தஞ்சாவூர் டிச.19- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி நகரில் காமராஜர் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக தினசரி சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். நூற்றுக்கணக்கானோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு எக்ஸ்-ரே டெக்னீசியன் (ரேடியோ கிராபர்) மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நீண்ட காலமாக காலியாக உள்ளன. இதனால் பட்டுக்கோட்டையில் இருந்து வாரம் ஒருமுறை புதன்கிழமை மட்டும் எக்ஸ்-ரே டெக்னீசியன் வந்து செல்கிறார். இதனால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் காத்து நிற்கும் அவலம் உள்ளது. 65 கி.மீ.யா? 75 கி.மீ.யா? இதுகுறித்து, பேராவூரணியைச் சேர்ந்த எஸ்.எம்.ஏ.சலாம் கூறுகையில், “வாரம் ஒரு நாள் புதன்கிழமை மட்டும் எக்ஸ்-ரே டெக்னீசியன் வருகிறார். அவருக்கு உதவியாளரும் இல்லை. இதனால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் காத்து நிற்கும் நிலை உள்ளது. அவசர காலங்களில் விபத்தில் சிக்கி வருபவர்களுக்கு எக்ஸ்-ரே எடுப்பதற்கு தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டிய நிலை உள்ளது. இல்லை என்றால் 60 கி.மீ தூரத்தில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கோ, 75 கி.மீ தூரம் உள்ள தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கோ செல்லும் நிலை உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த வட்டார மருத்துவமனையில் எக்ஸ்-ரே டெக்னீசியன் இல்லாததால் நோயாளிகள் வலி, வேதனையையும் சகித்துக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. எனவே, உடனடியாக பணியாளர்கள் நியமிக்க வேண்டும். பல் மருத்துவப் பிரிவிலும் டாக்டர் இல்லாத நிலை உள்ளது. துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் சுகாதார சீர்கேடு காணப்படுகிறது. புதிய மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். தலைமை மருத்துவ அலுவலரின் பதில் டெக்னீசியன், பல் மருத்துவர், துப்புரவு பணியாளர்கள் இல்லாதது குறித்து, தலைமை மருத்துவ அலுவலர் காமேஸ்வரியிடம் கேட்ட போது,” மருத்துவமனை தேவை குறித்து உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளோம். அருகில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து டெக்னீசியன் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் குறைகளைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.