tamilnadu

img

தஞ்சை ஆட்சியரகத்தில் மனு வழங்கச் சென்ற சிஐடியு நிர்வாகிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் கைது

தஞ்சாவூர், மே 21- தஞ்சாவூர் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த வந்த ஆட்டோ ஓட்டுநர்கள், சிஐடியு நிர்வாகிகளை காவல் துறையினர் கைது செய்தனர். பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டு நர்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும், பொது  முடக்க விதிமுறைகளுக்கு உள்பட்டு ஆட்டோவை  இயக்குவதற்கு அனுமதி வழங்கக் கோரியும், ஆட்டோ ஓட்டுநர்கள்  அனைவருக்கும் நிபந்தனையின்றி ரூ. 15,000 நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் ஆட்சியர கம் முன் மனுக் கொடுத்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என அனைத்து ஆட்டோ சங்கக் கூட்டமைப்பினர் முடிவு செய்திருந்தனர். இதன்படி வியாழக்கிழமை ஆட்சியரகம் முன் ஆட்டோ ஓட்டுநர்கள் சுமார் 100 பேர் திரண்டனர்.  அப்போது, அங்கிருந்த காவல் துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுத்தனர். எனவே, ஆட்சி யரிடம் மனு அளித்து விட்டுச் செல்வதாக தொழிற்சங்க நிர்வாகிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் கூறினர்.

இதைத் தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், போராட்டத்துக்குத் தலைமை வகித்த சிஐடியு மாவட்டச் செயலர் சி.ஜெயபால், துணைச் செயலாளர் கே.அன்பு, எல்பிஎப் ஆட்டோ சங்க பொதுச் செயலாளர் எஸ்.முருகானந்தம், சிஐடியு ஆட்டோ சங்க மாநகரச் செயலாளர் சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் சங்கம் ஏ.யோகராஜ், டிடியுசிசி சங்கம் மாவட்டச் செயலா ளர் எம்.கண்ணன், சிஐடியு ஆட்டோ சங்க நிர்வாகிகள் என்.சாமிநாதன், ஆறுமுகம், ஜோசப், முருகன், கண்ணன், கே.லெட்சுமணன் உள்பட 12 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.  

கைது செய்யப்பட்டவர்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், என்.வி.கண்ணன், பி.செந்தில்குமார், கே.அருளரசன், மாநகரச் செயலாளர் என்.குருசாமி, ஏஐடியுசி துரை.மதிவாணன், ஐஎன்டியூசி ஆட்டோ சங்கம் மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், சிஐடியு மாநிலக்குழு உறுப்பி னர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், மாவட்ட நிர்வாகி செங்குட்டுவன், சிஐடியு தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்டப் பொருளாளர் ஏ.ராஜா உள்ளிட்டோர் நேரில் சந்தித்து விபரங்களை கேட்டறிந்தனர். 

சிஐடியு கண்டனம்
இதுகுறித்து சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் கூறுகையில், “அமைதியான முறையில் போராட்டம் நடத்தச் சென்ற ஆட்டோ ஓட்டுநர்கள், தொழிற்சங்க தலைவர்களை, மனிதாபிமானமற்ற முறையில் அத்துமீறி காவல்துறையினர் கைது செய்தது கண்டிக்கத்தக்கது.  60 நாட்களைக் கடந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலை இழந்து, வருமானமின்றி தவித்து வரும் ஆட்டோ ஓட்டுநர்கள், விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆட்டோவை இயக்குவதற்கு அனுமதி கேட்டு, ஆட்சியரை சந்திக்க சென்றபோது, காவல்துறை அதிகாரிகள் அத்துமீறி நடந்துள்ளனர். கைது செய்யப் பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்களை விடுவிக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.