tamilnadu

ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்பித் தரக் கோரி போராட்டம்

தஞ்சாவூர், செப்.21- சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் பாசனத்திற்கு தண்ணீர் நிரப்பித் தர வலியுறுத்தி, ஏரி, குளங்களில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில், சேதுபாவாசத்திரம் ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேதுபாவாசத்திரம் விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் வீ.கருப்பையா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி. கண்ணன் பேசினார். அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.வாசு கலந்து கொண்டார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் தமிழன், பொருளாளர் லெனின், துணைத் தலைவர் கொரட்டூர் நீலகண்டன், துணைச் செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், "கடைமடைப் பகுதி விவசாயத்திற்கு, பாசன வாய்க்கால்களில் முறை வைக்காமல் தண்ணீர் விட வேண்டும். சேதுபாவாசத்திரம் ஒன்றியத்திலுள்ள ஏரி, குளங்களில் பாசனத்திற்கு உடனடியாக தண்ணீர் நிரப்பித் தர வேண்டும். ஒரு வார காலத்திற்குள் பொதுப்பணித் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், ஏரி, குளங்களில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்துவது" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.