tamilnadu

img

பணிகள் முடிந்து ஒரு ஆண்டாகியும் பயன்பாடின்றி கிடக்கும் குடிநீர்த் தொட்டி

தஞ்சாவூர் ஆக.24-  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே பணிகள் முடிந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும் காட்சிப் பொருளாக இருக்கும் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என சி.ஐ.டி.யு மீனவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  இதுகுறித்து சேதுபாவாசத்திரம் மீனவர் சங்க ஒன்றியச் செயலாளர் வி.நாகேந்திரன் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது. சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள மரக்காவலசை ஊராட்சியைச் சேர்ந்த கடற்கரை பகுதியான கழுமங்குடாவில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது.  இதனைப் போக்கும் வகையில் பல்வேறு கோரிக்கை வைத்து 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடும் செய்து தொட்டி அமைக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது. அதே சமயம் கடற்கரை பகுதியில் உப்பு தண்ணீர் தான் கிடைக்கும் என்பதால் குடிநீர் தொட்டிக்கு பம்பிங் மூலம் தண்ணீர் கொண்டு வருவதற்கு ஏதுவாக துறையூர் ஐயனார் கோவில் அருகே ஆழ்குழாய் கிணறும் அமைக்கப்பட்டு விட்டது.  தற்போது கழுமங்குடா பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வாகனங்களில் வரும் குடிநீரை பணம் கொடுத்து வாங்கும் சூழ்நிலை நிலவுகிறது. ஆனால் பணிகள் முடிந்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி காட்சிப் பொருளாகவே உள்ளது. எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வண்ணம் குடிநீர் தொட்டியை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.