tamilnadu

img

ஊராட்சித் தலைவரை சவக்குழி தோண்ட வைப்பதா?

தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

சென்னை,ஜூன் 3- ஊராட்சித் தலைவரை சவக்குழி தோண்ட  வைத்த செயலுக்கு தமிழ்நாடு தீண்டாமை  ஒழிப்பு முன்னணி கண்டனம்தெரிவித்துள்ளது. இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின் மாநில தலைவர் த.செல்லக் கண்ணு, மாநில பொதுச்செயலாளர் கே.சாமு வேல்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் உள்ளது அரியாகுஞ்சூர் ஊராட்சி.  பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊராட்சி அது.நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அரியாகுஞ்சூர் ஊராட்சித் தலைவராக பழங்குடி இருளர் சமூகத்தைச் சார்ந்த முருகேசன் என்பவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் பஞ்சாயத்துராஜ் சட்டப்படி இட ஒதுக்கீட்டுடன்  உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.ஆனால் தேர்வு செய்யப்படு கிற பட்டியலின மற்றும் பழங்குடியின ஊராட்சித் தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. பல இடங்களில் பட்டியலின மற்றும் பழங்குடியின ஊராட்சித் தலைவர்கள் மீது மிகக் கொடூரமான தீண்டாமைக் கொடுமைகள் ஏவிவிடப்படுகின்றன.

ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்படுகிறவர்கள் திருவிழாவிற்கு தப்படிக்க வேண்டும்.ஊர் வேலை செய்ய வேண்டும்.தலைவர் நாற்காலியில் அமரக்கூடாது, தேசியக் கொடி ஏற்றக்கூடாது, கிராமசபைக் கூட்டத்தில் பேசக்கூடாது, இருசக்கர வாகனத்தில் வரக்கூடாது,  பெயர் பலகைகளில் தலைவர் பெயரை சிறிய தாகவும் துணைத் தலைவர் பெயரை பெரியதாகவும் எழுதி வைப்பது, நிர்வாகத்தில் ஒரு துளிகூட பங்குதர மறுப்பது என்பதாக தீண்டாமைக் கொடுமைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இக் கொடுமைகளின் உச்சகட்டமாகவே ஊராட்சித் தலைவரை சவக்குழி தோண்ட  வைத்து வன்கொடுமை நிகழ்த்தப் பட்டுள்ளது. இந்திய நிலப்பரப்பில் இத்தகைய கொடுமை எங்குமே நிகழ்த்தப்பட்டிருக்காது.இக்கொடுமை தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடுமை நிகழ்த்தப்பட்ட கிராமத்திற்கு உடனடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடியாகச் சென்று வன்கொடுமை செய்தவர்கள் கைது   செய்யப்படுவதையும்,அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படு வதையும் உறுதி செய்திட வேண்டும். அரியாகுஞ்சூர் ஊராட்சி நிர்வாகத்தை தமிழக அரசு சட்டப்படி ஜனநாயகப்படுத்த வேண்டும்.   இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.