன்று நாடு முழுவதிலுமுள்ள வங்கி ஊழியர்கள்  பிஇஎப்ஐ மற்றும் ஏஐபிஇஏ சங்கங்களின் அறைகூவலை ஏற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இம்மாதம் 26, 27 ஆகிய 2 நாட்கள் 4 அதிகாரிகள் சங்கங்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். போராடும் அதிகாரிகளுக்கு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தனது சகோதர ஆதரவை தெரிவிக்கிறது.

(சி.பி.கிருஷ்ணன்)

பொது செயலாளர்