tamilnadu

img

தனியார் துறையில் வேலைக்கு சட்டமியற்றக்கோரி மார்ச் 19-ல் மாற்றுத்திறனாளிகள் மறியல்

சென்னை,மார்ச் 13- தனியார் துறையிலும் மாற்றுத்திற னாளிகளுக்கு வேலை வாய்ப்புகளை உறுதிப்படுத்த,  தமிழக அரசு நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் மார்ச் 19 அன்று மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின்  மாநிலத் தலை வர் பா.ஜான்ஸிராணி, பொதுச் செயலாளர் எஸ். நம்புராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக ளுக்கான சங்கத்தின் மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் மார்ச் 13 அன்று சென்னையில் மாநில துணைத்தலைவர் எஸ். சண்முகம் தலைமை யில் நடைபெற்றது.   இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: 

உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். மாற்றுத்திற னாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரமாகவும் கடும் ஊனமுற்றவர்களுக்கு ரூ.5 ஆயிரமாகவும் தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.  2018 அரசாணை 41-ன்படி  40 சதவீதம் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளி களுக்கும் குறிப்பாக 18 வயதுக்கு கீழ் உள்ள, சட்டம் அங்கீகரித்துள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் இன்னும் குறிப்பாக மனநோய் பாதித்தவர்களுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும்.  ஆன்லைன் மூலம் விண்ணப்ப முறையை அனைவரும் பயன்படுத்தும் வகையில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். 

நூறு நாள் வேலையை  125 நாட்களாக உயர்த்துக

அனைத்து சமூகப்பாதுகாப்பு மற்றும் வறுமை ஒழிப்பு  திட்டங்களில் மற்றவர்களை விட மாற்றுத்திறனாளிகளுக்கு 25 சதவீத அளவு கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டு மென்ற ஊனமுற்றோர் உரிமைகள் சட்ட விதிகளின்படி, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள குடும்பங்களுக்கு வேலை நாட்களை குறைந்தபட்சம் 125 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளி களுக்கு 4 மணி நேர வேலைக்கு முழு ஊதியம் என்ற சட்ட விதியை மாநிலம் முழுவதும் முழுமை யாக அமல்படுத்த வேண்டும்.  அனைத்து சமூகப்பாதுகாப்பு திட்டங்களிலும் 25 சதவீத அளவு கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டும்.

தனியார் துறையிலும்  இட ஒதுக்கீடு 

அரசு மற்றும் பொதுத்துறைகளில் சுருங்கி வரும் வேலை வாய்ப்பை கணக்கில்கொண்டு, தனியார் துறையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புகளை உறுதிப்படுத்த,  தமிழக அரசு நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.

நகரப்பேருந்துகளில் சலுகைக்கட்டணம் 

அனைத்து அரசுப் பேருந்துகளிலும் 75 சதவீத கட்டண சலுகை வழங்க வேண்டும் என்ற 2008 ஆம் ஆண்டு அரசாணையின்படி நகரப்பேருந்துகளிலும் சலுகைக் கட்டணத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம்-2016 அங்கீகரித்துள்ள  21 வகையான ஊனமுற்றோ ருக்கும் மத்திய அரசு வழிகாட்டு விதிமுறைக ளின்படி ஊனத்தை பகுப்பாய்வு செய்து சான்றி தழ் வழங்க வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு பகுப்பாய்வு குறித்து முறையான பயிற்சி அளிக்க வேண்டும்.  கோட்டாட்சியர்கள் மாதாந்திர குறை தீர் கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 19 வியாழக்கிழமை மாவட்ட, வட்ட தலை நகர்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பெருந்திரளாக மாற்றுத்திற னாளிகளை திரட்டி மறியல் போராட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.