தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே அரசுக்கு சொந்தமான இடத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருந்தார். இந்த இடத்தை மீட்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை பேராவூரணி காவல்துறை ஆய்வாளர் ராஜேந்திரன் அடாவடி யாக பிடித்து தள்ளி கைது செய்தார். பேராவூரணியை அடுத்த கொரட்டூரில் கர்ணகுமார் என்பவர் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, வீடு கட்டி இருந்ததோடு, சுற்றுச்சுவரும் எழுப்பியிருந்தார். இந்த இடத்தை மீட்க வேண்டும் என வலியுறுத்தி வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பலமுறை புகார் அளிக்கப்பட்டது. வருவாய்த்துறை நில அளவையர் இடத்தை அளந்து அரசுக்கு சொந்தமான இடம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால், திங்கள்கிழமையன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வை.நீலகண்டன், சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ். வேலுச்சாமி தலைமையில் மாவட்டக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் வீ.கருப்பையன் மற்றும் எஸ்.பக்கிரிசாமி, எஸ்.சண்முகம், நடராஜன், எஸ். ரங்கசாமி, ஆர்.சந்திரசேகர், எம்.அன்புசெல்வம், கே. சோமசுந்தரம் உள்ளிட்ட ஏராளமானோர் கொரட்டூர் கடைவீதியில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, சீருடையின்றி அங்கு வந்த பேராவூரணி காவல்துறை ஆய்வாளர் ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை பிடித்து தள்ளியதோடு, தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தார். ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 20 பேரை கைது செய்த காவல்துறையினர் பேராவூரணி காவல் நிலையம் கொண்டு சென்றனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.