tamilnadu

img

19 ஆண்டுகளாக கழிப்பறையில் வாழும் மூதாட்டி

மதுரை மாவட்டம் ராமநாதபுரத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவர், 19 ஆண்டுகளாக கழிப்பறையில் வசித்து வருகிறார்.

மதுரை மாவட்டம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த மூதாட்டி கருப்பாயி. இவருக்கும் வயது 65. உறவினர்களால் கைவிடப்பட்ட 65 மூதாட்டி, அரசின் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்து இருந்தார். இதற்காக பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றும் அவருக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை. இதனால் குடியிருக்கக் கூட இடமில்லாமல் கடந்த 19 ஆண்டுகளாக மதுரை அனுப்பானடி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான சுகாதார வளாகத்தில் உள்ள கழிவறையில் மூதாட்டி குடியிருந்து வருகிறார். 

இது குறித்து அவர் கூறும்போது, ”அரசின் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்தேன். ஆனால் பலனில்லை. முதியோர் உதவித்தொகைக்காக புரோக்கர்களிடம் 5 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்தேன். ஆனால் அவர்கள் ஏமாற்றிவிட்டனர். கழிவறைகளை சுத்தம் செய்வது தான் எனது வேலை. அதன்மூலம் ஒரு நாளைக்கு 70 முதல் 80 ரூபாய் வரை கிடைக்கும். அதைவைத்து ரேஷன் கடையில் கிடைக்கும் அரிசியை வாங்கி, 3 நாட்களுக்கு ஒருமுறை சமைத்து பசியை போக்கி வருகிறேன்” என்று கூறினார்.

இவரது புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மூதாட்டிக்கு அரசின் ஓய்வுதியம் கிடைக்க, அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.