தஞ்சாவூர்,அக்.29- துறவிக்காடு தமிழன் கல்வி அறக்கட்டளையும், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகமும் இணைந்து கலைமகள் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் ஊர் கூடி மரக்கன்றுகள் நடும் விழிப்புணர்வு விழாவினை நடத்தினர். விழாவிற்கு திருநெல்வேலி சார்-ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்தார். பேராவூரணி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சு.சடையப்பன், கோ.செல்வம் மற்றும் பனங்குளம் வடக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கருப்பையன், சுற்றுச்சூழல் ஆர்வலர் சக்திகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வி அறக்கட்டளையின் பொறுப்பாளர் ஜனார்த்தனன் வரவேற்றார். நிகழ்வில் மலைவேம்பு, புங்கன் உள்ளிட்ட 20 வகையான மரங்கன்றுகள் ஒரே நாளில் 200 இடங்களில் நடப்பட்டு இயற்கை உரமிட்டு மூங்கில் கூண்டு அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன. இயற்கை முறையில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்ட புதிய முறைகளை காண வேளாண்மை கல்லூரி மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் பங்கேற்று பார்வையிட்டார்கள். ஒட்டங்காடு ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் கிராம வளர்ச்சி குழு உறுப்பினர்கள், புனல்வாசல், செருவாவிடுதி போன்ற அருகாமைக் கிராம இயற்கை ஆர்வலர்கள், இளைஞர்கள், ஊரக வேலை உறுதியளிப்பு பணியாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். நீர் மேலாண்மை திட்டத்தின் நோக்கங்கள் பற்றியும் பங்கேற்பாளர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அறக்கட்டளையின் பொறுப்பாளர்கள் ஒன்றிணைந்து கிராமப் பகுதி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தினர். உதவித் தொகையை பெற்றுக் கொண்ட மாணவர்களில் ஒருவரான நாடிமுத்து நன்றி கூறினார்.