tamilnadu

தஞ்சாவூர், திருவாரூர் , புதுக்கோட்டை, நாகை முக்கிய செய்திகள்

கடைமடைக்குத் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

தஞ்சாவூர், செப்.28- தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியி ருப்பதாவது, "தஞ்சாவூர் மாவட்டத்தில் 2018 ஆம் ஆண்டு பயிர்க்காப்பீடு செய்த விவசாயி களுக்கு, ரூ 270 கோடி வரை இழப்பீடு கிடைக்க முயற்சி செய்த மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண் துறை அதிகாரிகளுக்குத் தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.  தற்போது 2000 க்கும் மேற்பட்ட காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்காமல் விடுபட்டு உள்ளதாகத் தகவல் உள்ளது. எந்த ஆவணங்கள் குறைபாடு காரணமாக நிவாரணம் வழங்கப்படவில்லை என அந்தந்த விவசாயிகளிடம் தெரிவிக்க வேண்டும். அத்துடன் காப்பீடு கிடைக்கவிருக்கிற விவசாயிகளின் பெயர் பட்டியலை, அந்தந்தக் காப்பீடு செய்த இடங்களில் வெளியிட வேண்டும்.  மத்திய அரசால் அறிவிக்க ப்பட்டுள்ள ஆண்டுக்கு ரூ 6 ஆயிரம் விவசாயிகளுக்கு நிதி வழங்கும் திட்டத்தில் முதல்கட்டமாகத் தேர்வு செய்யப்பட்ட, அம்மாபேட்டை வட்டாரம் மெலட்டூர் பிர்காவில் முதல்கட்டமாகத் தேர்வு செய்யப்பட்ட பல விவசாயிகளுக்கு இதுவரை பணம் கிடைக்காமல் உள்ளது. எனவே தகுதியுள்ள விவசாயிகளுக்கு நிதி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  குறுவை சாகுபடி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதை உடனடியாகத் திறக்க வேண்டும்.  திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மீதும், கும்பகோணம் கார்ப்பரேஷன் வங்கி மீதும், விவசாயிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டக் காவல் துறைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடன் தீர்ப்பாயத்தில் சிக்கியுள்ள விவசாயிகளை அதிலிருந்து விடுவிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குச் சட்ட உதவிகளை வழங்க வேண்டும்.  மேலும் குடிமராமத்து பணிகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க ஆவணச் செய்ய வேண்டும். அத்துடன் பாசனதாரர்கள் சங்கம் ஜிஎஸ்டி எண் பெறுவதற்குக் கேட்கப்படும் ஆவணங்கள் நடைமுறை சாத்தியமற்றதாக உள்ளது. எனவே இதில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு வழிகாட்ட வேண்டும். கடைமடைப் பகுதிக்குக் குறிப்பாகப் பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டங்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் சாகுபடி செய்ய முடியாமல் உள்ளது. எனவே விரைந்து பொதுப்பணித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

மின் பொறியாளர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, செப்.28- மின்வாரிய மன்னார்குடி கோட்டத்தி ற்குட்பட்ட பள்ளங்கோயில் பிரிவு அலுவலகத்தைச் சேர்ந்த வி.குமார் என்ற மின் ஊழியர் 12.6.2019 அன்று மின்மாற்றியில் பியூஸ் போடு ம்போது தவறிக் கீழே விழுந்து படுகாய மடைந்தார். அவருக்குத் தேவையான அவசர மருத்துவச் உதவி உள்பட மருத்துவ சிகிச்சைகளைச் செய்து தரப் பள்ளங்கோயில் உதவி மின் உதவி பொறியாளர் எவ்வித  நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தத் தவறுதலுக்காக அவர் மீது எந்தவித நடவடிக்கையும்  மின்வாரிய மேல்நிலை பொறியாளர்கள் எடுக்கவில்லை.  தவிரவும் கடமையின் போது படுகாயமடைந்த ஒரு மின் ஊழியருக்கு மனிதாபிமான முறையிலும், மரபின் வழிமுறையிலும், விதிகளின்படியும் இந்த வசதிகள் செய்து தரப்பட்டனவா என்று கண்காணிக்க வேண்டிய உதவி செயற்பொறியாளர் திருத்துறைப்பூண்டி மன்னார்குடி செயற் பொறியாளர் மற்றும் திருவாரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் உள்ளிட்ட மேனிலை அலுவலர்கள் அலட்சியமாகவும் மெத்தனமாகவும்  மனித நேயமின்றியும் இருந்துள்ளனர். இதனைக் கண்டித்தும் எதிர்காலத்தில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க வலியுறுத்தியும் மின் ஊழியர் மத்திய அமைப்பின்(சிஐடியு) சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. மன்னார்குடி மின்வாரியச் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாடத்திற்கு மின் ஊழியர் மத்திய (சிஐடியு) அமைப்பின் திட்டத் தலைவர் எஸ்.சகாயராஜ் தலைமை வகித்தார். மின்ஊழியர் மத்திய அமைப்பின்(சிஐடியு) திட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினார். சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் ஜி. ரெகுபதி, லிகாய் ஆர். கருணாநிதி, தையல் சங்க மாவட்டத் தலைவர் டி. ஜெகதீசன்,  கோட்டச் செயலாளர் வி. வீரபாண்டியன், ஊரக உள்ளாட்சித்துறை சங்க மாவட்டச் செயலாளர் கே. முனியாண்டி உள்ளிட்டோர் பேசினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி. முருகையன் சிறப்புரையாற்றி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மின்ஊழியர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் போராட்டம்
புதுக்கோட்டை, செப்.28- நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலை வழங்க வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் புதுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமையன்று போராட்டம் நடத்தினர். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இணைந்து நடத்திய இந்தப் போராட்டத்திற்கு விச ஒன்றியத் தலைவர் எம்.வீரப்பன், விதொச ஒன்றியத் தலைவர் ஆர்.பரமேஸ்வரன் ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தை தொடங்கி வைத்து விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராமையன் உரையாற்றினார். விதொச மாநிலப் பொருளாளர் போராட்டத்தை நிறைவுசெய்து உரையாற்றினார். ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் டி.லட்சாதிபதி ஆகியோர் போராட்டத்தை ஆதரித்துப் பேசினர். நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் சுழற்சி முறை இல்லாமல் நூறு நாட்கள் தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும். சட்டப்பூர்வக் கூலி ரூ.229-ஐ முழுமையாக வழங்க வேண்டும். தகுதியுள்ள அனைவருக்கும் புதிய வேலை அட்டை வழங்க வேண்டும். காவிரி, வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் போராட்டத்தில் எழுப்பப்பட்டன.  போராட்ட முடிவில் நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலை கேட்டுப் புதுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன.