tamilnadu

img

ஹிட்லரின் பாசிசத்தை முறியடித்த 75 ஆம் ஆண்டு - அ.அன்வர் உசேன்

மே 9 ஆம் நாள் ஹிட்லர் தலைமையிலான பாசிசத்தை எதிர்த்த போரில் உலக ஜனநாயக சக்திகள் வெற்றிக் கொடியை நிலைநாட்டிய நாள். இந்த நாளில்தான் பெர்லின் அரண்மனையின் உச்சியில் செஞ்சேனை வீரர்களால் செங்கொடி ஏற்றப்பட்டது. இன்று அந்த வெற்றியின் 75 ஆவது ஆண்டு கொண்டாடப்படுகிறது. கோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக பொது வெளியில் பிரம்மாண்ட விழாக்கள் திட்டமிடப்படவில்லை. எனினும் இதன் முக்கியத்துவம் சற்றும் குறைந்தது அல்ல! ஜெர்மனியின் ஹிட்லர்/ இத்தாலியின் முசோலினி/ ஜப்பானின் டோஜோ ஆகியோரின் பாசிசக் கூட்டணியை எதிர்த்து ஒரு பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் கூட்டணி அமைத்து மக்களை காப்பாற்ற வேண்டும் என சோவியத் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்தது.

கண்ணை மறைத்த கம்யூனிச எதிர்ப்பு

அந்த வேண்டுகோளை பிரான்சு, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் செவி மடுக்கவில்லை. ஏகாதிபத்தியவாதிகளின் கணக்கோ வேறு மாதிரியாக இருந்தது. அவர்களுக்கு சோசலிசப் புரட்சிதான் பாசிசத்தைவிட அதிக பயத்தை அளித்தது. எனவே பாசிசம் உருவாவதும் அது சோசலிசத்தை அழிக்க முன்வருவதும் தமக்கு சாதகம்தான் என எண்ணினர். இதனை அமெரிக்க ஜனாதிபதி ஹென்றி ட்ரூமனின் கீழ்க்கண்ட கூற்று மிகத் தெளிவாக வெளிப்படுத்தியது:

“ஜெர்மனி வெல்வது போல சூழல் உருவானால் நாம் ரஷ்யாவுக்கு உதவ வேண்டும். ரஷ்யா வெல்வது போல சூழல் உருவானால் நாம் ஜெர்மனிக்கு உதவ வேண்டும். அந்த வகையில் அவர்களுக்குள் போரிட்டுகொண்டு அதிகபட்சம் ஒருவருக்கொருவர் கொன்று குவித்துக்கொள்ளட்டும்.” கம்யூனிச எதிர்ப்பு அவர்களின் கண்களை மறைத்தது என்பதற்கு ட்ரூமனின் இக்கூற்று சிறந்த எடுத்துக்காட்டு. எனினும் ஒற்றுமைக்கு சோவியத் யூனியன் தொடர்ந்து கடினமாக உழைத்தது. அதே சமயத்தில் போருக்கு தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டது. 1941ல் ஹிட்லர் சோவியத் யூனியனை தாக்கியபொழுது அது தன்னந்தனியாகப் போரிட்டது. 

கடைசிச் சொட்டு இரத்தம் இருக்கும் வரை

1941 ஆம் ஆண்டு ஜூலை 31 அன்று சோவியத் மக்களுக்கு ஆற்றிய உரையில் ஸ்டாலின் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்: “ஜெர்மனியுடன் நடக்கும் இந்த யுத்தம் சாதாரண யுத்தம் அல்ல. இது இரண்டு இராணுவங்களுக்கு இடையே நடக்கும் யுத்தம் அல்ல. மாறாக இந்த யுத்தம் என்பது பாசிச ஜெர்மனி இராணுவத்திற்கு எதிராக அனைத்து சோவியத் மக்களின் வரலாறு காணாத யுத்தம் ஆகும்.” அவர் மேலும் கூறினார்:

“செஞ்சேனையும் சோவியத் மக்களும் நமது கிராமங்களையும் நகரங்களையும் பாதுகாக்க கடைசிச் சொட்டு இரத்தம் இருக்கும் வரை போராட வேண்டும்” என்றார். மேலும் இந்தப் போரில் உலகில் உள்ள அனைத்து ஜனநாயக எண்ணம் கொண்ட மக்களின் ஆதரவும் நமக்கு உள்ளது என ஸ்டாலின் கூறினார். சோவியத் மக்கள் காட்டிய வீரமும் தீரமும்தான் ஹிட்லருக்கு முதல் தோல்வியை அளித்தது. அதற்குப் பின்னர்தான் ஏனைய முதலாளித்துவ நாடுகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. இப்போரில் சோவியத் யூனியனின் தியாகம் அளப்பரியது. குறிப்பாக சோவியத் மக்களின் உயிர்த் தியாகம் ஈடு இணையற்றது. இதனை கீழ்க்கண்ட விவரங்கள் தெளிவாக்கும். உலகப்போரில் ஏற்பட்ட உயிரிழப்பு பற்றிய சில விவரங்கள்:

 தேசம் ராணுவ வீரர்கள்   குடி மக்கள்  மொத்தம்
 சோவியத் யூனியன்       97,50,000    1,32,04,000   2,29,54,000
 சீனா         35,00,000    1,15,00,000  1,50,00,000
 பிரிட்டிஷ் இந்தியா       87,000    20,00,000   20,87,000
 பிரான்சு       2,17,600    2,67,000   4,84,600
 பிரிட்டன்       3,82,700     67,100     4,49,800
 அமெரிக்கா        4,16,800     1,700    4,18,500

சோவியத் யூனியன் பல இயற்கை வளங்களையும் இழந்தது. ஆயிரக்கணக்கான நகரங்கள், பல்லாயிரக்கணக்கான கிராமங்கள் அழிந்தன. 61,600 கி.மீ. நீளமுள்ள இருப்புப் பாதையும் 90% நிலக்கரிச் சுரங்கங்களும் அழிக்கப்பட்டன. 30,000க்கும் அதிகமான ஆலைகளும் தரைமட்டமாயின. 84000 பள்ளிகளும் 43000 நூலகங்களும் அழிந்தன. 3 கோடி கால்நடைகள் மடிந்தன.

இரண்டாம் உலகப்போரில் மொத்தம் 2.36 கோடி இராணுவ வீரர்களும் 4.20 கோடி மக்களும் ஆக மொத்தம் 6.56 கோடி பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்புகளில் மூன்றில் ஒரு பங்கு சோவியத் யூனியனுடையது. இந்த மகத்தான தியாகம்தான் பாசிசத்திடமிருந்து உலகைக் காப்பாற்றியது. அப்பொழுது சோசலிச நாடாக இல்லை என்றாலும் சீனாவும் 1.5 கோடி உயிர்களை இழந்தது. பாசிச எதிர்ப்புப் போரில் சீன கம்யூனிஸ்டு கட்சி முன்னணியில் இருந்தது. இந்த உன்னதமான தியாகத்தைதான் ஏகாதிபத்தியம் தற்பொழுது இருட்டடிப்புச் செய்ய முயல்கிறது.

21 ஆம் நூற்றாண்டு பாசிசத்தின் வடிவம்

இந்த 75 ஆண்டுகளில் ஏராளமான மாற்றங்கள் நடந்துள்ளன. பாசிசத்தால் வீழ்த்த முடியாத சோசலிசத்தை முதலாளித்துவம் வேறு வழிகளில் பின்னடைவைச் சந்திக்கச் செய்துள்ளது. சோசலிச சமூகத்துக்குள் இருந்த சில பலவீனங்களும் இதற்குக் காரணமாக அமைந்தன. நவீன அறிவியல் தொழில்நுட்ப சூட்சுமங்களை தன் கைகளில் வைத்திருக்கும் முதலாளித்துவம், பொருளாதாரம் மற்றும் இராணுவ வலிமை மூலம் தனது மேலாதிக்கத்தை நீடிக்க முயல்கிறது.

எனினும் சோசலிசத்தின் பின்னடைவு முதலாளித்துவத்திற்கு நிரந்தரமாக உதவவில்லை. மக்களின் உணவு/கல்வி/மருத்துவம் தொடர்பான குறைந்தபட்சத் தேவைகளைக் கூட முதலாளித்துவத்தால் நிறைவேற்ற இயலவில்லை. அதீத பொருளாதார அசமத்துவம் முதலாளித்துவத்துக்கு எதிரான அதிருப்தியை மக்களிடையே மேலும் மேலும் உருவாக்கிக் கொண்டுள்ளது. நவீன தாராளமயக் கொள்கைகளால் உருவான பல தீமைகள் உழைப்பாளிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாகச் சீரழித்துள்ளது.

இவற்றை முதலாளித்துவத்தால் தீர்க்க இயலவில்லை. அதே சமயத்தில் இடதுசாரிகளும் வலுவாக இல்லாத சூழலில் முதலாளித்துவம் தனது இலாபக் கொள்ளையை காத்துக்கொள்ள அதீத வலதுசாரி அரசியலை உருவாக்கி அதற்கு ஆதரவு தருகிறது. ஆளும் அரசியல்வாதிகளின் செயல்களுக்கு சவால் விடுவதால் உழைப்பாளி மக்களின் கணிசமான ஆதரவை இந்த வலதுசாரி சக்திகள் பெற்றுள்ளன. அமெரிக்காவின் டொனால்டு டிரம்ப், பிரிட்டனின் போரிஸ் ஜான்சன், ஹங்கேரியின் விக்டர் ஒர்பான், பிரேசிலின் பொல்சானரோ, துருக்கியின் எர்டோகன், ஆஸ்திரேலியாவின் டாம் மோரிசன் போன்ற பல தலைவர்கள் இந்த பட்டியலில் அடங்குவர். இந்த பட்டியலில் இருக்கும் இன்னொரு மிக முக்கிய பெயர் நரேந்திர மோடி.

இவர்களின் பல செயல்பாடுகள் அன்றைய பாசிசத்தை நினைவுபடுத்துவதாக சமூக ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்கின்றனர். எனினும் அன்றைய ஐரோப்பிய பாசிசம் அப்படியே மீண்டும் தலைஎடுக்க வாய்ப்பு இல்லை. 21 ஆம் நூற்றாண்டு பாசிசம் வேறு வடிவம் எடுக்கும். அதே போல் ஒவ்வொரு தேசத்திலும் அது மண்ணுக்கு ஏற்றவாறு மாறுபட்ட வடிவங்களைக் கொண்டிருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தனக்கு சீனா ஒரு பெரிய சவாலாக உருவாகும் என உலக முதலாளித்துவம் குறிப்பாக அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை. சீனாவின் அதிவிரைவு முன்னேற்றம் அமெரிக்காவுக்கு கடும் சவாலை உருவாக்கியுள்ளது. சில விமர்சனங்களுக்கு ஆளாகியிருந்தாலும் சீனாவின் முயற்சிகள் அமெரிக்க முதலாளித்துவத்தின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. 

கோவிட் 19 வைரஸ் உலக அரசியலுக்கு புதிய பரிணாமத்தை உருவாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவுக்கு எதிராக உலக தேசங்களை ஒன்றிணைக்க அமெரிக்க முயல்கிறது. அதே சமயம் டொனால்டு டிரம்பின் “அமெரிக்க முதன்மை” எனும் அணுகுமுறை சீன எதிர்ப்பு அச்சாணியை பலவீனப்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. சீனாவின் பொருளாதார மீட்சியும் உலக முதலாளித்துவ சக்திகளை அது எப்படி கையாள்கிறது என்பதும் எதிர்கால அரசியலின் முக்கிய அம்சமாக இருக்கும். 

இந்தியப் பாசிசம்

இந்தியாவை பொறுத்தவரை பாசிச ஆர்.எஸ்.எஸ். தனது நச்சுக் கொடுக்குகளை வலுவாகவே விரிவாக்கம் செய்துள்ளது. அதன் அரசியல் வடிவமான பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் பொழுது எல்லையில்லாத வாய்ப்புகளை ஆர்.எஸ்.எஸ். பெறுகிறது. நவீன தாராளமயக் கொள்கைகளும் பாசிசக் கொள்கைகளும் ஒருவித உடன்பாட்டை கொண்டுள்ளன. எனவேதான் பல பாசிச நடைமுறைகளை இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிர்ப்பது இல்லை. தமது சுரண்டலுக்கு பாசிசம் அல்லது மதவாதம் பயன்படும் எனில் ஏன் அதை எதிர்க்க வேண்டும் என்பதே அவர்களின் நிலைபாடாக உள்ளது. சுருக்கமாகச் சொன்னால் மதச்சார்பின்மை மட்டுமல்ல; மத ஒற்றுமை எனும் கேடயத்தையும் இந்திய முதலாளித்துவம் கீழே போட்டுவிட்டது எனில் மிகைஅல்ல. மத ஒற்றுமையை காக்கும் மகத்தான பொறுப்பை உழைக்கும் மக்களின் தோள்களில் வரலாறு சுமத்தியுள்ளது.

இந்தியப் பாசிசம் என்பது 1. வர்ணாசிரமம் மற்றும் சாதிய வேறுபாடுகளை களையாமலே இந்துக்களை ஒன்றுபடுத்துவது. 2. அதற்காக இஸ்லாமியர்களையும் கிறித்துவர்களையும் எதிரிகளாக கட்டமைப்பது 3. இந்துத்துவ தேசியத்தை இந்திய தேசியமாக கட்டமைப்பது 4. தமிழர் உட்பட பல தேசிய இனங்களின் வளமான கலாச்சாரம் மற்றும் அவர்களது மொழிகளை பலவீனப்படுத்தி அழிப்பது ஆகிய நான்கு முக்கிய வழிகளில் தன்னை மேலும் வலுப்படுத்திக் கொள்ள முயல்கிறது.

எனவே, பாசிச எதிர்ப்புப் போர் வெற்றியின் 75வது ஆண்டை கடைப்பிடிக்கும் இந்தத் தருணத்தில் உலக பாசிசப் போக்குகளையும் இந்தியாவில் நிகழும் வேகமான பாசிச நகர்வுகளையும் முறியடிக்க அனைத்து ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையை தேசிய மற்றும் மாநில அளவில் உருவாக்குவது நமது முதன்மைக் கடமையாகும்.