தஞ்சாவூர் செப்.22- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மாவடுகுறிச்சி ஊராட்சி ஆத்தாகுளம் ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட ஆத்தாளூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் கோயில் தொடங்கி, பட்டுக்கோட்டை சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு பின்புறம் முதல், மாவடுகுறிச்சி ஊராட்சி தென்னங்குடி கீழக்காடு வரை விரிந்து பரந்து சுமார் 113 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆத்தாகுளம் இன்று மண்மேடிட்டு, திடலாக மாறி, தண்ணீர் இன்றி வறண்டு போய் காணப்படுகிறது. ஆத்தாளூர், தென்னங்குடி கீழக்காடு பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களுக்கு, பாசனத்திற்கு முக்கிய நீராதாரமாகவும், கால்நடைகள் தாகம் தீர்க்கவும், விவசாய மற்றும் குடிநீர் ஆழ்துளைக் கிணறுகளுக்கு நீர்மட்டம் உயர்ந்து வரவும், பொது மக்களுக்கு பலவகையிலும் பயன்பட்டு வந்த ஆத்தாகுளம் பொதுப்பணித்துறை அலட்சியத்தால் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், "ஒரு சில இடங்களில், சிலர் மண்ணை அனுமதி இன்றி வெட்டி கடத்தி வருகின்றனர். இதனால் பெரும் பள்ளமாக சில இடங்களில் உள்ளது. பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளதால், மண்மேடிட்டு கட்டாந்தரையாக காட்சி அளிக்கிறது. மேலும், கொன்றைக்காடு காவிரி கிளை வாய்க்காலில் இருந்து தண்ணீர் வரும், துருசு, ஷட்டர் பராமரிப்பு இன்றி, பழுதடைந்த நிலையில் உள்ளதால் தண்ணீர் வரத்தும் குறைந்து விட்டது. மேலும் வரத்து வாரிகள் தூர்வாரப்படாமல், புல்,புதர் மண்டிக் கிடப்பதாலும், கஜா புயலால் சாய்ந்த தென்னை மரங்கள் விழுந்து கிடப்பதாலும், சிலருடைய ஆக்கிரமிப்பு காரணமாகவும், ஏரிக்கு தண்ணீர் வரும் வழி அடைபட்டு உள்ளது. இதனால் கடல்போல் தண்ணீர் தேங்கிக் கிடந்த ஆத்தாகுளம் ஏரி விளையாட்டு திடல் போல மாறி விட்டது. இதே போல இந்த ஏரி நிறைந்தால், தண்ணீர் வெளியேறி அருகே உள்ள செல்வவிநாயகர்புரம் காட்டாற்றில் சென்று கலக்கும். தற்போது வரத்து வாரியும் அடைபட்டு, தண்ணீர் வெளியேறும் பாதையும் அடைபட்டுக் கிடக்கிறது. இதனால் வெள்ளக்காலங்களில் குடியிருப்புகள் தண்ணீரால் சூழப்படலாம். ஆனால் இதைக் கவனித்து நடவடிக்கை எடுக்கத்தான் யாருமில்லை" என்றனர். புதிதாக நீராதாரத்தை உருவாக்க தயாராக இல்லாமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இருக்கும் நீராதாரத்தையாவது காப்பாற்ற முன்வர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் மனநிலையாக உள்ளது. குடிமராமத்து பணியில் தீவிரமாக கவனம் செலுத்தி வரும் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை ஆத்தாகுளத்தையும் மீட்டெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.