தஞ்சாவூர், அக்.10- தஞ்சாவூரில் தொல்லியல் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, மாவட்ட சிஐடியு சார்பில், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு தலைமையில், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜூ, மாநிலக்குழு உறுப்பினர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், இன்ஜினியரிங் தொழிலாளர் சங்க மாவட்டத்தலைவர் ராமலிங்கம், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் இ.டி.எஸ்.மூர்த்தி மற்றும் தொல்லியல் துறை பணியாளர்கள் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை அன்று காலை அளித்த கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: ‘தஞ்சை பெரிய கோயில், தாராசுரம், கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய கோயில்களில் தொல்லியல் துறையின் கீழ் பல ஆண்டுகளாக வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு கடந்த எட்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. எட்டு மாத காலமாக தொழிலாளர்கள் ஊதியமின்றி வேலை செய்து வருகின்றனர். இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே எட்டு மாதகால நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பிஎஃப், இஎஸ்ஐ தொகையினை நிர்வாகத்தின் பங்களிப்பு தொகையுடன் சேர்த்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் செலுத்திட வேண்டும். தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.
சிஐடியுவுக்கு தொழிலாளர்கள் நன்றி
இதனைப் பெற்றுக் கொண்ட தொல்லியல் துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் ஊழியர்களுக்கு தலா ரூ 10 ஆயிரம் வீதம், நிலுவைத் தொகையின் ஒரு பகுதி தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள சம்பளத்தையும் தாமதமின்றி வழங்க வேண்டும் என்ற தொழிலாளர்கள், இதற்கு முன் முயற்சி எடுத்த சிஐடியு அமைப்புக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.